பொன்னியின் செல்வனை தள்ளி வைத்த மணிரத்னம் உறுதிப்படுத்திய கார்த்தி
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. அடுத்தகட்டப் படப்பிடிப்பு தள்ளிப்போனதாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான’சுல்தான்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் கார்த்தி – ராஷ்மிகா இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள்.
அப்போது ‘பொன்னியின் செல்வன்’ குறித்த கார்த்தியிடம் கேட்கப்பட்டது.அதற்கு,
எனது அடுத்த படம் மணிரத்னம் சாருடைய ‘பொன்னியின் செல்வன்’தான். இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது. 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை, 2 பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கி வருகிறோம்.1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார் எனப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 70 சதவீதப் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.கொரோனா பிரச்சினையால் படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம். இது மிகப்பெரிய படம். இந்தக் கதையைத் தமிழ்த் திரையுலகம் கடந்த 60 ஆண்டுகளாகப் படமாக்க முயன்று வருகிறது. அது இப்போதுதான் நடைபெறுகிறது.
பொன்னியின் செல்வன்’ அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக இப்போது மத்தியப் பிரதேசத்துக்குப் போயிருக்க வேண்டியது. கொரோனா தொற்றுப் பிரச்சினையால் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. சென்னை அல்லது ஐதராபாத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்.
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வந்துள்ளது.
இதனால் வேலைகளை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டார்கள் என்றும் மணிரத்னம் அலுவலகத்துக்கும் காலவரையறையற்று விடுமுறை விட்டுவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. இத்தகவலை நடிகர் கார்த்தி உறுதிப்படுத்தியிருக்கிறார்.