சாதனைகள் புரிகிறது தமிழர்களால் எடுக்கப்பட்ட இந்திப் படம் – தேசிய விருது நிச்சயம்
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான இந்திப்படம் மிஷன் மங்கள்.
மிஷன் மங்கள் என்பது செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன். இது உலக அளவில் பாராட்டப்பட்ட ஒரு சாதனை. மேலும் அது, அதனுடைய முதல் முயற்சியிலேயே வெற்றியைப் பெற்றது.
அதை அடிப்படையாகக் கொண்டு தயாரான படம்தான் மிஷன் மங்கள்.
அக்ஷய்குமார், வித்யாபாலன், நித்யாமேனன், சோனாக்ஷிசின்ஹா, டாப்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள அந்தப்படத்தை இயக்கியிருப்பவர் ஜெகன்சக்தி.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன். இப்படத்தின் திரைக்கதை ஆக்கத்தில் பங்காற்றியவர் பால்கி.
இவர்கள் மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஜெகன் வேலூர்க்காரர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தஞ்சைக்காரர், பால்கி மதுரைக்காரர்.
35 நாட்களில் 35 கோடி செலவில் தயாரான இந்தப்படம் வெளியான முதல்நாளிலேயே 27 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மங்கள்யானின் உருவாக்கத்திலும் மயில்சாமி அண்ணாதுரை, சுஜாதா உள்ளிட்ட சில தமிழர்கள் பணியாற்றியுள்ளனர்.
படத்திலும் முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் தமிழர்கள்.
இதனால் படத்தில் ஒரு காட்சியில், தம்பி டீ கொடு என்கிறார் அக்ஷய்குமார். அதோடு விண்ணுலகுக்கு போன் செய்து அப்துல்கலாமோடு தமிழில் உரையாடுகிறார்.
ராக்கெட் விடுவது பற்றி எதுவுமே தெரியாத பாமரன் பார்த்தால் கூட அழகாகப் புரியும்படி நல்ல திரைக்கதை. ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும் ஒளிப்பதிவு, அதுவும் ராக்கெட் மேலே கிளம்பும் நேரம் இதயத்துடிப்பை எகிற வைக்கின்றன காட்சிகள்.
அக்ஷய்குமார் வித்யாபாலன் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதல்படம் என்றே தெரியாத வகயில் அவர்களிடம் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.
தமிழர்களால் உருவாக்கப்பட்ட இப்படம் தரத்திலும் வசூலிலும் மேலோங்கியிருப்பது தமிழ்த்திரையுலகினருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
இப்படத்துக்காக இயக்குநர் ஜெகன்சக்திக்கும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கும் தேசியவிருது கொடுக்கலாம்.











