November 5, 2025
விமர்சனம்

மிராய் – திரைப்பட விமர்சனம்

மாயாஜாலக் கதைகளை வரலாற்றுப் பினபுலத்தோடு சொன்னால் அது காவியமாகிவிடும்.அந்த முயற்சியில்
சமகாலம் மற்றும் வரலாற்றுக் காலம் ஆகியனவற்றைக் கதைக்களமாக கொண்டு வெளியாகியிருக்கும் படம் மிராய்.

பேரரசர் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய இரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீயசக்திகள் இந்த 9 புத்தகங்களைக் கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார்.பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்,தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை அடைய முயல்கிறார்.

மிராய் என்கி அதீத சக்தி படைத்த கோள் ஒன்றின் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா களத்தில் இறங்குகிறார்.

அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை விவரிக்கிறது திரைக்கதை.

நாயகன் தேஜா சஜ்ஜா, இதுபோன்ற படங்களில் தொடர்ந்து நடித்து அவர் செய்வதெல்லாம் சாத்தியம்தான்
என்று மக்களை நம்ப வைத்துவிடுகிறார்.தொடக்கத்தில் விவரம் தெரியாதவர் பின்னர் விஸ்வரூபமெடுத்து இரசிகர்களை ஈர்க்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு, அதற்கேற்ற உடல்மொழி அளவான நடிப்பு ஆகியனவற்றின் மூலம் கதாநாயகனுக்கு இணையாக கவனிக்கப்படுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக், நாயகனின் இளம் வயது தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு ஆகியோர் இருப்பு படத்துக்குப் பலம்.

இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையால் படத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.

கதையை பல்வேறு வகையில் மேம்படுத்தும் காட்சிகள் தேவை என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார்
ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி.

எழுத்தில் இருக்கும் பிரமாண்டங்களை காட்சியில் கொண்டு வந்து வியக்க வைத்திருக்கிறார்
கலை இயக்குநர் ஸ்ரீ நாகேந்திர தங்கலா.

கதையாசிரியர்கள் கார்த்திக் கட்டம்னேனி மற்றும் மணிபாபு கர்ணம் கடவுள் இராமரையும், அவர் கையில் இருக்கும் வில்லையும் மையமாக்க் கொண்டு ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.

மனிபாபு கர்ணத்தின் வசனங்கள் நன்று.

படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் கட்டம்னேனி, ஆன்மீகத்தை பின்னணியாக வைத்துக்கொண்டு திரையில் ஒரு பெரும் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்.

மிராய் – மிரட்சி

– இளையவன்

Related Posts