கட்டில் – திரைப்பட விமர்சனம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்பது பவணந்தியாரின் நன்னூல் பாடல்.12 ஆம் நூற்றாண்டில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.அதேநேரம் பழங்காலச் சின்னங்களைப் பாதுகாத்து முன்னோர் வாழ்வியலை தலைமுறைகள் அறியவேண்டும் என்போரும் உண்டு.
இரண்டாம்வகையினர் மனநிலையைப் பிரதிபலிக்கும் படம் கட்டில். படத்தின் தலைப்பில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் போராடுகிறார் என்பது ஒருவரிக்கதை. அதற்குள் ஒரு பெருவாழ்வைக் கொண்டிருப்பது திரைக்கதை.
பூர்வீகவீட்டை விற்க நினைக்கிறார்கள் வெளிநாட்டில் தங்கிவிட்ட கதாநாயகனின் சகோதரனும் சகோதரியும். கதாநாயகனுக்கும் அவருடைய அம்மாவுக்கும் அதில் உடன்பாடில்லை எனினும் வேறுவழியின்றி சம்மதிக்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் பழங்காலக் கட்டிலைக் கொடுக்க நாயகனுக்கு மனமில்லை.அதைக் காப்பாற்றுவதிலும் பெரிய கனமான கட்டில் என்பதால் அதை இடம்மாற்றுவதிலும் சிக்கல்கள். இவற்றின் விளைவுகள்தாம் படம்.
நாயகன் கணேஷ்பாபு இரசித்து நடித்திருக்கிறார். அவர் சிரிக்கும் காட்சிகளைவிட சோகக்காட்சிகள் அதிகம். இரண்டு விதங்கள் மூன்று தோற்றங்கள் ஆகிய எல்லாவற்றிலும் நிறைநடிப்பு.
கன்னக்குழியழகி சிருஷ்டிடாங்கேவுக்கும் கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து நன்றாக நடித்து தனக்கும் படத்துக்கும் பலமாக இருக்கிறார்.
மூத்தோர்களின் பிரதிநிதியாக இருக்கிறார் கீதாகைலாசம். அவருடைய பாத்திரப்படைப்பு இளையோரைச் சிந்திக்க வைக்கும்.
சிறுவன் நித்தீஷ் கட்டில்மேல் கால்மேல்கால்போட்டு உறங்கும் காட்சி. ஓட்டுமொத்தப்படத்தின் சாறு.
செம்மலர் அன்னம் கவனம் ஈர்க்கிறார்.
வைட் ஆங்கிள் இரவிஷங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு, கதையின் கனத்தையும் வெளிப்படுத்துகின்றன.
ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை தாழ்வில்லை.
பீ.லெனின் படத்தை இலகுவாக்க முயன்றிருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் கணேஷ்பாபு எழுதி இயக்கியிருக்கிறார்.அறிவுப்பூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் சிந்தித்தால் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடக் கூடிய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதையை உயிரோட்டத்துடன் கொடுக்க முன்வந்திருக்கிறார்.
– இளையவன்