காப்பான் பட வியாபாரம் முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பதேன்?
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஆனால் இன்னும் அப்படத்தின் வியாபாரம் முழுமையாக முடிவடையவில்லை. சூர்யா நடிக்கும் படங்கள் வேகமாக விற்பனையாகிவிடும். இப்படம் தாமதமாவது எதனால்?
படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதுதான் காரணம் என்கிறார்கள்.
அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ரஜினியின் 2.ஓ படத்தின் நட்டம் இப்பட வியாபாரத்தைப் பாதிக்கிறதாம்.
அண்மையில், ரஜினிகாந்த் நடித்த 2.ஓ படத்தை கேரளாவில் விநியோகம் செய்த டோமிசன் முளகுபாடம் என்பவர் ‘காப்பான்’ படத்துக்கு எதிராக கேரள விநியோகஸ்தர் சங்கத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “கேரளாவில் 2.0 படத்தை திரையிட்டதில் தனக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதை ஈடுகட்ட காப்பான் படத்தின் கேரள விநியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்கு தரவேண்டும். ஆனால் வேறு ஒருவருக்கு அந்த உரிமையை கொடுத்துள்ளனர்” என்று கூறியிருந்தார்.
அதுபோலவே தமிழகத்திலும் பல விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனராம்.
எல்லோருமே விலை குறைவாகக் கேட்பதால், தயாரிப்பு நிறுவனம் சார்பில்,2.ஓ வில் உங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை நாங்கள் கொடுத்துவிடுகிறோம். அதற்காக காப்பான் படத்தைக் குறைந்த விலைக்குத் தரமாட்டோம். வேண்டுமானால்; காப்பான் படத்துக்கு என்ன விலையோ? அதைத் தருவதாக இருந்தால் உங்களுக்கே தருகிறோம் என்று சொல்கிறார்களாம்.
விநியோகஸ்தர்களோ, ஒரு பகுதியில் அதிகபட்சம் ஐந்து கோடிக்கு இந்தப்படம் போகும் என்றால் இவர்கள் வேண்டுமென்றே ஆறு ஏழு என்று சொல்கிறார்கள். அவ்வளவு விலை கொடுத்து வாங்கினால் வாங்கும்போதே நட்டமாகிவிடும் என்கிறார்கள்.
இந்தச் சிக்கல் முடிவின்றித் தொடர்வதால் இன்றுவரை அப்படத்தின் வியாபாரம் இறுதியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம் எல்லாச் சிக்கல்களும் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன, இன்னும் ஓரிரு நாட்களில் எல்லா விவரங்களும் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் சொல்லப்படுகிறது.











