துருவ் விக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துருவ் விக்ரம் படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் தாமதம் செய்கிறார்.
மகான் படம் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மே 6, 2024 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு…
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தமிழ் திரையுலகில் பல புதிய திரைப்படங்களை வழங்கவுள்ளன. இந்நிலையில் தற்போது தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இளம் நட்சத்திர நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில், முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது.
பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாகக் கொண்டுவருகிறது.
இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்கிறார்,படத்தொகுப்பு சக்திகுமார், கலை இயக்கம் மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன்,சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணியாற்றுகின்றனர்.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும், “பைசன் காளமாடன்”, அற்புதமான படைப்பாளியான மாரி செல்வராஜின் இயக்கத்தில், மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக, மிக உன்னதமான அனுபவத்தை வழங்கவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











