சுந்தர்.சியை நம்பினேன் நல்ல இலாபம் கிடைத்தது – ஏ.சி.சண்முகம் வெளிப்படை
இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள காபி வித் காதல் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈ.கிருஷ்ணசாமி,படத்தொகுப்பு ஃபென்னி ஆலிவர்,கலை குருராஜ்.பி,
நடனம் ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி,தீனா ஆகியோர். சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ்.
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
தமிழகமெங்கும் இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
அக்டோபர் 7 ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில், படக்குழுவினருடன் புதிய நீதிக்கட்சித் தலைவரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளருமான ஏ,சி.சண்முகம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, இயக்குநர் பேரரசு, கவிஞர் சினேகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது……
நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். படம் பார்க்கும் இரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். உள்ளத்தை அள்ளித்தா படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது. இந்த முறை காபி வித் காதலில் படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.
ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலாத் தளம் என்றால் எனக்கு மட்டும் அது வேலை பார்க்கும் இடம் என்பது போல மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயகர்களில் தீயா வேலை செய்யணும் குமாரு என்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவைச் சொல்லலாம்.
இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தா தான். இந்தப் படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியைப் படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவைப் பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவைப் பொருத்தவரை நம்மை விட இன்னொரு நடிகைக்கு அதிகக் காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்.
அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும் அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மா தான். டேமேஜ் ஹீரோயின் என்று கூடச் சொல்லலாம் அவர் ஒரு நாள் இருந்தாலும் கூட அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். இந்தப் படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்தக் குழந்தை நட்சத்திரம் தான் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம். நானும் யோகிபாபுவும் பேசிக்கொள்ளும்போது கூட அந்தக் குழந்தையின் அப்பா அம்மா நமக்காகவே பெற்றுவிட்டு இருக்காங்களோ என்று பேசிக்கொள்வோம்.
படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டிடி. அந்தக் கதாபாத்திரத்தை எழுதும்போது டிடியைத் தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை. காலில் அடிபட்டு இருந்த நிலையிலும் கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்.
இவ்வாறு சுந்தர்.சி பேசினார்.
விஜய் டிவி புகழ் டிடி பேசும்போது…..,
ஜீவாவும் நானும் இந்தப் படத்தில் ட்வின்ஸ் போல நடித்துள்ளோம். ஜெய் வந்து எனக்குத் தம்பி மாதிரி. படப்பிடிப்பில் அவரை மிட்டாய் மாமா என்று தான் கூப்பிடுவோம். நிஜத்தில் சுந்தர் சி சார் எப்படி எல்லாருடைய குறை நிறைகளைக் கேட்டு அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்வாரோ அதேபோல தான் இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரமும். இந்தக் கதாபாத்திரத்தில் நான் சரியாக இருப்பேன் என அவர் நம்பியது என்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறினார்.
இயக்குநர் சுந்தர்.சியுடன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நண்பராகப் பயணித்து வரும் நடிகர் விச்சு என்கிற விஸ்வநாதன் பேசும்போது…..,
இதுவரை 170 படங்களில் நான் நடித்துள்ளேன். அதில் சுந்தர் சியுடன் இணைந்து பணியாற்றும் 35 ஆவது படம் இது என்றார்.
நடிகை ரைசா வில்சன் பேசும்போது…..,
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் யாராவது ஒருவர் காமெடி செய்து கொண்டே இருப்பார்கள். படப்பிடிப்பில் நடிக்கும்போது கூட சிரிக்காமல் நடிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது என்றார்.
நடிகர் ஜீவா பேசும்போது…..,
சுந்தர் சி சார் படத்தில் நடிக்கும்போது முதல் நாளே நமது டென்சனை குறைத்து விடுவார். எப்படியிருந்தாலும் 45 நாட்களுக்குள் படத்தை முடித்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்துச் செயல்படுவார். அவரது படப்பிடிப்பிற்குச் சென்று திரும்பும்போது 100% சந்தோசத்துடன் திரும்புவோம். எல்லோரும் அழகாக ஒன்றிணைந்து நடித்தாலும் எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டி இருந்து கொண்டுதான் இருந்தது. எனக்கு நிஜத்தில் சகோதரி இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல நினைத்துக்கொண்டு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். ஆனாலும் அதைச் சரியாகச் செய்துள்ளேன் என்றார்.
பிக்பாஸ் சம்யுக்தா பேசும்போது……,
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தேன் என்று சொல்லும் போது என்ன உணர்வு ஏற்படுமோ சுந்தர் சி சார் படத்தில் நடித்து விட்டேன் என்று கூறும் போது அதுபோன்ற ஒரு உணர்வையே தருகிறது.
இந்தப் படத்தில் உனக்கு மேக்கப்பும் இல்லை. கிளாமரும் இல்லை என்று சொல்லி குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்து விட்டார் சுந்தர்.சி என்றார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசும்போது……,
நாலு வருசமாக சரியான படம் அமையாமல் இருந்தேன். இந்தப் படத்தின் கதையை சுந்தர்.சி கூறியதுமே உடனே ஒப்புக்கொண்டு எப்போது நடிக்கக் கிளம்ப வேண்டும் எனக் கேட்டேன். நாளை படப்பிடிப்பு என்றால், முதல் நாள் இரவு எனக்கு தூக்கமே வராது. ஏனென்றால் படப்பிடிப்பு அவ்வளவு ஜாலியாக இருக்கும் என்றார்.
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பேசும்போது……
இந்தப் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள் இருக்கின்றன. பாடல்கள் அனைத்துமே கதையை நகர்த்தும் விதமாகத்தான் இருக்கும். முக்கியமான ஒரு சூழ்நிலையில் கூட சோகமாக இல்லாமல் எனர்ஜி தரும் விதமாக மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பாடலை உருவாக்கி உள்ளோம். ஆனால் சில நேரங்களில் தாமதமானாலும் கூட சுந்தர் சி முகம் சுளிக்காமல் என்னை வசதியாகப் பணியாற்ற வைத்தார் என்று கூறினார்.
இந்தப் படத்தில் தியாகி பாய்ஸ் என்கிற பாடலை எழுதியுள்ள இயக்குநர் பேரரசு பேசும்போது,…..
யுவன் சங்கர் ராஜா இசையில் இதற்கு முன்னால் வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி என்கிற பாடலை எழுதி இருந்தேன். இதில் தியாகி பாய்ஸ் என்கிற பாடலை எழுதியுள்ளேன். இயக்குநர் சுந்தர்சி என்றாலே ‘கலர்ஃபுல் வித் கலகலப்பு’ என்று சொல்லலாம். பாலசந்தர் எப்படி ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான படங்களை எடுத்து பின்பு ஸ்டைலிஷான படங்களாக எடுக்க ஆரம்பித்தாரோ, அதேபோல காலத்திற்கு ஏற்றார் போல் சுந்தர்.சி தன்னை பக்கா யூத்தாக மாற்றிக்கொண்டு வருகிறார் என்றார்.
இந்தப் படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ள கவிஞர் சினேகன் பேசும்போது…..,
இதுவரை கிட்டத்தட்ட 3000 பாடல்கள் வரை எழுதி உள்ளேன். ஆனால் ஒரு சில இயக்குநர்களின் படங்களில் பணியாற்றவில்லையே என்கிற ஏக்கம் இருந்து வந்தது. அதில் சுந்தர்.சியும் ஒருவர். அந்த வகையில் இந்தப் படத்தில் ஒரு பாடல் எனக்கு எழுத வாய்ப்பு தேடி வந்தது, ஆனால் அந்த சமயத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மறுநாள் காலை நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டிய இக்கட்டான சூழலில் தான் முதல்நாள் இரவு யுவன் சங்கர் ராஜா நாளை ஒரு பாடல் நீங்கள் எழுதவேண்டும் நேரில் சந்திப்போம் என்றார்.
அவரிடம் நிலைமையைச் சொல்லி இந்தப் படத்தில் நான் எப்படியும் பாட்டு எழுத வேண்டும் என்று கூறி, இரவு பதினொரு மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் அந்தப் பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுத் தான், மறுநாள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குப் போனேன். இயக்குநருடன் இல்லாமலேயே நான் முதன்முதலில் எழுதிய பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்றார்.
இந்தப்படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு பேசும்போது……
நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க எனது கணவர் சுந்தர்.சி தான் காரணம். ஒரு தயாரிப்பாளராகச் சொல்கிறேன், அவரை நம்பி தாராளமாகக் காசு போடலாம். தயாரிப்பாளர்கள் நிம்மதியாகப் போய்த் தூங்கலாம். இந்தப் படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள் கூட என்னை படப்பிடிப்பிற்கு வா என சுந்தர்.சி அழைத்ததே இல்லை. என்னுடைய திருமணநாள் வருகிறதே என்று நானாக அவரிடம் போன் செய்து கேட்டபின் மூன்று நாட்கள் ஊட்டிக்குச் சென்று படக்குழுவினருடன் தங்கியிருந்தேன்.
இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது. இந்தப் படத்தில் நான் நடித்த ரம்பம்பம் பாடலைப் பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள் இந்தப் பாடலைப் படமாக்கப் போகிறோம் என்று கூறினார் சுந்தர்சி. மற்றவர்கள் இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவங்க ஆடி ஏற்கனவே அந்தப் பாடலை எல்லாம் பாத்துட்டாங்கல்ல என்று சமாளித்தார் என தனது கணவர் சுந்தர்.சி பற்றி ஜாலியாக புகார் பத்திரம் வாசித்தார் குஷ்பு.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசும்போது……,
நானும் சுந்தர் சியும் ரிஷி பட சமயத்தில் முதன்முதலாக விமானத்தில் தான் சந்தித்தோம். அப்போது இருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. அரண்மனை-3 படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல இலாபம் கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக காபி வித் காதல் படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப்பெரிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் ரம்பம்பம் பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.
இந்த இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள 200 ஒரு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும் விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டு வழங்க இருக்கிறேன். சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சை வரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.
அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குநர் சுந்தர்.சி யின் பன்முகத்தன்மை கொண்ட உழைப்பையும் பணியையும் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறோம்
இவ்வாறு அவர் பேசினார்.











