அட்லீ மீது துணைநடிகை புகார் விஜய் கோபம்
மெர்சல், தெறி ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.அப்படம் தளபதி 63 என்று அழைக்கப்படுகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். மற்றும், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தில் பணிபுரியும் துணை நடிகை கிருஷ்ணாதேவி அட்லீ மற்றும் உதவி இயக்குநர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்தப்புகார் மனுவில்,
ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னைத்தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள்.
எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது படம் குறித்து இதுபோன்ற சர்ச்சைகள் வருவதை விஜய் எப்போதும் விரும்பமாட்டார் என்பதால் ஒட்டுமொத்த படக்குழுவும் பதட்டமாக இருக்கிறதாம்.











