விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம் எப்படி இருக்கும்? – சேரன் வெளிப்படை
ஊரடங்குக் காலம் என்பதால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுகிற பழைய படங்கள் குறித்தான விமர்சனங்கள், விவாதங்கள் பாராட்டுகள் ஆகியன சமூகவலைதளங்களில் பரவுகின்றன.
விஜய், அஜீத், சூர்யா ஆகியோரது பழைய படங்கள் ஒளிபரப்பானால் அதைப் பற்றிப் பேசி பெரிய செய்தியாக்கிவிடுகின்றனர் அவர்களுடைய ரசிகர்கள்.
இந்நிலையில் நேற்று ஜெயாப்ளஸ் தொலைக்காட்சியில், சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண் சரண்யா உள்ளிட்டோர் நடித்த தவமாய் தவமிருந்து ஒளிபரப்பானது.
அதைப்பார்த்துவிட்டு ஏராளமானோர் இயக்குநர் சேரனைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். அவை ஒவ்வொன்றுக்கும் சேரனும் பதிலளித்து வந்தார்.
அவற்றில்,
மனிதனின் சராசரி ஆயுட்காலம் 56 ஆண்டுகள்.ஆனால் வாழும் நேரங்கள் என்னவோ மிக குறைவுதான். அந்த மணிதுளிகளை மனது பத்திரமாக சேகரித்து கொள்ளும்.அப்படியான நேரங்கள் ஏதேனும் ஒன்றில், “தவமாய் தவமிருந்து” படம் உள்ளுறைந்திருக்கும்.அத்தகைய ஆற்றல் கொண்டது அந்த ஆக்கம்.
நன்றி சார்.
என்று ஒரு பெண் பதிவிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் பதிவிட்டிருப்பதாவது, தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்.
இவ்வாறு சேரன் பதிவிட்டிருக்கிறார்.











