விஜய்சேதுபதி படத்துக்கு இரண்டு அமெரிக்க விருதுகள்
ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜூ விஸ்வநாத் அடுத்ததாக புதுமுகங்களை வைத்து சென்னை பழனி மார்ஸ் என்ற படமொன்றை உருவாக்கி இருக்கிறார்.
பிஜூ இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பதுடன், ஒளிப்பதிவு, படத்தொகுப்பையும் கவனித்திருக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.
ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ் & விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள சென்னை பழனி மார்ஸ் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது.
வெளிவரும் முன்பே சென்னை பழனி மார்ஸ் இரண்டு இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்துள்ளது.
பின்னாக்கிள் ஃபிலிம் அவார்ட்ஸ் விழாவில் பெஸ்ட் நேரேட்டிவ் பிளாட்டினம் அவார்டையும், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற விழாவில் பெஸ்ட் டிராமா கிராண்ட் ஜூரி கோல்ட் அவார்டையும் பெற்றுள்ளது. இரு விருதுகளுமே அமெரிக்க விருதுகளாகும்.
26 ஆம் தேதி படம் வெளியாகும் இந்நேரத்தில் விருதுகளின் அறிவிப்பால் மனம் குளிர்ந்துள்ளது படக்குழு.
படத்தில் பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன.
பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியிருக்கிறார்.நிரஞ்சன் பாபு இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்..











