செய்திக் குறிப்புகள்

சாதி அரசியலைச் சாடும் சூர்யா – கோடையின் சூடு எகிறும்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.

மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாகப் பேச உள்ளது உறியடி2.

சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், உறியடி2 எடுப்பதற்கான காரணம் என்ன? என்பதற்கு அழகான பதிலைச் சொல்லி இருக்கிறார்.

“இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி2 வருவதற்கான காரணம்” என்கிறார்.

மேலும் அவர் படம் பற்றிக் கூறும்போது,

“எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்பப் பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்மா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா.

‘Of all the arts, for us cinema is the most important’னு லெனின் சொல்லியிருக்கார்.

‘கலைகளில் சினிமா தான் பெருசு’ன்னு ஒரு கலைஞன் சொல்லியிருந்தா, அது தற்பெருமைன்னு சொல்லலாம். ஆனா இதைச் சொன்னவர் மாபெரும் புரட்சியாளர்.

சரி தவறைத் தாண்டி, எனக்கு எது சரியோ அதை நான் சினிமா மூலமா பண்ண நினைக்கிறேன். அதே சமயம் எனக்குள்ளே இருக்கிற படைப்பாளியைத் திருப்திப் படுத்தணும் என்றார்.

சூர்யா தயாரிப்பாளாராக வந்ததைப் பற்றிச் சொல்லும் விஜய்குமார்,

“2டி ராஜசேகர் சாரை ஒருநாள் சந்திச்சேன். அப்போ உறியடி 2 கதையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவருக்கு அது பிடிச்சிருந்தது. உடனடியா முழுக்கதையையும் கேட்டார். கதையின் முதல் வெர்ஷனைச் சொன்னேன்.

அப்புறம் சூர்யா சாரைப் பார்த்தேன். அப்போ கதையை வலுப்படுத்தி அடுத்த வெர்ஷனைச் சொன்னேன். ஒருசில கேள்விகள் கேட்டார். அதன்பின் ” எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, கண்டிப்பா படம் பண்ணலாம்”னு சொன்னதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது.

காரணம் உறியடி பட ரிலீஸ்ல ஏகப்பட்ட பிரச்சனைகள். பொருளாதார இழப்பை விட மனவலி அதிகமா இருந்தது. “உறியடி2″ படத்துக்கு இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் கிடைச்சது நிம்மதியா இருக்கு.

சூர்யா சாரும் ஒரு படைப்பாளிக்கு என்ன சுதந்திரம் கொடுக்கணுமோ, அதை எனக்குக் கொடுத்தார். ஷுட்டிங் முடியுற வரைக்கும் எந்தவிதமான பிரஷரும் இல்லாம முடிச்சிட்டோம். படம் சம்மர் ரிலீஸ்” என்றார் உற்சாகமாக.

சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சாதி அரசியலையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்டு அதற்கானத் தீர்வைச் சொல்லும் படமாக உறியடி2 வந்துள்ளது.

இந்தப்படம் முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் நடித்திருக்கிறார்கள். கூடவே யூட்யூப் மூலம் பலருக்கும் பரிச்சயமான மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகர் நடித்திருக்கிறார்.

உறியடியில் பணிபுரிந்த டெக்னிக்கல் டீம் அனைவரும் இதிலும் ஒன்றிணைந்துள்ளார்கள்.இப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

சாதி அரசியலைச் சாடுகிற படத்தை சூர்யா வெளியிடும்போது அதன் சூடு பலமடங்கு அதிகரிக்கும் என்பதில் மாற்றமில்லை.

Related Posts