சிம்பு தனுஷ் விவகாரத்தால் விஷாலுக்கு பின்னடைவு
விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு பெரிய வேலைநிறுத்தம் நடந்தது.
அதன்விளைவாக திரைப்படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் ஒப்புதல் பெற்ற பின்பே படங்களை வெளியிட வேண்டும் என்று சொன்னார்கள்.
அதன்படி பலர் நடந்துகொள்ளவில்லை. விஷால் தலைமையிலான அமைப்பு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
டிசம்பர் 21 ஆம் தேதி தனுஷின் மாரி2 படத்தை வெளியிடுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நெறிமுறைக்குழு செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவ்விசயம் தொடர்பாகவும், சிம்பு மேல் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரின் மேல் விஷால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பற்றிப் பேசுவதற்காகவும் திரையுலக முக்கியஸ்தரகள் அடங்கிய கூட்டம் நேற்று நடந்தது.
அதில் பல்வேறு விசயங்கள் பேசப்பட்டனவாம்.சில முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்கின்றனவாம்.
அவற்றில் முக்கியமானது, இனிமேல் படங்களின் வெளியீட்டுத் தேதியை ஒழுங்கு செய்யும் குழு செயல்படாது, அவரவர் விருப்பம் போல் படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.
சிம்பு விசயத்தையும் இனி திரைப்பட முக்கியஸதர்கள் அடங்கிய கூட்டுக்குழு கையாளும் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.
ஆக சிம்பு தனுஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட விசயங்களால் விஷாலுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.











