கோல்டு கால் – திரைப்பட விமர்சனம்
விற்பனை பிரதிநிதிகள் எனும் வகையைச் சேர்ந்தவ்ர்களை படங்களில் ஓரிரு காட்சிகளில் பார்த்திருப்போம்.அவர்கள் வருவதும் தெரியாது,போவதும் தெரியாது.ஆனால்,அவர்களை கதைநாயகர்களாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் கோல்டு கால்.
தமிழகம்,கர்நாடகம்,ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சித்து மூலிமணி,சந்தோஷ்,ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு பேரும் பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் விற்பனையாளர் பணியில் சேருகிறார்கள்.
நான்கு பேரும் நண்பர்களுமாகிறார்கள்.அவர்களுடைய பணி கடினமானது என்றாலும்,நான்கு பேரும் அதை மகிழ்ச்சியாகவே செய்கிறார்கள்.இருப்பினும் அவர்களது நிறுவனம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்காததால் உயரதிகாரியின் கோபத்திற்கும்ஆளாகிறார்கள்.
இந்நிலையில்,தொழிலதிபர் ஒருவரது மகன் கடத்தப்படுகிறார்.அந்தக் கடத்தல் குற்றத்தின் பின்னணியில் நான்கு நண்பர்கள் இருப்பதாக காவல்துறை அறிவிக்கிறது.இதனால் ஒட்டுமொத்த காவல்துறையும் இந்த நான்கு பேரையும் தேடுகிறது.எதிர்பாரா சிக்கலில் சிக்கிக்கொண்ட அவர்கள்,அதிலிருந்து மீள வேண்டுமெனில் கடத்தப்பட்ட சிறுவனை நாமே கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறது படம்.
கதைப்படி நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றிருப்பதால் நாயகர்களையும் மாநிலத்திற்கொருவராகத் தேர்வு செய்திருக்கிறார்கள்.அவர்களும் கதையின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.தொடக்கத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்றிருப்பவர்கள்,கடத்தல் கண்டுபிடிப்பு என்று வரும்போது அதற்கேற்ப அப்படியே மாறியிருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கது.
நான்கு நாயகர்கள் இருக்கிறார்கள் என்பதால்,நாயகிகளாகவும் நான்குபேர் நடித்திருக்கிறார்கள்.அமிதா ரங்கநாதா,நிஷா ஹெக்டே, மேலி லிட்டி,கீர்த்தனா புல்கி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அவர்களும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.நான்கு பேரைப் பின்தொடர்ந்து அவருடைய கருவியும் பயணப்பட்டிருக்கிறது.அதனால் பார்வையாளர்களும் அதைப் பிந்தொடரும் அனுபவம் பெறுகிறார்கள்.
பிரணவ் கிரிதரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைப்போக்கிற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.அதுபோன்ற உணர்வுகளைக் கொண்டிருக்கிறது.பின்னணி இசை எங்கும் துருத்திக் கொண்டு நிற்காமல் காட்சிகளோடு இசைந்திருக்கிறது.
படத்தைத் தொகுத்திருக்கும் சுரேஷ் ஆறுமுகம்,படம் தொய்வடையாமல் பார்த்துக்கொள்ள விழைந்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை,வெறுமனே,நான்கு நண்பர்கள் வாழ்வில் எதிர்பாரா சிக்கல் என்று சொல்லாமல் விற்பனைப் பிரதிநிதிகள் வாழ்வில் என்று வைத்திருப்பதற்குக் காரணம் திரைக்கதையில் இருக்கிறது.அந்தக் காரணமே, மற்ற படங்களில் இருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டப் பயன்பட்டிருக்கிறது.
– இளையவன்













