தரமான சம்பவம் காத்திருக்கு – நடிகர் நானி உறுதி
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி,ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார்.ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இஷான் சக்சேனா படத்தின் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
இந்தப்படத்தை தமிழகம் முழுவதும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்தப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில்,செப்டம்பர் 17 அன்று, சென்னையில் உள்ள நட்சத்திரவிடுதியில் பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது.
இதில் படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா- படத்தின் நாயகன் நடிகர் நானி – திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.சென்னையில் உள்ள நானியின் இரசிகர்களுக்காக ‘தி பாரடைஸ்’ படத்திற்கான பிரத்யேக காட்சிக்குரிய முதல் டிக்கெட்டை நானி அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் ‘திங்க் ஸ்டுடியோஸ்’ ஸ்வரூப் ரெட்டி பேசுகையில்….
நவராத்திரி திருவிழாவின்போது நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வெளியாகிறது.நானி நடித்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.நாங்கள் நானி படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்.இந்தப்படத்திற்கும் இரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் வோடேலா பேசுகையில்….
எனக்கு தமிழ் தெரியாது.அடுத்த படத்தில் தமிழைக் கற்றுக்கொண்டு பேசுகிறேன்.இந்தத் திரைப்படம் தாயைப் பற்றியும்,புரட்சியைப் பற்றியும் பேசும் திரைப்படம்.இந்த வகையிலான திரைப்படம் இரசிகர்களுடன் அதிகமாக எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறோம் என்றார்.
நடிகர் நானி பேசுகையில்….
தி பாரடைஸ் திரைப்படம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.நான் நல்ல நடிகரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒரு விசயம் மட்டும் தெரியும்.நான் உங்களைப் போன்ற ஒரு நல்லதொரு பார்வையாளன்.
ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.ஆனால் அது போன்ற திரைப்படங்கள் வெளியாவது குறைவு.அப்படி ஒரு பிரம்மாண்டமான மாஸான திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து இரசிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கிறேன்.அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் திரைப்படம்தான் ‘தி பாரடைஸ்’.
ஒவ்வொரு இரசிகருக்கும்,பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை.இந்தப்படம் அப்படிப்பட்டதொரு திரைப்படம்.இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.இதனை நீங்கள் 24 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து, இந்தப்படத்தைப் பார்த்த பிறகு சொல்வீர்கள்.
இந்தப்படத்தில் அழுத்தமான எமோஷன்களை பற்றி பேசியிருக்கிறோம்.அதே தருணத்தில் திரையரங்குகளில் பார்த்து இரசிக்கும் அற்புதமான அனுபவங்களையும் வழங்கியிருக்கிறோம்.
தமிழ்த் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி.என்னுடைய சினிமா அறிவிற்கும்,என்னுடைய சினிமா மீதான ஆர்வத்திற்கும் என்னுடைய சினிமா மீதான காதலுக்கும்,சினிமா மீது பிரியம் வந்ததற்கும்,தமிழ்சினிமாவில் உள்ள கலைஞர்கள்தான் இன்ஸ்பிரேசன். அதிலும் கமல்ஹாசன்- மணிரத்னம்- பாக்கியராஜ்- பாரதிராஜா- எனப் பல சாதனையாளர்களைக் குறிப்பிடலாம்.
நான் ஒவ்வொருமுறையும் சென்னைக்கு வருகைதரும் போதெல்லாம் என்னுடைய திரைக்குடும்பத்திற்கு வந்தது போன்று உணர்வு எழும்.எனக்கும்,கடந்த காலத்தில் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு.என் மீது தமிழ் இரசிகர்கள் மட்டும் அன்பும் அதிகம்.அதனை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.
நான் என்னுடைய படத்திற்கு தமிழில் பின்னணிக் குரலில் பேசுவதற்கு தமிழ் இரசிகர்கள் மீதான பேரன்புதான் காரணம்.
என்னுடைய திரையுலகப் பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் ‘தி பாரடைஸ்’.என்னுடைய திரையுலகப் பயணத்தில் நான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படமும் இதுதான்.
நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது.
அடுத்தமுறை நான் என்னுடைய படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னைக்கு வரும்போது,இரசிகர்கள் அனைவரும் என்னை ‘தி பாரடைஸ்’ படத்தில் நடித்திருக்கும் ‘ஜடல்’ என்ற கேரக்டர் பெயரைச் சொல்லித்தான் அழைப்பீர்கள்
இவ்வாறு அவர் பேசினார்.













