கருப்பசாமி பாடல் என் உதவியாளர் சொன்ன யோசனை – சூர்யா வெளிப்படை
மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கருப்பு. சூர்யா,இந்திரன்ஸ்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர்.
இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை அடுத்து,மே 23 அன்று செய்தியாளர்களைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் சூர்யா.
அப்போது அவர் கூறியதாவது….
‘கருப்பு’ படத்தில் நடிக்கவேண்டுமென அரைமணி நேரத்தில் முடிவு பண்ணினேன்.வேறு எந்தப்படத்தையும் இவ்வளவு விரைவாக முடிவு பண்ணியதில்லை.ஆர்ஜே பாலாஜி கதை சொல்லும்போது,தியேட்டரில் வேறுமாதிரி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அனைத்துப் படங்களையும் நம்பிக்கை வைத்துதான் நடிக்கிறோம்.
இந்தப்படத்தின் முதல்நாளிலிருந்தே எல்லாமே சரியாகப்போனது.அதற்கு உறுதுணையாக இருந்தது,ட்ரீம் வாரியர்ஸ் பிரகாஷ்,பிரபுதான். எல்லா முடிவுகளையும் சரியாக எடுத்ததற்கும், எடுக்க வைத்த கருப்பசாமிக்கும் நன்றி சொல்லவேண்டும்.இது ஆசைப்பட்ட வெற்றி. ஆனால்,யாரும் எதிர்பார்க்காத பெரிய வெற்றியைக் கொடுத்த இரசிகர்களுக்கு பெரிய நன்றி.
இதுமாதிரியான ரியாக்சனை தியேட்டரில் சமீபத்தில் பார்த்ததே இல்லை.பெரிய அன்பு கிடைத்திருக்கிறது.கடவுளின் அருள்
இந்தப்படத்துக்கு இருக்கிறது என்பதை உணர்கிறோம்.இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் அதாவது தமிழ்நாடு மட்டுமின்றி, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,துபாய் என எங்கும் இதே ரியாக்சன் கிடைக்கிறது என்பதை நினைக்கும்போது இந்தத் தொழில் பண்ணுவது பிடித்திருக்கிறது என்று மறுபடியும் சொல்லத் தோன்றுகிறது.
எல்லாப் படங்களுக்கும் விமர்சனம் இருக்கும்,இதை இப்படிப் பண்ணியிருக்கலாம்,அப்படி பண்ணியிருக்கலாம் என்று.ஆனால்
எல்லோரிடம் இருந்தும் ஒரேமாதிரியான அன்பையும் அவர்களுக்கு சந்தோசத்தையும் ஒரு படம் கொடுக்கிறது என்றால் அதற்காக நான் நன்றி சொல்லவேண்டும்.
என்னிடம் 28 வருடங்களாக உதவியாளராக இருக்கும் குமார் சொன்ன ஒரு விசயம்,படத்தைத் தாண்டி கருப்பசாமிக்கு ஒரு பாடல் வைக்கவேண்டும் என்பது.படத்துக்குத் தொடர்பே இல்லாத குமாரின் ஐடியாதான் அந்த கிளைமாக்ஸ் பாடல்.மொத்தப் படத்தையும் எடிட் செய்து முடித்தபிறகு, 5 மாதங்களுக்குப் பிறகு எடுத்ததுதான் அப்பாடல்.படத்துக்கு இனி செலவு பண்ணவேண்டாம்,இனி முடியாது என்று நினைத்து அந்த ஐடியாவை முடித்திருக்கலாம்.ஆனால், எடுத்துவிடலாம் என முடிவு செய்து அப்பாடலை எடுத்தோம்.
அதைத்தான் இப்போது இரசிகர்கள் அதிகமாகப் பாராட்டுகிறார்கள்.குழந்தைகளில் இருந்து பெரியவர்கள்வரை தியேட்டர்களில் அத்தனை பேரும் படத்தை இரசிக்கிறார்கள்.
இவ்வாறு நடிகர் சூர்யா பேசினார்.











