செய்திக் குறிப்புகள்

தமிழ் இஸ்லாமிய படம் ஹபீபி – இயக்குநர்கள் பாராட்டு

மீராகதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா,மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹபீபி’.

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள,இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 17 அன்று நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது….

‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அழகான வசனமே இந்தப்படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு.நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீராகதிரவன் மீது வைத்திருக்கும் அன்புதான்.நல்லபடங்களை நல்லஇடத்திற்கு கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம்.அவர்தான் ‘ஹபீபி’ திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தினார். காசு,பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதைத்தாண்டி நல்ல கதைகளை கொடுக்கவேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீராகதிரவனும் ஒருவர்.மிக இயல்பாக படமெடுப்பவர்.இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்துகொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன்.தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை.ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார்.ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை.அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக ‘ஹபீபி’ இருக்கும்.தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.எனக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா.இயல்பான நடிப்பை இந்தபடத்தில் கொடுத்திருக்கிறார்.இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.தனி மனிதருடைய நம்பிக்கைதான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது.நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார்.மீராகதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துகள் என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி….

இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல.இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீராகதிரவனுக்காகதான்.இந்தபடம் அவருக்கு வெற்றிதேடி தரட்டும்.படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும்.இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது.நிச்சயமாக பாருங்கள் என்றார்.

இயக்குநர் மகிழ்திருமேனி……,

‘ஹபீபி’ திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு ஓடவேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது.ஆனால்,வேறு சில படங்கள் உள்ளது.அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை.அப்படியான படம்தான் ‘ஹபீபி’. இதை என் நண்பர் மீராகதிரவன் எழுதியிருக்கிறார் என்பது பெருமை.வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள்,அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர்,இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள்,கூட்டுக்குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது.தமிழ் சமூகத்தினருக்கான படம் இது.ஒரு காலக்கட்டத்தை,வாழ்வியலை,பண்பாட்டை இந்தப்படம் ஆவணப்படுத்தியிருக்கிறது.தன் சார்ந்த முடிவுகளை தானே முடிவெடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப்படத்தில் உண்டு. மீரா கதிரவன்,தாமிரா,லெனின் பாரதி போன்றோர் தொடர்ந்து படங்கள் எடுக்கும் வாய்ப்பை தமிழ்சினிமா உருவாக்கி தரவேண்டும் கஸ்தூரிராஜா அவர்களிடம் நான் உதவியாளராக பணியாற்றினேன்.அவருடன் பணிபுரிந்த காலம் என் வாழ்வின் பொக்கிஷம்.ராகுல் இந்தபடத்தை வெளியிடுவது இதன் மிகப்பெரிய பலம்.அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் கணேஷ் கே பாபு….,

முதல்படத்திற்கு பிறகு இரண்டாவதுபடம் இயக்கும் நம் மீது அதிக அழுத்தம் இருக்கும்.அப்படி இருக்கும் பொழுது இந்தபடத்தின் டிரைய்லர் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது.நல்லபடங்கள் கொடுக்கவேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் ‘ஹபீபி’ திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது.இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை.இந்தப்படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் ஹரிஹரன் ராம்…..,

நான் பார்த்து இரசித்த இயக்குநர்களுடன் இந்த மேடையில் இருப்பது சந்தோஷம்.மாளவிகாவுக்கு உண்மையிலேயே இதுதான் அறிமுகப்படம்.மீராகதிரவன் படங்களுக்கு நான் இரசிகன்.படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் தினகரன் சிவலிங்கம்….

மீராகதிரவன் தோழருக்கு வாழ்த்துகள்.என் குடும்பமும் கைத்தறி தொழில் சம்பந்தப்பட்டதுதான்.அந்த வாழ்க்கையை இந்தபடம் நுணுக்கமாக காட்டி இருக்கிறது.அடுத்தடுத்து வரும் இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையை,பின்புலத்தை எந்த மனத்தடையும் இல்லாமல் காட்டுவதற்கு இந்தபடம் உத்வேகம் கொடுத்திருக்கிறது.கமர்ஷியலாகவும் இந்தபடம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும்.மிக முக்கியமான படம் இது என்றார்

இயக்குநர் அவிநாஷ்….,

இந்தப்படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பொழுது ஈரானிய படத்தில் தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.எந்த பின்புலமும் இல்லாமல் புதியவர்களை இந்தபடத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருப்பது சிறப்பு.நிச்சயம் இரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி…..

தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்தபடம் சிறப்பாக வந்துள்ளது.திரையரங்குகளில் இந்தப்படம் வெளியாவது முக்கியம்.இயக்குநர் மீராகதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துகள் என்றார்.

தயாரிப்பாளர் தேனப்பன்….

இந்தபடம் பார்த்த அனைவரும் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.நிச்சயம் அந்த நம்பிக்கையை இயக்குநர் மீராகதிரவன் காப்பாற்றுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் சேரன்…..

இந்தபடம் பார்த்துவிட்டேன்.இதில் நானும் ஒரு கதாபாத்திரமாகதான் உணர்ந்தேன்.இப்படியான நல்ல படம் எடுக்கதான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும்.படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீராகதிரவனுக்கு வாழ்த்துகள்.இந்தப்படமே ஒரு நாவல்போல உள்ளது. அடுத்தகாட்சி என்ன என்பதை யாராலும் கணிக்கமுடியாது.வாழ்வியலை,சமூகமாற்றத்தை காட்டியிருக்கும் இந்தமாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும்,உணரவைக்கும்.தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்கவேண்டும்.வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் ஜகாரியா முகமது…..

நிறைய தமிழ்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.இதுபோன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி.நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்தமேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்தபடம் வெளியாக வேண்டும்.நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் சுசீந்திரன்…..

எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது.’ஹபீபி’ படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது.மீராகதிரவனுக்கும்,கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது.வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் லீனா மணிமேகலை…..

மீராகதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.இந்தப்படம் வீரியமான பண்பாட்டு அசைவு.இது தமிழ்சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது.இது ஒரு இஸ்லாமியபடம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம்.அதில் எனக்கு மனநிறைவு.பொருளாதார ரீதியாகவும் இந்தபடம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன்….,

‘ஹபீபி’ எனக்கும் முக்கியமான படம்.இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல்,கனவுகள்,இழப்புகள், வலிகளை பேசுகிறது.பீரியட்படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்கமுடிகிறது.அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துகள் என்றார்.

நடிகர் நாசர்…..

‘ஹபீபி’ படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை.எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும் என்றார்.

இயக்குநர் துரை…..

இந்தபடத்திற்காக இத்தனைபேர் ஒன்றுகூடி இருப்பது மகிழ்ச்சி.இஸ்லாமியர்களுடைய வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்தபடமும் காட்டியது இல்லை.இந்தபடத்தை நல்லபடியாக கொண்டுபோய் சேர்க்கவேண்டும்.அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. சாம் சி எஸ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.

தவெக எம்எல்ஏ முஸ்தபா…..

இந்தப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் படங்கள் பார்க்கவில்லை. ஆனால்,’ஹபீபி’ நிச்சயம் பார்ப்பேன்.முதல்வர் விஜய்யும் நிச்சயம் பார்ப்பார் என்றார்.

பாடகர் சத்யன்….,

இயக்குநர் மீராகதிரவனின் அவள் பெயர் தமிழரசி படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.படத்தின் போஸ்டரே படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ்…..

நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம்.அதனால்,நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.இந்தப்படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும் என்றார்.

இயக்குநர் அமீர்…..

பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கிவைக்கும்.அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறையபேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள்.ஹபீபி என்றால் அன்பு,காதல் என்று அர்த்தம்.அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப்படத்தை எடுக்கமுடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.தமிழ்சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம்.இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான்.’வாழை’ திரைப்படத்திற்கு அடுத்து நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ்சமூகத்திற்கான படம்.படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் மிஷ்கின்……

இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை.எது நல்லபடம்,எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு.கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது.மகிழ்ச்சி! ‘ஹபீபி’ ஹிட் ஆகவேண்டிய படம். நீண்டநாள் கழித்து ஒரு நல்ல காதல்படம் பார்த்து அழுதேன்.இந்தப்படத்தை மீராகதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார்.யார் என்று தெரியாதவனை நேசிப்பதுதான் கருணை.அதை இந்தபடம் சொல்லிக் கொடுத்தது.கஸ்தூரிராஜா சார் தனுஷைவிட மூன்றுமடங்கு நன்றாக நடித்திருக்கிறார்.தேர்ந்தெடுத்து பார்க்கவேண்டிய படம் இது.அனைத்து கடவுள்களும் இந்தப்படத்தை இலேசாக்கி தரட்டும் என்றார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா….

மீராகதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரைபோல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம்.ஆனால்,அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது.நான் இதுவரை நடித்ததில்லை.ஆனால் என் மீது மீராகதிரவன் நம்பிக்கை வைத்தார்.நான் ஆயிரம் சதவீதம் இந்து.அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீராகதிரவன் கதை மாற்றியது. இந்தநிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான்.இந்தபடத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை.அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்கவேண்டும்.இந்தபடம் மீராகதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும்.என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப்படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை.மற்றதெல்லாம் பொய் என்றார்.

இயக்குநர் ரஞ்சித்…..

நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு.ஆனால், யாரைப்பற்றியும் நம் சரியாக புரிந்துகொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறையபடங்கள் வந்திருக்கிறது.இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன்.தமிழ்சினிமாவில் இது முக்கியமான படம்.தமிழ்சினிமா இரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என்றார்.

நடிகர் ஈஷா…..

விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி.வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்,இயக்குநர் மீராகதிரவனுக்கும் நன்றி.என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜாசார் மீதும் வைத்திருக்கிறேன்.படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை என்றார்.

நடிகை மாளவிகா மனோஜ்….

தமிழில் எனக்கு இதுதான் முதல்படம்.படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ்……

வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்தகதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம்.ஆனால்,இப்போது இருவரும் நல்ல நண்பர்கள்.இந்தப்படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீராகதிரவனுக்கு நன்றி.படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.கஸ்தூரிராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது என்றார்.

இயக்குநர் ராம்…..

பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ்படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன்.பச்சைத் தாயத்து இல்லாத,கசாப்பு கடைக்குப் போகாத,பிரியாணி செய்வதுபோல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது.இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது.தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமியசினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன் என்றார்.

இயக்குநர் மீரா கதிரவன்….

படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.படத்தில் கஸ்தூரிராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று.இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும்.இந்தப்படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன்.அதைப் போல இந்தபடத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீராகதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது.என் தாயின் பெயர்தான் மீரா.தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன்.அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமதுயூசுப் கதைக்காக வீடு கொடுத்தார்.மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும்தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் ‘ஹபீபி’.இந்தப்படம்தான் என்னை இயக்கியது.கஸ்தூரிராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts