Uncategorized செய்திக் குறிப்புகள்

அதிரடி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? – கிரிக்கெட் வீரர் சஞ்சுசாம்சன் விளக்கம்

இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அதிரடி.

பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர்.

கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்தப்படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.

இந்தநிலையில் அதிரடி படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன்,இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும்போது….

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப்படத்தின் தலைப்பு குறித்து ஆலோசனை செய்தோம்.அப்போது,பசில் ஜோசப்தான் “அதிரடி” என்ற தலைப்பைப் பரிந்துரைத்தார்.அதிரடி என்பது சுத்தமான தமிழ்ப்பெயர்தான்.அதிரடி என்ற வார்த்தைக்கு ஒரு தாக்கம் இருக்கிறது, இதேபோல் இந்தப்படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் ஏற்றவாரு ஒரு தாக்கம் இருக்கிறது.அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப்படத்தைக் கொண்டாடி மகிழவேண்டும்.பசில் ஜோசப்,டொவினோ தாமஸ் ஆகியோருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது.இந்தப்படம் கல்லூரி நிகழ்வு சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கிறது.இது தமிழ் இரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

எழுத்தாளர் பால்சன் சக்ரியா பேசும்போது…,

தமிழ் கற்றுக்கொண்டு பேசுகிறேன்.எல்லாரும் இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும்.என்டர்டெயின்மென்ட் மற்றும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படம்.மலையாளத்தில் இந்தப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.உங்களுக்கும் இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும்.இந்தப்படத்தின் வசனம் மலையாளம் – தமிழ் என்று மொழி பெயர்ப்பு செய்வதைத் தாண்டி அதிக மெனக்கெடலுடன் வசனங்கள் தமிழ் இரசிகர்களுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டிருக்கிறது.அனைவருக்கும் நன்றி என்றார்.

பசில் ஜோசப் பேசும்போது….

எல்லாருக்கும் வணக்கம்,இந்தப்படத்திற்கு தமிழில் நான்தான் டப்பிங் செய்துள்ளேன்.இதனால் தமிழ் தெரியும்.மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.சிறுவயதில் இருந்து அதிரடி என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறேன்.தற்போது இதே வார்த்தையை தலைப்பாகக் கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன்.இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும்.மலையாளத்தில் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது,தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.தமிழ் இரசிகர்களுக்காக இந்தப்படத்தின் வசனங்கள் சிறப்பு கவனத்துடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழ் இரசிகர்கள்,கலாச்சாரத்துடன் ஒத்துப்போகும் வகையில் நிறைய முயற்சிகள் செய்திருக்கிறோம்.படத்தில் தமிழ்ப்பாடல்களைச் சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறோம்.இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.இங்கு வருகை தந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு நன்றிகள்.அவரை இந்தப்படத்தில் நடிக்கவைக்க முயற்சித்தோம்,ஆனால் அவர் விரும்பவில்லை.இந்தப்படம் உங்கள் அனைவரையும் சிரிக்கவைக்கும்.தமிழில் டப் செய்யும்போது அருமையான அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு வார்த்தைகள் கடினமாக இருந்தது,பிறகு தமிழ் அருமையாக வந்தது.எழுத்தாளர்கள் நிறைய உதவியாக இருந்தனர்.உண்மையான உழைப்புக்கு தமிழ் இரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளனர்.தமிழில் கிடைக்கும் வரவேற்பு,அவர்கள் அளிக்கும் பாசம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.கடந்தமுறை சென்னை வந்தபோது கிடைத்த ஆதரவு மறக்கமுடியாதது.எப்போதும் தமிழ் இரசிகர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன்.நடிப்பு,இயக்கம் இரண்டிலும் எனக்கு இயக்கம்தான் அதிகம் பிடித்திருக்கிறது.நடிப்பின்போது நான் பயணிகள் இருக்கையில் இருப்பது போன்றது,இயக்கத்தின்போது நானே ஓட்டுநர் இருக்கையில் இருப்பதைப் போன்றதாகும்.எனக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பது அதிகம் பிடித்திருக்கிறது.நடிப்பு, இயக்கம் என இரண்டையும் செய்வது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை,இரண்டையும் ஒருசேரச் செய்வது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சுசாம்சன் பேசும்போது….

அனைவருக்கும் வணக்கம்,திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருக்கிறது.நண்பர் அழைக்கும்போது வந்தே ஆகவேண்டும்.மிக்க மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது.இந்தப்படத்தில் நடிக்க சிறிய கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன்.நடித்தால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக இருக்கவேண்டும்.எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்கவேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர்.பசில் பார்க்க எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பார்,ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் சீரியசாக இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தால்கூட முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே என்பார். கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படக்கூடியவர்.அவர் கமிட் செய்யும் எந்தவொரு விசயத்திற்கும் அதீத உழைப்பைக் கொடுப்பார்.இந்த நிகழ்வுக்கு அழைக்கும்போதும்,அவர் கொடுத்திருக்கும் உழைப்பு, அதற்கு ஏற்ற பலன் கிடைக்கவேண்டும் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன்.சி.எஸ்.கே. அணிக்கு வந்த பிறகு அதிகப் பொறுப்பு கூடியிருக்கிறது.பெரிய ஃபிரான்சைஸ்,அதிக கோப்பைகள் வென்ற அணியில் இருக்கும்போது அதிக பொறுப்புடன் இருக்கவேண்டும். கிரிக்கெட்டை தாண்டி வெளியில் செல்லும்போது இரசிகர்கள், சேட்டா அடுத்த போட்டி ஜெயிங்கள்,கோப்பையை வெல்லுங்கள், தட்றோம்,தூக்குறோம் என்ற வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது.பொதுமக்கள் அளிக்கும் அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இரசிகர்கள் மனதில் இருந்து கொடுக்கும் அன்பை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. மிக அழகான பயணத்தை சென்னையில் துவங்கி இருப்பதாக நினைக்கிறேன்.சிறுவயதில் நிறைய தமிழ்ப்படங்களைப் பார்த்தே வளர்ந்திருக்கிறேன்.தற்போது தமிழ்நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுகிறேன்.அதனால்,எனக்கு தமிழகம் தற்போது இரண்டாவது வீடாக மாறியிருக்கிறது.சென்னையில் கிடைக்கும் உணவு எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது.கடந்த வாரம் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்டேன்,உணவு அற்புதமாக இருந்தது

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts