தாய்க்கிழவி ரஜினி நடிக்கவேண்டிய படம் – ராதிகா புதுத்தகவல்
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு பிப்ரவரி 23 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலை,
நல்ல கதைகள் தயாரிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயங்கிவருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம்.இந்தப்படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது.பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம்.படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப்படத்தின் மூலமும்,அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் வாய்ப்பை பார்க்கும்போதும் தெரியும். ராதிகா மேம் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.27 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் பேசியதாவது,
’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார்.நான் நடித்த‘ஆழி’படமும்,ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றதுபோல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்து கட்டிக்காப்பவரைதான் அப்படி கூப்பிடுவோம்.அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு,அர்ப்பணிப்பு,தன் மீது நம்பிக்கை வேண்டும்.திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப்படத்தில் தைரியமாக நடித்திருக்கிறார்.ஒரு பெண் தனியாக வாழும்போது சந்திக்கின்ற சோதனையும் வேதனையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாக இயக்குநர் சிவா இதில் பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிப்படத்தை தரக்காத்திருக்கும் சுதன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.
ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார்,
இது என்னுடைய முதல்மேடை.கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர்,தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் என்றார்.
எடிட்டர் சான் லோகேஷ்,
இதுபோன்ற படம் கிடைப்பது அபூர்வம். சிறப்பாக வந்துள்ளது என்றார்.
கலை இயக்குநர் ராமு தங்கராஜ்,
பெண்களை பற்றி அதிகமாக பேசியிருக்கும் ‘தாய் கிழவி’ மிக முக்கியமான படம்.எங்களிடம் கதை சொன்னதை விட இயக்குநர் சிறப்பாகவே எடுத்திருக்கிறார்.படத்தை தயாரித்திருக்கும் சுதன் மற்றும் சிவகார்த்திகேயன்,திறமையாக நடித்திருக்கும் ராதிகா என அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
ஒப்பனைக் கலைஞர் வினீஷ்,
என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயனுக்கு நன்றி.படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.
பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன்,
’தாய் கிழவி’ படத்தில் என் மனைவியை நினைத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா,இசையமைப்பாளர் நிவாஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.
பாடலாசிரியர் ஜெகன்,
ஒரு கிழவி மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் சீக்கிரம் சாகவேண்டும் என்ற சூழலில் வரும் பாடல். இதுபோன்ற சூழ்நிலைக்கு பாடல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வந்திருக்காது என நினைக்கிறேன்.இதற்கு நேரெதிராக இன்னொரு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது.இரண்டு பாடல்களும் அருமையாக வந்திருக்கின்றன என்றார்.
நடிகர் பாலசரவணன்,
மகிழ்ச்சியான, எனக்கு தேவையான படம் இது. இயக்குநரை ‘என்னா மனுஷன்யா!’என பாராட்டலாம். அந்தளவுக்கு மிகவும் பணிவானவர்.இப்படி ஒரு சிறப்பான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சிவகார்த்திகேயனுக்கு நன்றி.கதையை கேட்டு சிரித்தேன்,அழுதேன்.எனக்கு கிடைத்த செல்வம்தான் இந்த கதாபாத்திரம்.ராதிகா மேம் நடிப்பை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.தெளிவான அரசியல் பேசும் இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர்,தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்றார்.
நடிகர் அருள்தாஸ்,
இயக்குநர் சிவாவிடம் இருந்து கதை கேட்டபோது அவரிடம் இருந்து நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் இதில் உண்டு. முழுக்க முழுக்க திருப்தியான,பெருமையான படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.இந்தப்படத்திற்கு ஒத்துழைத்த ஊர்மக்கள்,படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் இந்தப்படத்திற்காக ராதிகா மேம் தேசிய விருது பெறுவார்.எல்லா வயதினருக்கும் பிடித்த படமாக ‘தாய் கிழவி’ இருக்கும் என்றார்.
நடிகர் சிங்கம்புலி,
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்த ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய ஹிட்.அதுபோலவே,பேஷன் ஸ்டுடியோஸ்,சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படமும் மிகப்பெரிய ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை.தீவிர ரஜினிகாந்த் இரசிகனான நான் இந்தப்படத்தில் கமல்ஹாசன் இரசிகனாக நடித்திருக்கிறேன்.படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என்றார்.
நடிகர் இளவரசு,
’தாய் கிழவி’ படம் புதியடிரெண்டை உருவாக்க வேண்டும்.அப்போதுதான் அடுத்த தலைமுறையும் இதுபோன்ற படங்கள் எடுக்க முன்வரும்.இதற்கு காலமும் சினிமாவும் துணை நிற்கவேண்டும்.மிகச்சிறந்த நடிகை ராதிகா.அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.
நடிகர் முத்துக்குமார்,
’கடைசி விவசாயி’ மணிகண்டனின் உதவி இயக்குநர்தான் சிவகுமார்.ரொம்பவும் வலிமையானவர். நான் பிறந்த மண் சார்ந்து ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரமாக ‘தாய் கிழவி’ படத்தில் கிடைத்திருக்கிறது.பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. தாய் கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ‘கனா’, ‘கொட்டுக்காளி’ படங்களுக்கு பிறகு நிறைய விருதுகள் குவிக்கும் படமாக ‘தாய் கிழவி’ இருக்கும் என்றார்.
நடிகை ரேய்ச்சல்,
’கடைசி விவசாயி’ படத்தில் இருந்தே இயக்குநர் சிவாவை தெரியும்.அவரின் வளர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறது.’தாய் கிழவி’ படத்தில் ஒரு பெண்ணை ஹீரோவாக பார்ப்பது மகிழ்ச்சி.ராதிகா மேம் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு.அவரது மகள் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.தனிப்பட்ட முறையில் இந்த கதாபாத்திரத்தை என்னுடன் பொருத்தி பார்த்துக்கொள்ள முடிந்தது. நன்றி என்றார்.
இயக்குநர் இரா.சரவணன்,
எளிதில் கணிக்க முடியாதவர்கள்தான் இந்த மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.சினிமாவிலும் பத்திரிகையிலும் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னால் கணிக்க முடியாத ஒரு நபராக தம்பி சிவகார்த்திகேயன் இருக்கிறார்.ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திருஷ்டி சுற்றி போட்டாலும் பத்தாது. அந்தளவுக்கு சிறப்பான நடிப்பை இந்தப்படத்தில் நடிகை ராதிகா கொடுத்திருக்கிறார்.ஹீரோக்கள் பின்னாடி ஓடும் தமிழ்சினிமா இனி நல்லகதைகளை தேர்ந்தெடுக்கும் என நம்புகிறேன்.சிவகார்த்திகேயன் ஏன் தயாரிக்கவேண்டும் என்ற விமர்சனங்களுக்கு பதிலடிதான் ‘தாய் கிழவி’ படம் என்றார்.
தயாரிப்பாளர் ஏஜிஎஸ் ஐஸ்வர்யா கல்பாத்தி,
இந்தவருடத்தின் மிகச்சிறந்த படம் இது.நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டும்.இயக்குநர் சிவா இப்படியான நல்லபடத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. ராதிகா மேம் சிறப்பாக நடித்துள்ளார்.படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா,
இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சிவா மற்றும் சுதன் இருவருக்கும் நன்றி.இயக்குநர் சிவா என் மனதுக்கு நெருக்கமானவர்.நாங்கள் பேசுவதை விட படம் பார்த்துவிட்டு,வருகிற 27ஆம் தேதி நீங்கள் பேசுவீர்கள் என்றார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ்,
இந்தப்படத்தில் ராதிகா மேமை முதலில் பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை.பல காட்சிகள் உங்களை கலங்கடிக்கும்.உங்களின் பல கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கும்.பெண்களை மையப்படுத்தி சொன்ன ‘கனா’ படத்தை விட 100 மடங்காக ’தாய் கிழவி’ படம் இருக்கும்.சிறந்தபடத்தில் நானும் பங்களித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி என்றார்.
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி,
சின்னஊர்களில் இருந்து பெரிய கனவுகளோடு வரும் பலருக்கும் சிவா சார்தான் இன்ஸ்பிரேஷன்.ரூரல் எண்டர்டெயினர் திரைப்படம் வந்து ரொம்ப நாள் ஆகிருச்சு.அந்த ஸ்பேசை இயக்குநர் சிவா சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.படம் பார்த்தபோது ராதிகா மேம் இன்னொரு லேடி கமல்ஹாசனாகதான் தெரிந்தார். நிச்சயம் படக்குழுவினருக்கு தேசியவிருது கிடைக்கும். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக இது அமைய வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் சிவகுமார் முருகேசன்,
என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சுதன்,சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி.ராதிகா மேம் முதலில் தயங்கினாலும் கதை மீது நம்பிக்கை வைத்து சின்சியராக நடித்துக் கொடுத்தார்.என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த என் குழுவினருக்கு நன்றி. பசியும் பட்டினியும் ஒன்றுபோல தெரிந்தாலும் அதற்கு நடுவில் ஒரு கோடு இருக்கிறது. ’தாய் கிழவி’ எனும் ராஜ விருந்து கொடுத்ததோடு ‘சேயோன்’ எனும்
நெல்கட்டையும் அடுத்து எனக்கு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.நிச்சயம் நல்ல விளைச்சல் காட்டுவேன். நன்றி என்றார்.
நடிகர் சூரி,
இந்தப்படத்தின் காட்சிகள் அனைத்தையும் நாமும் எதிர்கொண்டிருப்போம்.படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.ஒரு பெண் தனக்கான உரிமையை எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் என பன்ச் டயலாக் பேசாமல் காட்சிகள் மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.இந்தப்படம் பார்க்கும்போது என் அம்மா நியாபகம் வந்தது.யாருமே தவறவிடக்கூடாத படம் இது.பெரிய விஷயத்தை அசால்டாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சிவா.நாற்பது வருடங்களுக்கு மேலான தனது அனுபவத்தை இந்தப்படத்தில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார் ராதிகா மேம்.படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.நான் நடிக்கிற படங்களில் எல்லாமும் திணிக்கமுடியாது.ஆனால்,நான் தயாரிக்கிற படங்கள் இந்த சமூகத்திற்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் என தம்பி சிவகார்த்திகேயன் சொல்வார்.அதைத்தான் எல்லா படங்களிலும் செய்து வருகிறார்.அவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
நடிகை ஸ்ரீபிரியா,
படத்தின் முன்னோட்டம் மட்டும்தான் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு ராதிகாவிடம் படத்தின் நிகழ்வுக்கு நான் வர வேண்டும் என்று கேட்டேன்.ஏனெனில்,என் ராதிகாவை பலரும் புகழ்ந்து பேசுவதை நான் கேட்கவேண்டும். இந்தப்படத்தில் ராதிகாவின் அப்பாவை பார்த்தேன். ராதிகாவின் அம்மா இருந்திருந்தால் இந்தப்படம் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருப்பாரோ அதே சந்தோஷம் எனக்கும் இருக்கிறது.ராதிகாவின் நடிப்பை பார்த்து கமல் வியந்துபோய் பாராட்டினார்.ராதிகாவுக்கு தேசிய அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.இந்தப்படம் அந்த குறையை நீக்கும் என நம்புகிறேன் என்றார்.
நடிகை ராதிகா,
எல்லோருடைய அன்பு,நம்பிக்கை,ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் 48 வருடங்கள் கடந்தும் என்னை சினிமாவில் நிலைக்க வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார்.சினிமாவிற்குள் வர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கவேண்டும்.ஆனால்,நீடித்து நிலைக்க உங்கள் உழைப்பு முக்கியம்.என் சினிமா கரியரில் இன்னொரு திருப்புமுனை கொடுத்த சிவகார்த்திகேயன், சிவகுமார் இருவருக்கும் நன்றி.உண்மையில் இந்த கதை ரஜினிகாந்த் நடிக்கவேண்டியது.அவர் இந்த வேஷம் போட்டு நடிக்கமாட்டார்.அதனால், இந்த கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள்.அப்படிதான் நான் இதை பார்க்கிறேன்.4 மணி நேரம் ஹெவியான மேக்கப் போட்டு நடிக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் கமல்ஹாசன்தான். ’உன்னை தாண்டி அந்த கதாபாத்திரம்தான் திரையில் தெரிய வேண்டும்’ என்று கமல் என்றோ சொன்னது என் மனதில் ஒட்டிக்கொண்டது.அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் சிவகுமார் முருகேசனிடம் ஒரு ஃபயர் இருக்கிறது.அதை சிவகார்த்திகேயன் சரியாக கண்டுபிடித்திருக்கிறார். வலியை உணர்ந்த பெண் சொல்கிற கதைதான் ‘தாய் கிழவி’. பெண்களாகிய நம்மை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். எல்லா துறையில் இருக்கும் பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா சார் ‘தாய் கிழவி’யாக நான் நடித்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. சீக்கிரம் அவர் உடல்நலன் தேறி வந்து இந்தப்படம் பார்க்கவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்.என்னை நடிகையாக்கிய என் அம்மா இந்தப்படத்தை பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு.பெண் எம்.ஆர்.ராதாவாக தான் இந்தப்படத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்குள் வந்தபோது என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.அவர்களுக்கெல்லாம் நான் இன்று பதில் சொல்கிறேன்.நான் எம்.ஆர்.ராதா மகள் என்று! வாய்ப்பிற்கு நன்றி என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன்,
’தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். அடுத்து தலைவர் படம் இயக்க இருக்கும் சிபிக்கும் வணக்கம்.நாம் இருவரும் சேர்ந்து சுதனுடன் படம் செய்யவதாக இருந்தது.நீ மட்டும் இப்போது எஸ்கேப். சினிமாவில் சின்னகதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள்.சினிமாவில் வெற்றி பார்த்து பின்பு என் குடும்பம் நன்றாக இருந்தது. இருந்தாலும் என்னுடைய நண்பர்களுக்கும் எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.என்னைவிட சினிமாவில் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவன் அருண்ராஜா.அவர் சொன்னதுபோல,அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எஸ்.கே. புரொடக்ஷன்ஸ்.கனவோடு திருச்சியில் இருந்து வந்தவர்கள் சேர்ந்து ‘கனா’ என்ற படத்தை எடுத்தோம். பின்பு ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ என பல படங்கள் தயாரித்தோம். ’கொட்டுக்காளி’ படத்தின் வெற்றி எனக்கு நிறைவாக இருக்கிறது. ’தாய் கிழவி’ கதை கேட்டதுமே சிவகுமாரின் அடுத்தபடத்தில் நான் ஹீரோவாக நடிக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.
’தாய் கிழவி’ பார்த்துவிட்டு இந்தப்படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என கமல் சார் சிவகுமாரிடம் சொன்னார். ’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா மேம் தவிர வேறு ஆள் கிடையாது என்பதை படம் பார்த்துவிட்டு அனைவரும் சொல்வார்கள். ’சேயோன்’ படத்திற்கு அடுத்தும் மீண்டும் நான் சிவாவுடன் தான் படம் செய்ய இருக்கிறேன்.எனக்கு பேரும் புகழும் கொடுத்த இந்தத் துறைக்கு நான் திரும்ப எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேனே தவிர யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி வரவேண்டும் என்ற எண்ணத்திலோ இல்லை. நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல்படுகிறேன்.
மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.ஆனால்,இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தடை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனால், அதையும் தாண்டி வர நான் ரெடி. ’தாய் கிழவி’ படத்தை வரும் 27ஆம் தேதி குடும்பத்தோடு சென்று திரையரங்குகளில் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்
இவ்வாறு அவர் பேசினார்.











