ஒயிட்ரோஸ் – திரைப்பட விமர்சனம்
குறிப்பிட்ட வகைப் பெண்களைக் கடத்திச் சென்று கொலை செய்து கொடூரம் செய்யும் மனநலம் பிறழ்ந்த கொலைகாரனிடம் கதாநாயகி சிக்குகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைத் திரைப்பட இரசிகர்கள் எளிதில் யூகித்துவிட முடியும்.
அந்தளவுக்குப் பழைய கதையில் புதியமுலாம் பூசிக்கொண்டு வந்திருக்கும் படம் ஒயிட்ரோஸ்.
சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக் கொள்ளும் கயல் ஆனந்திக்கு அவருடைய கண்கள் பெரும்பலம்.அவை பயத்தைக் காட்டி பார்ப்போரையும் பயப்படவைக்கின்றன.
சைக்கோ கொலையாளி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.அவருக்கு வசனங்களே இல்லை என்பது ஆறுதலான கூடுதல் தகவல்.
இளம் வயது ஆர்.கே.சுரேஷாக நடித்திருக்கும் பரணி,
கயல் ஆனந்தியின் கணவராக நடித்திருக்கும் விஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரூசோ ஸ்ரீதரன்,காவல்துறை ஆய்வாளரக நடித்திருக்கும் சசி லயா, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹசின், தரணி ரெட்டி ஆகியோரும் குறைவில்லை.
ஒளிப்பதிவாளர் வி.இளையராஜா இதுபோன்ற படங்களுக்குரிய ஒளியமைப்பு செய்து காட்சிகளுக்குப் பயம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சுதர்சன், பின்னணி இசை அளவு.
எழுதி இயக்கியிருக்கிறார் கே.ராஜசேகர். சிகப்பு ரோஜாக்களை வெள்ளை ரோஜாவாக்கி அதறகுப் பொருத்தமாக கயல் ஆனந்தியைக் கதாநாயகியாகத் தேர்வு செய்ததிலேயே பாதிவெற்றி பெற்றுவிட்டார்.
பழைய கதைக்குள் அவர் சேர்த்திருக்கும் புதியவிசயம் அதிர்ச்சியளிக்கக் கூடியவை.
– இளையவன்











