சிம்புவின் 48 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிம்பு நடித்துள்ள பத்துதல படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்துக்கு அடுத்து சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6.30 க்கு வெளியாகியிருக்கிறது.
அந்த அறிவிப்பின்படி, சிம்புவின் 48 ஆவது படமான அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அந்நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர்கள் என்று அறிவிப்பு வெளீயாகியிருக்கிறது.
அந்தப்படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங்குபெரியசாமி இயக்கவிருக்கிறார்.
இவர்கள் இருவர் தவிர வேறு யார் பெயரையும் இன்று அவர்கள் அறிவிக்கவில்லை.
இவ்வறிப்பு அடங்கிய காணொலியை வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன், சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் இந்நேரத்தில் சிம்பு தாய்லாந்து தலைநகர் பாங்காங்க்கில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் தேசிங்குபெரியசாமியும் ராஜ்கமல் நிறுவனத்தினரும் பாங்காங்க் சென்று அங்கேயே எல்லாப் பேச்சுவார்த்தைகளையும் நிறைவு செய்திருக்கிறார்கள்.
அந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது என்கிறார்கள்.











