நான் மிருகமாய் மாற என்று பெயர் வைத்தது ஏன்? – சசிகுமார் விளக்கம்
டிடி.இராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரித்திருக்கும் படம் ‘நான் மிருகமாய் மாற’.காமன்மேன் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது இந்தப்படம். ஆனால் அந்தத் தலைப்புக்கு வேறொரு நிறுவனம் சொந்தம் கொண்டாடியதால் சிக்கல் ஏற்பட்டது.
எனவே இந்தப்படக்குழு, காமன்மேன் என்கிற பெயருக்கு மாற்றாக நான் மிருகமாய் மாற என்று பெயர் வைத்துள்ளது.
இந்தப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.நாயகியாக ஹரிப்பிரியாவும் வில்லனாக விக்ராந்த்தும் நடித்துள்ளனர்.
ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் குடும்பத்தைக் காக்க எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதே படத்தின் கதை.
இந்தத் திரைப்படத்தில் சசிகுமார் ஒலிப்பொறியாளராக நடித்துள்ளார்.அந்தத் தொழில் அவர் வாழ்க்கையில் பெரும் சிக்கலைச் சந்திக்கும் போது எப்படி உதவுகிறது? என்று சொல்லியிருக்கிறோம். இது முற்றிலும் புதிதாக இருக்கும் என்கிறார் இயக்குநர் சத்ய சிவா.
படத்தின் நாயகியான ஹரிப்ரியாவிற்கு ‘நான் மிருகமாய் மாற’திரைப்படம், செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் உடன் இரண்டாவது படமாகும்.கர்நாடகத்தைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பாக ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’ மற்றும் ‘வாராயோ வெண்ணிலாவே’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
படத்தின் நாயகி ஹரிப்ரியா இப்படம் குறித்துக் கூறியதாவது….
எனது கன்னடத் திரைப்படமான ‘பெல்பாட்டம்’ படம் பார்த்த இயக்குநர், இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு அளித்தார். படத்தின் கதை நன்றாக இருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.படத்தில் நான் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில், கணவன் மற்றும் குழந்தையைப் பாதுகாக்கும் ஒரு எதார்த்தமான இல்லத்தரசியாக நடித்துள்ளேன்.சசிகுமார் சார் நடிகர் மட்டுமல்லாது இயக்குநராகவும் இருப்பதனால், அவரிடமிருந்து நிறைய விசயங்கள் மற்றும் நுணுக்கங்கள் கற்றுக் கொண்டேன். மேலும் தமிழில் மீண்டும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.தமிழிலிருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்ததற்குக் கன்னடத்தில் நான் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்ததே காரணம். தமிழில் கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
படம் குறித்து சசிகுமார் பற்றி கூறியதாவது…..
காமன்மேன் என்கிற பெயரில்தான் படத்தைத் தொடங்கினோம். ஆனால் அந்தத் தலைப்பை இரண்டு பேருக்குக் கொடுத்துவிட்டனர்.அதனால் இப்போது இந்தப் பெயரை வைத்துள்ளோம்.முதலில் வைத்த பெயர் படத்தின் முதல்பாதியைச் சொல்வதாக இருந்தது. இப்போது படத்தின் பிற்பாதியைச் சொல்லும் விதமாக வைத்திருக்கிறோம். ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்வில் நடக்கும் கசப்பான சம்பவங்களால் எவ்வாறு ஒரு மிருகமாக மாறுகிறான் என்பதே கதை. படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன.
எனது போராட்டம் மற்றும் வலி உங்கள் அனைவருக்கும் தெரியும். வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல! எல்லாம் மாறும்! அதனை நான் இப்போது புரிந்து கொண்டேன் பக்குவம் மற்றும் நிதானம் தான் மிகவும் முக்கியமானது. ஓடிக்கொண்டே இருப்பது மட்டும் வாழ்க்கை அல்ல. நிதானமாக பிடித்தவற்றைச் செய்வது மிகவும் முக்கியமானது.
இப்போது நான் மதுரையிலேயே தங்கியிருக்கிறேன்.மதுரை எனது சொந்த ஊர். நான் எனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறேன். மேலும் எனது திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் மதுரையைச் சார்ந்த பகுதிகளில் நடைபெறுகிறது. அங்கு தங்கி இருப்பது மிகவும் எளிதாக உள்ளது. அங்கேயே டப்பிங் ஸ்டூடியோவும் இருப்பதனால், என் கிராமத்தில் தங்கி வேலை செய்வது எனக்கு மிகவும் சவுகரியமாக உள்ளது. எனவே சென்னைக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே நான் வருவேன்
இவ்வாறு அவர் கூறினார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா பட்டாச்சார்ஜி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் என்.பி படத்தொகுப்புப் பணிகளைச் செய்துள்ளார்.
சன் தொலைக்காட்சி மற்றும் சன் நெக்ஸ்ட் நிறுவனம் படத்தின் டிஜிட்டல் மற்றும் செயற்கைக்கோள் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளது.
இப்படம் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படும்.











