சினிமா செய்திகள்

புதிய படத்தின் பெயர் அறிவிப்பு – நயன்தாரா கோபம்

புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2. இந்தப் பெயரை நேற்று (மே 6,2022) மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் உருளையை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள்? என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் ஓ2 என்கிறார்கள்.

தமிழ்நாடு,கேரளா ஆகிய மாநிலங்கள் இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீனா, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கும் இப்படப் பெயர் அறிவிப்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நேற்றுமாலை வெளியான இப்படத்தின் அறிவிப்பை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் ஆகியோர் தங்கள் பக்கத்தில் வெளியிடவில்லை.

ஏனென்று கேட்டால்?

அண்மைக்கால நயன்தாரா படங்களில் அவருக்கு லேடிசூப்பர்ஸ்டார் என்கிற அடைமொழி கொடுத்துவந்தார்கள்.

இப்படத்தில் அந்தப் பட்டம் இல்லை. வெறுமனே நயன்தாரா வின் ஓ2 என அறிவித்திருக்கிறார்கள். அதன் காரணமாகக் கோபப்பட்ட நயன்தாரா தரப்பு இப்படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை என்று சொல்கிறார்கள்.

Related Posts