செய்திக் குறிப்புகள்

சிவகுமாரின் சபதம் படத்தின் கதை இதுதான் – ஹிப்ஹாப் தமிழா ஆதி பேச்சு

தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’.

இண்டே ரெபல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

காதல், நட்பு, காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் செப்டம்பர் 24 அன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்

இந்நிகழ்வில் நடிகர் இளங்கோ குமணன் பேசியதாவது…..

மேடையும் மொழியும் புதிதல்ல ஆனால் சினிமா மேடை எனக்குப் புதிது 20 வயதில் ஆசைப்பட்டதை 60 வயதில் நிறைவேற்றியுள்ளார் ஆதி.அவருக்கு என் நன்றி.

ஆதி அவர்கள் என்னைத்தொலைபேசியில் அழைத்து இந்தக்கதாப்பாத்திரம் குறித்துச் சொன்ன போது, இந்தக்கதாப்பத்திரத்திற்கு நான் பொருத்தமா என யோசித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

என்னை மனதில் வைத்தே இந்தப்பாத்திரத்தை எழுதியதாகச் சொன்னார். அதனால் இதன் புகழ் அனைத்தும் அவரையே சாரும். தமிழ்ப் படங்கள் தான் என் ஆசான். அவை தான் என் பொழுதுபோக்கு. இந்த திரைப்படம் ஒரு அட்டகாசமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேசியதாவது…

கோவிட் நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது. பட்டாசு திரைப்படத்திற்குப் பிறகு, இப்போது மீண்டும் உங்கள் அனைவரையும் பார்ப்பது மகிழ்ச்சி.

ஆதி படங்களை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ‘நட்பே துணை’ படத்தைப் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. அந்தப்படத்தில் துணை கதாப்பத்திரங்களுக்குக் கூட நிறைய வரவேற்பு கிடைத்தது.

இந்தப்படத்தின் கதையை எனது மகன் தான் முழுதாக்க் கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் முழுதாக முடிந்த பிறகு பார்த்தேன். இரண்டாம் பகுதி என்னை மிகவும் பாதித்தது. ஆதியை மனமாரப் பாராட்டினேன்.

மூன்றாம் பிறை படத்திற்குப் பிறகு இந்தப்படம் தான் என்னை அதிகம் பாதித்தது. இந்தப்படத்தில் தாத்தாவாக வரும் குமணன் அட்டகாசமாக செய்துள்ளார். நெகட்டிவாக வரும் விஜய் கார்த்திக் மிக அழகாக செய்துள்ளார். நடிகர் கதிர் உடைய ஹீயுமர் நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவை கொடுத்த பட்ஜெட்டில் அற்புதமாகச் செய்துள்ளார்.

ஆதி படத்தில் வரும் நாயகிகள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். அது போல் மாதுரி ஜெயின் பெரிய அளவில் வெற்றி பெறுவார்.

கோவிடால் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல படங்கள் தியேட்டரில் பார்த்தால் தான், நாம் அதை இரசிக்க முடியும். அதனால் தான் காத்திருந்து இப்படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம். உங்கள் முழு ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது…

இப்படத்தில் அனைவரும் ஒரு குடும்பம் போலவே இருந்தோம். ஆதி என்னுடைய இரசிகர் என்று சொல்லி போன படத்தில் வாய்ப்பு தந்தார்.

இந்தப்படத்தில் பெரிய கேரக்டர் கொடுத்துள்ளார். மேலும் ஒரு பெரிய பொறுப்பு ஒன்றைக்கொடுத்தார். படப்பிடிப்பில் அனைவரையும் ஒருங்கிணைத்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பை தந்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்தார்கள். அனைவருடனும் பழகியது நன்றாக இருந்தது.

ஆதி அண்ணா ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார். இப்படம் ஜாலியாக சிரித்து குடும்பத்தோடு கொண்டாடும் படமாக இருக்கும். தியேட்டரில் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் பிராங்க்ஸ்டர் ராகுல் பேசியதாவது…

என்னுடய பிராங்க் பார்த்து ஆதி என்னை அழைத்து பேசினார். என்னை யாரோ பிராங்க் செய்கிறார்கள் என்றே நினைத்தேன். அப்புறம் அவர் அழைத்து இந்த கதாப்பத்திரம் குறித்து சொன்னார். 12 வருட கனவு நனவாகியுள்ளது. இந்தபடத்தில் எனது பிராங்கை முழுதாக மறைத்து விட்டு, ஒரு நடிகனாக என்னை மாற்றினார். அவரது உழைப்பை படப்பிடிப்பில் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. இந்தப்படத்தை அனைவரும் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

நடிகர் விஜய் கார்த்திக் பேசியதாவது…

இந்த மேடையில் இன்று நான் இருக்கக் காரணம் ஆதி தான். 30 வருட முயற்சி ஆதியால் தான் நிறைவேறியது. அவரின் தீவிர இரசிகன்.

ஒரு நாளில் கூப்பிட்டு நடிக்கச் சொல்லி, அன்றே நான் இந்தப்படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார்கள்.
அதற்கு ஆதிக்கு நன்றி.

இதே சத்யஜோதி வாசலில் பலமுறை வாய்ப்பு கேட்டு போயிருக்கிறேன். ஆனால் இன்று தயாரிப்பாளர் வாயால் என்னைப்பாராட்டியது கேட்டபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இவையனைத்துக்கும் ஆதிக்கு நன்றி.

நடன அமைப்பாளர் சந்தோஷ் பேசியதாவது…

எல்லோரும் வளர வளர கம்ஃபோர்ட்டாக இருக்க நினைப்பார்கள் ஆனால் நடிகர் ஆதி வளர வளர நிறைய கஷ்டப்பட்டு ஆடுகிறார். இந்தபடத்தில் நல்ல ஒரு கதை இருக்கிறது. மக்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் அர்ஜூன் ராஜா பேசியதாவது…

இன்று மேடையில் நான் வந்ததற்கு ஆதி தான் காரணம், அவர் கதை சொன்ன போதே, ஒரு பார்வையாளனாக நான் இரசித்துக் கேட்டேன்.

இது நம் கண்முன் தினமும் நடக்கும் கதை. நிறைய விவாதித்து இந்தபடத்தை உருவாக்கினோம். முழுப்படத்தையும் 35 எம்எம்,50 எம்எம் லென்ஸில், அதாவது மனிதனின் கண் பார்வையுடய பெர்ஸ்பெக்டிவில் செய்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி.

படத்தொகுப்பாளர் துவாரகநாத் பேசியதாவது…

இப்படத்தில் வேலை செய்யும் முன்னர் ஆதி நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்வார். நானும் அப்படித்தான் என்பதால் அவருடன் வேலை செய்வது எளிதாக இருந்தது. ஒரு சில காட்சிகளை கட் செய்தால், பல இயக்குநர்கள் கோபப்படுவார்கள், ஆனால் ஆதி அதில் தெளிவாக இருந்தார். படத்தில் தேவையில்லை எனில் கட் செய்து விடுங்கள் என்றார். ஆதி ஹிரோயினை அறிமுகம் செய்வதில் முன்னணியில் இருக்கிறார். மாதுரி இப்படத்தில் அசத்தியுள்ளார். இது ஒரு குடும்ப படம், இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நாயகி மாதுரி ஜெயின் பேசியதாவது…..

இது எனது முதல் படம். அழகான கதை எழுதியதற்கும், எனக்கு வாய்ப்பு தந்ததற்கும் ஆதிக்கு நன்றி. சத்ய ஜோதி தயாரிப்பில் அறிமுகமானது எனக்கு பெருமை. என்னை அழகாக்க் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஆதி கழுத்தில் ஒரு கர்ச்சிஃப் கட்டியிருப்பார் அப்படி கட்டியிருந்தால் அவர் இயக்குநராக இருப்பார், மற்ற நேரத்தில் நடிகராக இருப்பார். இந்த படமே ஒரு குடும்பத்துடன் பழகியது போல இருந்தது. எல்லா நடிகர்களுமே நண்பர்களாக மாறிவிட்டனர். இந்தப்படம் அனைவரையும் சிரிக்க வைக்கும் படமாக இருக்கும் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

நடிகர், இயக்குநர் ஆதி பேசியதாவது..

நிறையப் பேருக்கு இது முதல் மேடை, அவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசியது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். அவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சத்யஜோதி மிகப்பிரமாண்டமாக “அன்பறிவு” படத்தை எடுத்தார்கள். பொதுமுடக்கத்தால் அது கொஞ்சம் தள்ளிப்போனது.

அந்த நேரத்தில் காஞ்சிபுரம் போயிருந்தேன், அங்கு கிடைத்த அனுபவத்தால் தான் இந்தக்கதையை எழுதினேன். இந்தப்படம் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. என் தயாரிப்பாளர் ரிஸ்க் வேண்டாம் என்றார். ஆனால் என் நடிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை எடுக்க ஆரம்பித்தோம். இந்தப்படத்திற்கு புதுமுகங்கள் தான் சரியாக இருப்பார்கள் என்று தோன்றியது.

இந்தப்படம் வெற்றியடையும்போது இந்த நடிகர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.

சத்ய ஜோதி தியாகராஜன் அவர்களுக்கு இந்தப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் இண்டே ரெபல்ஸ் உடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். துணிந்தே ரிஸ்க் எடுத்து எடுத்துள்ளோம்.

இரண்டே லென்ஸில் படத்தை ஒளிப்பதிவு செய்த அர்ஜூன்ராஜா அவர்களுக்கு நன்றி. கோல்ட் மெடல் வாங்கிய படத்தொகுப்பாளர் தீபக் எஸ்துவாரகநாத் அட்டகாசமாக செய்துள்ளார்.

இந்தப்படத்தில் ஆர்ட் மிக முக்கியமானது அதை அட்டகாசமாகச் செய்து தந்த வாசுதேவனுக்கு நன்றி.

தமிழ் தெரிந்த ஹீரோயின், அவர் பாண்டிச்சேரி தமிழ்ப்பெண் ஒரு மாதம் எங்களுடன் இணைந்து ரிகர்சல் செய்தார். திரையில் இப்போது அதைப்பார்க்க நன்றாக இருக்கிறது.

இந்தப்படம் தியேட்டரில் அமர்ந்து பார்க்க வேண்டிய படம். நான் கேட்டுக்கொண்டதை மதித்து, திரையரங்கில் படத்தைக் கொண்டுவந்த தயாரிப்பாளருக்கு நன்றி.

ஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணம் தான் இப்படம். எல்லோருக்கும் பிடிக்கும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts