கமலிடமிருந்த ஆஸ்கர் நாயகன் பெருமையைப் பறித்த சூர்யா
உலக அளவில் திரைத்துறையினர் அனைவரும் பெற நினைக்கும் விருது ஆஸ்கர் விருது. தமிழ்த்திரையுலகினருக்கும் ஆஸ்கர் விருது மேல் ஆசை. இங்கு இதுவரை கமல் மட்டுமே ஆஸ்கர் பற்றிப் பேசிவந்தார். அதனாலேயே அவரை ஆஸ்கர் நாயகன் என்று அவரது இரசிகர்கள் போற்றுவார்கள்.ஆனால் அவருடைய படங்கள் ஆஸ்கர் போட்டிக்குக் கூடப் போனதில்லை என்றும் சொல்வார்கள்.
இப்போது சூர்யா நடித்த சூரரைப் போற்று தமிழ்த் திரைப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குப் போகவிருக்கிறது. இதுகுறித்து அப்படத்தைத் தயாரித்திருக்கும் 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, அப்பர்னாவின் எதார்த்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்துப் பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது.
தற்போது ‘சூரரைப் போற்று’ படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம்.
அந்த வரிசையில் பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர்? என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.
இந்தப் பொதுப்பிரிவுப் போட்டியில் ‘சூரரைப் போற்று’ திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்தப் பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.
உலகத் திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்” என்று கூறினார் படத்தின் இணை தயாரிப்பாளர் இராஜ்சேகர் கற்ப்பூரசுந்தரபாண்டியன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











