இலண்டனில் ரஜினியின் 2ஓ பட இறுதிவேலைகள் – ஒருவழியாக முடிவுக்கு வருகிறது
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2 ஓ உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.
ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று முறை தள்ளிப்போனது.இப்போது நவம்பர் 29-ஆம் தேதி படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறையாவது சொன்ன தேதியில் வெளியாகுமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.
அதில் சந்தேகமே வேண்டியதில்லை படம் நிச்சயம் வெளியாகும் என்கிற மாதிரியான நிகழ்வு நடந்திருக்கிறது.
2 ஓ படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் அமெரிக்கா உட்பட சில நாடுகளில் நடந்தன.
அவை எல்லாம் முடிவடைந்து எல்லாக் காட்சிகளும் இலண்டன் சென்று சேர்ந்துவிட்டதாம்.
அவற்றைத் தொகுத்து முழுமையாக்கும் வேலைகள் தொடங்கியிருக்கின்றனவாம்.
இதற்காக இலண்டன் சென்றிருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர். படத்தை முழுமையாக்கிப் பார்த்துவிட்டுத்தான் தமிழகம் திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.
எனவே நிச்சயம் நவம்பர் 29 இல் படம் வெளியாகும் என்கிற நம்பிக்கை பிறந்திருப்பதால் அப்பாடா ஒரு வழியாக முடிந்தது என்று சம்பந்தப்பட்டவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்களாம்.











