சினிமா செய்திகள்

ட்ராவில் முடிந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை

டிஜிட்டல் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து, மார்ச் மாதம் 1,2018 ஆம் தேதி முதல் புதுப்படங்களை வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன்,படப்பிடிப்புக்குப் பிறகான பணிகளும் நிறுத்தப்பட்டன.

முதலில் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான போராட்டமாக மாறியது. இதனால், மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. சினிமா நிகழ்ச்சிகள் கூட நடைபெறவில்லை.

நுழைவுச்சீட்டுக் கட்டணத்தைக் கணினிமயமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்க மறுத்ததால், வேலை நிறுத்தம் நீண்டு கொண்டே சென்றது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அமைச்சர்களைச் சந்தித்தும் சுமுகத்தீர்வு ஏற்படவில்லை. இதனால், தமிழ்த்திரையுலகுக்குப் பல கோடி இழப்பு ஏற்பட்டது.பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்.

45 நாட்களுக்கு மேலாகியும் முடிவடையாததால் தமிழக அரசு இச்சிக்கலில் தலையிட்டு முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஏப்ரல் 17 காலை 11.30 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் சேவை ஒளிபரப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் இரவு 9 மணிக்கு முடிவுக்கு வந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “சினிமாத்துறை முழுக்க வெளிப்படைத்தன்மைக்கு வருகிறது. எனவே, இனிமேல் எல்லாத் திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மூலமாகவே நடைபெறும். மேலும், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது எக்ஸ்ட்ராவாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்பட மாட்டாது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய தயாரிப்பாளர் சங்கமே முடிவெடுத்துள்ளது.

திரையரங்குகளுக்கு வரும் மக்களுக்கு எளிதாக இருக்கும் வகையில், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும்” என்றவர், வேலை நிறுத்தம் குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மிகவும் சிக்கலுக்குள்ளான விபிஎஃப் கட்டணத்தை யார் செலுத்துவது? என்பது பற்றி எந்த விவரமும் சொல்லப்படவில்லை.டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தைக் குறைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதனால் தயாரிப்பாளர்களே விபிஎஃப் கட்டணம் கட்டுவார்கள் என்று தெரிகிறது.

இப்பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள திருப்பூர் சுப்பிரமணியம், யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் ட்ராவில் முடிந்தது. இதனால் எல்லோருக்கும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

Related Posts