மத்திய அரசைக் கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை
விஜய் நடித்த ‘பிகில்’ படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். பட நிறுவன அலுவலகங்கள் மற்றும் நிதியாளர் மதுரை அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து வந்தனர்.
இதற்கு விஜய் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் ரவிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….
விஜய்யிடம், வருமானவரித்துறையினர் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதியை நடத்துவதுபோல் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று விஜய்யை அழைத்து வந்து விசாரிப்பது ஏன்?. அவர் நித்யானந்தாவா? இல்லை விஜய் மல்லையாவா? இதுபோன்ற விசாரணை வேறு எந்த நடிகருக்காவது நடந்துள்ளதா?.
விஜய் வாங்கிய பணத்துக்கு முறையாக வரி கட்டுகிறார். மத்திய அரசின் இந்தச் செயல் எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் மேற்கொண்டு வரும் சமூக நலப்பணிகள் அனைவருக்கும் தெரியும்.
264 மாணவ-மாணவிகளின் படிப்புச் செலவை முழுவதுமாக ஏற்று அவர்களைப் படிக்க வைத்து வருகிறார். தான் நடிக்கும் படங்களில் கூட நல்ல கருத்துகள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்.
‘தமிழன்’ படத்தில் தனிமனிதனுக்கு அடிப்படைச் சட்டம் தெரிய வேண்டும் என்றார். போக்கிரி, தெறி படங்களில் காவல்துறையின் நேர்மையை வெளிப்படுத்தினார்.
‘துப்பாக்கி’ படத்தில் தேசப்பாதுகாப்பை முன்னிறுத்தினார். ‘கத்தி’ படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்தார். ‘மெர்சல்’ படத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி கிடைக்க வலியுறுத்தினார். ‘பிகில்’ படத்தில் பெண்மையைப் போற்றினார்.
அப்படிப்பட்ட கலைஞனை அவரது காரில் கூட ஏற அனுமதிக்காமல் அழைத்து வந்த செயல் விஜய் ரசிகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலம் முழுவதும் ரசிகர்கள் கொந்தளித்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களிடம் பொறுமை காக்கும்படி கூறியுள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.











