தமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்கவிருக்கிறேன் – விஜய்தேவரகொண்டா பேச்சு
தெலுங்கில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின்
‘தி ஃபேமிலி ஸ்டார்’.
இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு கே.யூ.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.
இந்தப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை முன்னிட்டு படக்குழுவினர் தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.அதில், விஜய் தேவரகொண்டா, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜு பேசுகையில்….
விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்திற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறேன். இந்தத் திரைப்படம் நடுத்தர வர்க்க இளைஞரின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களுடைய குடும்ப முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவர்கள் தான் ‘தி ஃபேமிலி ஸ்டார். இதை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூரும் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில், ‘கீதா கோவிந்தம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பரசுராம் பெட்லாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் தமிழ் இரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காபி இருக்கிறது. இட்லி சாம்பார் இருக்கிறது. தாலி இருக்கிறது.ஃபுல் மீல்ஸ் ஆகியவையும் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்து மக்களின் பொருளாதார ஸ்டேட்டஸ் உயரவும், குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் போராடும் ஒரு இளைஞனின் கதை தான் இப்படத்தின் கதை. இந்தப் படத்தில் அனைத்துத் தரப்பு இரசிகர்களும் கொண்டாடும் வகையில் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என கமர்சியல் விசயங்கள் இடம் பிடித்திருக்கிறது. இந்தத் திரைப்படம் தமிழ் இரசிகர்களுக்கும் பிடிக்கும். என்னுடைய நண்பரும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்வரூப் – இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். விஜய் தேவரகொண்டாவும் – பரசுராமும் இணைந்து நிகழ்த்தி இருக்கும் மேஜிக்கைக் காண ஏப்ரல் ஐந்தாம் தேதி திரையரங்குக்கு வாருங்கள் என்றார்.
படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப் பேசுகையில்….
தயாரிப்பாளர் தில் ராஜு அருமையான நண்பர். இந்தப் படம் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறேன் என்றார்.
படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா பேசுகையில்….
தமிழ் இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த போது அந்தப் பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். கடந்த முறை ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஊடகவியலாளர்கள் விளக்கினர். நானும் பதிலளித்தேன்.
என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் ‘அர்ஜுன் ரெட்டி’க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூலம் உங்களைச் சந்திக்கிறேன். இயக்குநர் பரசுராமுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது அந்தப் படத்தை விட கூடுதல் உயரத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் என நம்புகிறேன். இதற்கு முன் எனது நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவு பிரமிப்பாக இருந்தது. இதே போல் இந்தப் படத்திற்கும் உங்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்க இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும்,காதலிப்பதிலும்,நேசிப்பதிலும், கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன்தான் இப்படத்தில் நாயகன். இது இரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
படத்தின் நாயகியான மிருனாள் தாக்கூர் அற்புதமான ஒத்துழைப்பை வழங்கிய சக கலைஞர். மும்பையில் வேறு ஒரு பணியில் இருப்பதால், அவரால் இங்கு வர இயலவில்லை. இருந்தாலும் அவர் அந்தக் கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து, தன்னுடைய நடிப்பு முத்திரையைப் பதித்திருக்கிறார். அவருக்கும் படக்குழுவின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் இரசிகர்களை வெகுவாகக் கவரும். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி அன்று தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.











