நடிப்பு, சூர்யா தனுஷ் படங்களுக்கு இசை இவற்றைத்தாண்டி ஜீ.வி.பிரகாஷ் செய்யும் வேலை
இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது இசை அமைத்துக் கொண்டும் பல படங்களில் நடித்தும் வருகிறார்.
இவரது நடிப்பில் சசி இயக்கத்தில் உருவான படம் ”சிவப்பு மஞ்சள் பச்சை” விரைவில் வெளிவரவுள்ளது.
மேலும் இயக்குநர் எழில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யா, தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் இருக்கிறார். இவ்வளவு வேலைகளின் நடுவே சமூகம் சார்ந்த பல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இசை, நடிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திய ஜி.வி.பிரகாஷ் குமார் சமூகப் பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி கொண்டிருக்க என்ன காரணம் என்று கேட்டால், “நானும் சமூகத்தில் ஒன்றான மனிதன்தான்” என்கிறார்.
“சினிமா துறை என்பது டாக்டர், வக்கீல் போன்ற ஒரு தொழில் அவ்வளவு தான். நாங்களும் சாதாரண மனிதர்களைப் போன்றவர்கள்தான். பயணம் எங்கு தொடங்கிறதோ, புதிய கனவுகள் அங்கு மலரும், அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாகத் தான் இசை. இசைக்குப் பின்பு நடிப்பு. தற்போது சமூகப் பணி. நான் இசை அமைத்த போதிலும், நடித்த போதிலும் கிடைத்த கைதட்டல்களில் கிடைக்காத சந்தோஷம் சமூகம் சார்ந்த வேலைகள் செய்யும் போது மனதிற்கு மிகவும் ஆனந்தத்தைக் கொடுக்கிறது.
என் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வேண்டும், அதற்காக என்னால் முடிந்த உதவிகள் செய்வேன். அது என் கடமையும் கூட. என் பயணத்தின் அனுபங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை, தமிழகத்தில் இன்னும் மழை பெய்து கொண்டு இருகிறது என்றால் நான் சந்தித்த, சந்திக்காத மாமனிதர்களால் தான் என்று சொன்னால் மிகையாகாது.
என் சமூகத்தில் இன்னும் அடிப்படை தேவைகளில் ஒன்றான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது எனது முக்கிய நோக்கம். அதில் குறிப்பாக ஒரு பெண்ணிற்குக் கிடைக்கும் கல்வி, அவள் குடும்பத்திற்குக் கிடைக்கும் கல்வி ஆகும்.
நான் பார்த்த சமூகப் பணி செய்யும் மனிதர்கள் மிகவும் சாதாரணமாக மிகப் பெரிய சமூகம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொண்டு அதற்கான தீர்வுகளைக் கண்டு உள்ளார்கள்.
அதற்காக உலக அளவில் பெரிய விருதுகள் கூட பெற்று கொண்டு இன்னும் மக்களுடன் மக்களாக சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்தும் செய்தும் மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கிறார்கள்.
நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக என் முகம் வெளியே தெரிகிறது. அதுவும் ஒரு வகை நன்மைக்குத் தான் என்று நான் எண்ணுகிறேன், காரணம் என் மூலம் இந்த மாமனிதர்களை வெளியே கொண்டு வந்து மக்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.
வெளிச்சத்துக்கு வராமல் அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத்துக்குச் சென்று பேட்டி எடுத்து வெளி உலகத்துக்குக் காட்ட உள்ளேன்.
“மகத்தான மாமனிதர்கள்” என்ற பெயரில் என்னுடைய யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக இலாப நோக்கு துளிகூட இல்லாமல் யூடியூபில் வெளியிடுகிறேன்.
சமூகப் பணி பல துறைகளில் இருக்கிறது, என்னால் எல்லாத் துறைகளிலும் சென்று உதவ முடியாது. ஆனால் பல துறைகளில் சிறப்பாகச் செயல்படும் மனிதர்களுடன் சேர்ந்து பயணிக்க முடிவு செய்தேன்.
அது போல நான் சமூகத்தில் சந்திக்கும் மகத்தான மனிதர்களை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் நான் அவர்கள் செய்யும் மக்கள் நலப்பணிகள், சாதனைகள் ஆகியனவற்றை அவர்கள் இடத்திற்கே சென்று களத்தில் நான் பார்த்துத் தெரிந்து கொண்ட அனுபவங்களின் தொகுப்பாக இந்த “மகத்தான மாமனிதர்கள்” அமையும் என்று மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கூறுகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.











