சூர்யா 37 படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் சூர்யாவின் 37 ஆவது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.
இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
இப்படத்துக்குப் பெயரிடப்படாமல் இருந்தது. அண்மையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கே.வி.ஆனந்த், “கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். ‘சூர்யா37’ படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்” என்று வாக்கெடுப்பு தொடங்கி அதற்கு “மீட்பான், காப்பான், உயிர்கா” என மூன்று பதில்கள் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டின் தொடக்கநாளான இன்று அப்படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
படத்துக்கு காப்பான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சூர்யா ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.










