தனுஷ் விக்ரம் வரிசையில் சிம்பு – இது எப்போது?
சிம்புவை வைத்து கவுதம்மேனன் இயக்கி ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. பெரும் வரவேற்பையும் சிம்புவுக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுக் கொடுத்த படமாக அது அமைந்தது.
இப்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் சிம்பு, கவுதம்மேனன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17,2018 அன்று இவ்வறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதற்குப் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ள ரசிகர்கள் கூடவே படத்தை சீக்கிரம் எடுத்து முடித்து வெளியிட்டால் மகிழ்ச்சி என்கிற கருத்தையும் தெரிவித்துவருகின்றனர்.
ஏனெனில் கவுதம்மேனன் இயக்கத்தில் ஏற்கெனெவே இரண்டு படங்கள் இருக்கின்றன.
தனுஷை வைத்து எடுக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் விக்ரமை வைத்து எடுக்கும் துருவ நட்சத்திரம் ஆகியன.
என்னை நோக்கிப் பாயும் தோட்டா படம் 2016 ஆம் ஆண்டு மார்ச்சில் தொடங்கியது. இன்னும் வெளியாகவில்லை.
துருவநட்சத்திரம் படம் 2017 ஆம் ஆண்டு சனவரியில் தொடங்கியது. இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை.
இந்நிலையில் சிம்புவுடனான அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார் கவுதம்மேனன். இது எப்போது வெளியாகுமோ?