ஷங்கர் வடிவேலு மோதலுக்குக் காரணம் இதுதான் – புதிய தகவல்
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்புதேவன் தொடங்கினார்.இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் ஷங்கர் தயாரித்தார்.
வடிவேலு நாயகனாக அறிமுகமான முதல் படம் இம்சை அரசன், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் திடீரென அப்படியே நின்றுபோனது. வடிவேலு மற்றும் படக்குழுவினர் இடையே மோதல் காரணமாக படப்பிடிப்பு அப்படியே நின்றுபோனது என்று சொல்லப்பட்டது.
மிகப் பெரிய பொருட்செலவில் அரங்குகள் அமைத்தும், படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் வடிவேலுவிடம் இயக்குநர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் விளக்கம் கேட்டுள்ளது.
வடிவேலு அந்தப்படத்தில் நடிக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை இருக்கும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அண்மையில் வடிவேலு அளித்த பேட்டியொன்றில் இயக்குநர் ஷங்கரைக் கடுமையாகத் திட்டி இருந்தார்.
இந்நிலையில் இவர்களுக்குள் மோதல் வந்ததற்கான காரணம் என்னவென்பது இப்போது கசிந்திருக்கிறது.
இயக்குநர் சிம்புதேவன் வடிவேலுவை பின்னணி பாட வைத்து ஒரு பாடலை உருவாக்கினாராம். வடிவேலும் மிகவும் ரசித்து அந்தப்பாடலைப் பாடியிருந்தாராம்.
பாடல் பதிவு முடிந்து சில நாட்கள் கழித்து அதன் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
அந்தப்பாடல் காட்சியில் நடிக்க வடிவேலு தயாராகி கேமிரா முன்னால் நின்ற நேரத்தில் அந்தப் பாடல் ஒலித்திருக்கிறது. அதைக் கேட்ட வடிவேலுவுக்கு அதிர்ச்சி.
காரணம், அந்தப் பாடலை வேறொருவர் பாடியிருந்தாராம்.
உடனே சிம்புதேவனைக் கூப்பிட்டுக் கேட்டிருக்கிறார் வடிவேலு. அதற்கு, சிம்புதேவன், நான் விருப்பப்பட்டுத்தான் உங்களைப் பாட வைத்தேன். ஆனால் ஷங்கர் சார், இது நன்றாக இல்லை வடிவேலு பாடியது வேண்டாம். வேறொருவரைப் பாட வையுங்கள் என்று சொல்லிவிட்டார். அதனால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னாராம்.
சும்மா இருந்த என்னைக் கூப்பிட்டு பாட வைத்தது நீங்கள். இப்போது எனக்கு ஒரு தகவல் கூடச் சொல்லாமல் நீங்களாக மாற்றுவீர்களா? என்று கேட்டதில் தொடங்கிய சிக்கல் இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
இவ்விசயத்தில் வடிவேலுவும் சிம்புதேவனும் ஒத்த கருத்தில் இருக்கிறார்கள். ஷங்கரின் பிடிவாதத்தால் மட்டுமே சிக்கல் நீடிக்கிறது என்றும் சொல்கிறார்கள்.











