விமர்சனம்

சட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்

மென்பொருள் துறையில் பணியாற்றும் நாயகன் ஜெய்,ஓர் அமைச்சரின் மகளைக் காதலித்து கரம்பிடிக்கிறார்.அந்த அமைச்சர், மகள் திருமணத்தை முறித்து இன்னொரு திருமணம் செய்ய முனைகிறார்.அதோடு காதல்மண இணையர் தேனிலவுக்குச் சென்ற இடத்தில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.இவ்விரண்டையும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றிற்கான விடையாக வந்திருக்கிறது சட்டென்று மாறுது வானிலை.

நாயகனாக நடித்திருக்கும் ஜெய்,தன் வழக்கமான நடிப்பினாலேயே இரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.இந்தப்படத்தில் ஒரு மாறுதலுக்காக நடிகர் விஜய் போன்று நடிக்க முயன்றிருக்கிறார்.அதற்காக படத்தில் அவரை விஜய் இரசிகர் என்று வைத்திருக்கிறார்கள். விஜய் போல் நடித்திருப்பது சில இடங்களில் பலமாகவும் பல இடங்களில் பலவீனமாகவும் இருக்கிறது.காதல் காட்சிகளில் நாயகியுடன் கூடுதல் நெருக்கம் காட்டியிருக்கிறார்.

நாயகி மீனாட்சிக்கு அழகைக் காட்டி இரசிகர்களை ஈர்ப்பது மட்டுமின்றி நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம்.காதலி,மனைவி,மகள், பாதிக்கப்பட்ட பெண் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வேடம்.சரியாகச் செய்திருக்கிறார்.

ரவுடியிடம் பணம் வாங்கிக் கொடுத்து சிக்கலில் சிக்கும் வேடமேற்றிருக்கும் யோகிபாபு,அதில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கிறார் கேஜிஎஃப் புகழ் இராமச்சந்திர ராஜு.படத்தில்,அவர் செய்யும் வேலைகளும் அதில் அவருடைய நடிப்பும் நடுங்க வைக்கின்றன.அமைச்சராக நடித்திருக்கும் அஜய்யும் வில்லத்தனத்தில் வியக்க வைத்திருக்கிறார்.

ஸ்ரீமன்,சத்யன்,ஆதித்யா கதிர் ஆகியோர் வேடங்களும் அவர்கள் நடிப்புகளும் பொருத்தம்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில்,ஜெய் மீனாட்சி இணையரின் இளமைத் துள்ளல்கள் காட்சிகளாகக் கவர்கின்றன.வெளியில் செல்லும் இணையருக்கு எச்சரிக்கையூட்டும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளுக்கு இவருடைய ஒளிப்பதிவு கூடுதல் பயம் காட்டுகிறது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம்.பின்னணி இசை அளவாக அமைந்து படத்துக்கு இதம் சேர்க்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் பாபு விஜய்.ஏழைப்பையனும் பணக்காரப் பெண்ணும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டால் என்னென்ன சிக்கல்கள் வருமென்ற பழைய கதைக்குள்,பல்வேறு அம்சங்களை இணைத்திருக்கிறார்.அதன்மூலம், திரைக்கதையைப் புதிதாக்கியிருக்கிறார்.

முதல்படத்தையே சமுதாய அக்கறையோடு எழுதியிருப்பதும்,அதற்கு,திரைமொழியில் எவ்விதக் குறைவும் வந்துவிடக்கூடாது என்கிற விழிப்போடும் உழைத்திருப்பதை உணரமுடிகிறது.

– கதிரோன்

Related Posts