கமலி ப்ரம் நடுக்காவேரி கதை உருவானது எப்படி ?- இயக்குநர் சொல்லும் சுவாரசிய தகவல்
‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.
நிகழ்வில் தயாரிப்பாளர் துரைசாமி பேசும்போது,
ஒரு படம் தயாரித்தால் அது நல்ல திரைப்படமாகத் தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குநரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,
சேலம் மாவட்டம் சின்னனுர் கிராமத்தில் இருந்து வந்தவன்.பொருளுக்காகப் பேசுவது, காரியத்திற்காகப் பேசுவது குறைந்திருப்பது கிராமப் புறங்களில் தான். நாம் அனைவரும் உலகத்திற்குள் அடங்கிய கிராமம் தான்.
நான் எப்போதும் என்னுடைய அறையில் அமர்ந்துதான் பாடல்கள் எழுதுவேன். ஆனால், இப்படத்திற்கு இயக்குநர் அறையில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
‘நீரில் மின்னல்களாய்’ என்ற வரி எனக்கு மிகவும் பிடித்த வரி. என்னைப் பொறுத்தவரை பாடல்களின் வரிகள் காட்சியிலும், கேட்பதற்கும் அர்த்தம் மிகுந்ததாக ஒரு பாதிப்பு இருக்க வேண்டும் என்றார். மற்ற கவிஞர்கள் யுகபாரதி, மதன் கார்க்கி எழுதிய பாடல்களும் மிகவும் பிடித்திருந்தது.
நடிகை ஸ்ரீஜா பேசும்போது,
தேனியில் பிறந்து வளர்ந்ததால் இப்படத்தில் என்னைச் சுலபமாக இணைத்துக் கொள்ள முடிந்தது. இந்தத் தருணத்தில் ‘நக்கலைட்ஸ்’ யு-டியூப்- க்கு நன்றி கூற விரும்புகிறேன். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் வள்ளி. அந்தப் பாத்திரத்தில் நடிக்க என்னுடைய தோழியை உதாரணமாக எடுத்துக் கொண்டேன்.
ரேகா சுரேஷ் பேசியது:
என்னுடைய சொந்த ஊரே சென்னை. தாத்தா பாட்டி ஊர் கிருஷ்ணகிரி. இப்படத்தை இயக்குநர் ரசித்து செதுக்கியிருக்கிறார். பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், இப்படத்தில் அம்மா என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று வரையறுத்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தது வரும் வரை விடமாட்டார்.
நடிகை அபிதா பேசும்போது,
இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நேத்ரா. நேர்மறை மற்றும் எதிர்மறை கலந்த கலவையாக இருக்கும் என்னுடைய கதாபாத்திரம்.
படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் பேசும்போது,
இயக்குநர் என்னிடம் முழுக் கதையைக் கூறவில்லை. ஒரு வரியைத் தான் கூறினார். சில காட்சிகள் மட்டும் தான் கூறினார். அதுவே எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. படத்தொகுப்புப் பணியின் போது எந்த அழுத்தமும் இல்லாமல் அமைதியாகச் செய்ய முடிந்தது. இப்படத்தின் பள்ளி, மற்றும் கல்லூரிக் காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். குறிப்பாகக் காதல் காட்சிகள் வெகுளித்தனமாக இருக்கும்.
கல்லூரி மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் அளவிற்கு இருக்கும் என்றார்.
இமான் அண்ணாச்சி பேசும்போது,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தேன். இப்படத்தின் மூலம் அருமையான கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்து கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் நீங்கள் எல்லாவற்றையும் எதிர்பார்க்கலாம். ‘கயல்’ ஆனந்தி சிறப்பாக நடித்திருக்கிறார். இப்போதைக்கு இருக்கும் சூழலில் திரையரங்கைப் பற்றி நாம் நன்கு அறிவோம். ஆகையால், இப்படம் நிச்சயம் வெற்றிபெறும். உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் நடிப்பு வரும்வரை விடாமல் வேலை வாங்கியிருக்கிறார்கள் என்றார்.
இசையமைப்பாளர் தீனதயாளன் பேசும்போது,
இப்படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த அபுண்டு ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குநருக்கும் நன்றி. இப்படத்தின் கதை கூறியதில் இருந்து இப்போது வரை விறுவிறுப்பு குறையவில்லை. அந்த அளவிற்கு கதை கூறும்போதே இயக்குநர் விறுவிறுப்பை ஏற்படுத்தி விட்டார் என்றார்.
இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசும்போது,
நான் திருச்சி மாவட்டம் பச்சைமலை அடிவாரம். என்னுடைய வாழ்க்கையில் அனைத்துப் பக்கங்களிலும் தூணாக இருந்தவர்கள் என்னுடைய அண்ணன் மற்றும் அண்ணி தான். நான் தான் ஆண் கமலி. என்னுடைய பெண் வர்க்கம் தான் கமலி கதாபாத்திரம். அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவர் தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அந்த இடம் தான் இப்படத்தின் கருவாகத் தோன்றியது. நாயகி படமாக எடுத்தால்தான் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இப்படத்தில் கமலி காதல் செய்யும் போது எப்படி இருப்பாள்? மகளாக எப்படி இருப்பாள்? என்று ஒவ்வொரு காட்சியையும் நான் எப்படி எதிர்பார்க்கிறேனோ அப்படியே நடித்துக் கொடுத்தார்.
அபுண்டு ஸ்டூடியோஸ்-ன் துரைசாமி என்னுடைய கதையைக் கேட்டதும் என் பொறுப்பிலேயே அனைத்தையும் விட்டுவிட்டார்கள்.
இந்தக் கதை எழுதும்போது எனக்கு நினைவிற்கு வந்தது ஆனந்தி மட்டும்தான். ஆனால், ஆனந்தி ஒப்பந்தமானது எளிதாக நடக்கவில்லை. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் வருகிறோம். கதை கேளுங்கள் பிடித்தால் பணியாற்றுங்கள் என்று கூறினோம். உடனே, வாரங்கல் சென்று கதை கூறினோம். கதை கேட்ட அடுத்த நிமிடம் இப்படத்தை எப்போது எடுக்கலாம். நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முறையிலேயே நடித்துக் கொடுத்தார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கமலியாகவே வாழ்ந்தார். அவருக்கு மிக்க நன்றி.
பிரதாப் போத்தனிடம் கதை கூறியதும் மிகவும் ஆர்வமாகப் பணியாற்றினார். பெரிய மனிதருக்குள்ளும் குழந்தைத்தனம் இருக்கும் என்பதை அவரிடம் கண்டேன்.
இப்படத்தில் நடிகர்கள் மட்டும் அல்ல அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள்.
இசையமைப்பாளர் தனக்கென்று இசையமைக்காமல், படத்திற்கு என்ன தேவையோ அதைச் செய்தார் என்றார்.
‘கயல்’ ஆனந்தி பேசும்போது,
என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்துப் பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.
இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.











