விஜய்சேதுபதியின் மகாராஜா பட இயக்குநர் நித்திலன் நேர்காணல்

குரங்கு பொம்மை பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மம்தா மோகன்தாஸ், இயக்குநர் பாரதிராஜா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, அருள்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் மகாராஜா.
ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ’காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இவர் ’காந்தாரா’ படத்திற்கு முன்பு நித்திலனின் ‘குரங்கு பொம்மை’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வி.செல்வகுமார் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.
தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மகாராஜா’ திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில்,படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் மற்றும் நாயகி மம்தா மோகன்தாஸ் ஆகியோர் ஜூன் 1 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது இயக்குநர் நித்திலன் கூறியதாவது..…
மகாராஜா யார்?
படத்தில் சேது அண்ணாவின் பெயர் மகாராஜா, அவர் வாழ்க்கையும் அதுபோல் தான் இருக்கும். அவர் சிகை அலங்காரக் கலைஞராக நடித்திருக்கிறார்.
படத்தின் கதை பற்றி..?
ஒரு சாதாரண மனிதர், பெரிய படிப்பு அறிவு இல்லாதவர், அவர் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்தால் அதை அவர் எப்படி எதிர்கொள்வார்?அதன் மூலம் தான்யார்? என்பதை அவர் அறிந்துகொள்கிறார். இதை மர்மம் கலந்து சொல்லியிருக்கிறோம்.
சிகை அலங்காரத் தொழிலைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
வாழ்க்கையில் நிறையப் பேரைச் சந்திப்போம்,அவர்களில் சிலர் மட்டும் நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பார்கள். அப்படி நான் பார்த்த மனிதர்களைக் கொண்டு இந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்தேன்.மற்றபடி சிலை அலங்கார தொழிலாளர்கள் சாதி பற்றி எதுவும் பேசவில்லை.
படத்தின் முன்னோட்டத்தில் இலட்சுமி யார்? என்கிற கேள்வி பெரிதாகியிருக்கிறதே? அந்த இலட்சுமி யார்?
விஜய் சேதுபதி தேடும் லட்சுமி யார்? என்ற கேள்விக்கு நான் இப்போது பதில் சொல்ல முடியாது.அந்த சஸ்பென்ஸை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள். இலட்சுமி என்பது பெண்ணா அல்லது ஒரு பொருளா என்பது அவரவர் பார்வைக்கு உட்பட்டது.இரசிகர்கள் இலட்சுமியை எப்படிப் பார்க்கிறார்களோ அப்படியே விட்டுவிடுகிறேன்.
இலட்சுமி யார்? என்ற சஸ்பென்ஸ் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பயணிக்கும். ஆனால், படத்தின் மிகப்பெரிய பலமே அந்த ஒரு கேள்வி மட்டும் அல்ல, அதைச்சுற்றி மேலும் பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கின்றன. அவை அனைத்தும் முழுப் படத்தையும் சஸ்பென்ஸாக நகர்த்திச் செல்லும். நிச்சயம் இந்தப்படம் இரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தும்.
இது விஜய்சேதுபதியின் 50 ஆவது படம். அது பற்றி?
இந்தப்படத்தை நான் இயக்கும் போது விஜய்சேதுபதி அண்ணாவின் 50 ஆவது படம் என்று தெரியாது.அவரிடம் கதை சொன்ன போது கூடத் தெரியாது.படப்பிடிப்பு தொடங்கிய போது தான் தெரியும். அனைத்துப் படத்தையும் கவனமாகத் தான் செய்வேன்.சேது அண்ணாவின் 50 ஆவது படம் என்பதால் கொஞ்சம் பொறுப்பு கூடியிருக்கிறது.
படம் பற்றி விஜய்சேதுபதி என்ன சொன்னார்?
படம் பார்த்தவர்கள் அனைவரும் படம் நன்றாக வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.சேது அண்ணாவும் குடும்பத்துடன் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னார். அதோடு,படத்தில் அவரையும் அவருக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார்.இது மகிழ்ச்சியாக இருந்தது.
படத்தில் இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்பை நடிக்க வைத்தது பற்றி..?
திரையுலகில் எனக்குப் பிடித்தவர்களில் அவரும் ஒருவர். அதோடு அந்தக் கதாபாத்திரத்துக்கும் அவர் பொருத்தமாக இருந்ததார்.அதனால் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். முதலில் அவரிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டேன். பிறகு அவரது தேதியில் மாற்றம் ஏற்பட்டதால் அவர் நடிக்க முடியாத சூழல் உருவானது. இதனால், வேறு சில நடிகர்களைப் பார்த்தோம்.ஆனால் யாரும் செட்டாகவில்லை. இறுதியில் அனுராக் சாரே அந்த வேடத்தில் நடித்தது மகிழ்ச்சி. பாராதிராஜா சாரும் எனக்கு பிடித்தவர்.அவரையும் நடிக்க வைத்திருக்கிறேன். குரங்கு பொம்மை படம் போல் அவரது வேடம் இல்லை என்றாலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.