கமல் மீது காவல்துறையில் புகார் – விளம்பரம் செய்ய ஒரு அளவில்லையா?
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்குபெற்று தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா.
இவர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால்,அந்த வீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து, மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தது. அதில், மதுமிதா தனக்கு வர வேண்டிய பணத்தை உடனடியாகக் கேட்டு மிரட்டுவதாகவும், கொடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றிப் பேசிய மதுமிதா, தன் மீது விஜய் டிவி பொய்யான புகார் அளித்திருக்கிறது. அவர்கள் தனக்கு தர வேண்டிய பணத்தை குறிப்பிட்ட தேதியில் தருவதாகச் சொன்னார்கள், அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். பிறகு ஏன் என் மீது இப்படி பொய்ப் புகார் கொடுத்தார்கள், என்று தெரியவில்லை என்று கூறியதோடு, இந்த விவகாரத்தில் கமல் சார் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டார்.
அநத சம்பளப் பிரச்சினை என்னவானது? என்று தெரியவில்லை.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் தன்னைக் கொடுமை படுத்தியதாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார்.
தபால் மூலம் அவர் அளித்த புகாரில், சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அதை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல் கண்டிக்கவில்லை என்று தெரிவித்திருப்பதோடு, தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி 56 ஆவது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் மதுமிதா தெரிவித்துள்ளார்.
ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக, காவல்துறையில் புகார் கொடுப்பதும் அது அப்படியே கண்டுகொள்ளாமல் விடப்படுவதும் வழக்கமாகிறது. இதிலிருந்து அந்நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் விதமாகவே இந்தக் காட்சிகள் நடக்கின்றன என்கிற விமர்சனங்களும் வருகின்றன.











