September 14, 2026
செய்திக் குறிப்புகள்

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற அசுரன்

சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று (டிசம்பர் 19) சிறந்த தமிழ்ப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

அவற்றின் விவரங்கள்…

சிறந்த படம் – முதலிடம் பிடித்தது ஒத்தசெருப்பு.

தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான முதல் முயற்சி.கதை, திரைக்கதை, உள்ளிட்ட துறைகள், தொழில்நுட்பத்தைக் கதை சொல்லலுக்காகக் திறம்படக் கையாண்டது, திரையில் தோன்றாத சக கதாபாத்திரங்களை மனத்திரையில் கற்பனை செய்துகொள்ளும் ஜாலத்தை இறுதிவரை சாத்தியமாக்கியது.முக்கியமாக, தனிநபர் நடிப்பில் அழுத்தமான முத்திரையைப் பதித்தது, சிறு முதலீட்டில் மிகச்சிறந்த திரைப்படம் செய்ய இளைஞர்களை ஊக்குவித்தது ஆகிய காரணங்களுக்காக ‘ஒத்த செருப்பு – சைஸ் 7’ சிறந்த திரைப்படத்துக்கான முதலிடத்தைப் பெறுகிறது.

இந்த விருதுக்காக படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு இலட்சமும் இயக்குநருக்கு இரண்டு இலட்சங்களும் வழங்கப்பட்டன. இரண்டையும் இயக்குநர் பார்த்திபன் பெற்றுக்கொண்டார்.

சிறந்த படம் – இரண்டாவது இடத்தை இரண்டு படங்கள் பகிர்ந்துகொண்டன. அவை….

தமிழின் முதல் முழுமையான தொகுப்புத் திரைப்படம்.மனிதஉறவுகளின் மேன்மையை, புதிய கோணங்களில் பலநிலைக் காதலை அணுகிய முறையிலும், கதாபாத்திர வடிவமைப்பில் சமரசமற்ற நேர்மையைக் கடைபிடித்த வகையிலும்.. பார்வையாளரிடம் உடனடியாகவோ காலப்போக்கிலோ மன மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த திரை அனுபவத்தைத் தருவதாலும்.. ஒரு Anthology திரைப்படம் கோரும் நேர்த்தியான திரை ஆக்கத்தை சாத்தியமாக்கிய வகையில் சில்லுக்கருப்பட்டி திரைப்படமும்…

முற்றிலும் புதியகதைக் களத்துக்காகவும்..உன்னதமான சிறந்த கதைக்காகவும்…திட்டமிட்டோ, எதிர்பாராமலோ முதன்மைக் கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் பயணம் நம்பகமாகவும். கதாபாத்திரங்கள் வாழும் நிலத்தின் சமகால சமூக வாழ்க்கையும், பயணவழியில் எதிர்பாராத தருணங்கள் தரும் தரிசனமும் உணர்வூக்கத்துடன் பதிவாகியிருப்பதால் ‘பக்ரீத்’திரைப்படமும் சிறந்த இரண்டாவது படத்துக்கான இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.

சிறப்பு ஜூரி விருது பெற்ற திரைப்படம்…

சாதிவேரின் ஆழத்தைப் பதிவு செய்த எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை சிறந்த முறையில் திரைக்கு கொண்டு வர முயற்சித்ததற்காகவும்..ஒடுக்கப்பட்ட மக்களை நுட்பமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆதிக்க வர்க்கத்தினரையும், சக மனித படுகொலைகளின் பின்னால் இருக்கும் புரையோடிய சாதிய வன்மத்தின் முகத்தையும் அடித்தட்டு மக்கள் பக்கம் நின்று, அவர்களது நியாயத்தை துணிச்சலுடன் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்கத்துக்காகவும்…நட்சத்திர நடிகரை, கதாபாத்திர நடிப்புக்காக பயன்படுத்திக்கொள்ளும் தொடர் முனைப்புக்காகவும் ‘அசுரன்’ திரைப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறனுக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டு  வழங்கப்படுகிறது.

அதோடு,புதியக் கதைக் கரு,முதன்மை மற்றும் துணைக் கதாபாத்திரங்களை திரைக்கதை கோரும் முழுமையுடன் வடிவமைத்தது…தர்க்கமும் எளிமையும் கொண்ட சிறந்த உரையாடல் மற்றும் திரைக்கதைக்காக, ஜீவி திரைப்பட எழுத்தாளர்கள் பாபு தமிழ் – வி.ஜே.கோபிநாத் இருவருக்கும் ஜூரிஸ் ஸ்பெஷல் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

முண்டாசுப்பட்டி ,ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குநர் ராம்குமாருக்கு, அமிதாப்பச்சன் யூத் ஐகான் அவார்டு வழங்கப்பட்டது.

 

Related Posts