ஆலகாலம் – திரைப்பட விமர்சனம்
முதலில் கொண்டாட்டமாக அறிமுகமாகி பின்பு திண்டாட்டமாகி வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளும் மதுப்பழக்கம் குறித்த அபாயத்தைச் சொல்லும் படங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சரியான பெயரோடு வந்திருக்கும் படம் ஆலகாலம்.
குக்கிராமத்து ஏழை மக்களுக்கும் நம் மகன் நகரத்தில் பெரிய கல்லூரியில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கும்.அப்படிப் படிக்க வைப்பதற்காக அவர்கள் படும்பாடுகள் சொல்லி மாளாதவை. இப்படத்திலும் கிராமத்து ஏழைத்தாய் ஈஸ்வரிராவ் தன் மகனை பெரியகல்லூரியில் படிக்க வைக்கிறார்.அவரும் நன்றாகப் படிக்கிறார்.அவருடைய படிப்பறிவைக் கண்டு வியந்து அவரை ஒரு பெண் காதலிக்கும் வகையில் இருக்கிறார்.அவர் வாழ்வில் மது நுழைவதும் அதனால் ஏற்படும் கொடும் விளைவுகளும்தாம் படம்.
கிராமத்து அப்பாவி மாணவராக அனைவரையும் கவரும் வகையில் நடித்திருக்கிறார் ஜெயகிருஷ்ணா.மதுப்பழக்கத்துக்கு ஆளான பின்பு அவருடைய நடிப்பு வியக்க வைக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் சாந்தினிக்கு இளமைத்துள்ளல், குடும்பப் பொறுப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்துகிற வேடம்.இரண்டிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரிராவின் சிறப்பான நடிப்பு பல இடங்களில் கண்கலங்க வைப்பதோடு படத்தின் கருத்தை மக்களிடம் ஆழமாகப் பதியவைக்கவும் செய்திருக்கிறது.
தங்கதுரை,தீபா சங்கர்,கோதண்டம் உள்ளிட்டோருக்கும் நல்ல வேடங்கள் அமைந்திருக்கின்றன.அதற்குத் தக்க நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கா.சத்தியராஜ்.புறக்காட்சிகளில் மட்டுமின்றி அகவுணர்வுகளையும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன், கதையையும் அது சொல்லும் கருத்தையும் சரியாக வெளிப்படுத்தும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.அவருடைய வேகமும் விவேகமும் படத்தை இரசிகர்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்கிறது.
என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையும் அளவாக அமைந்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் ஜெயகிருஷ்ணாதான் படத்தை இயக்கியிருக்கிறார்.தயாரிப்பாளரும் அவரே.
திரைக்கலை மூலம் ஒரு நல்ல கருத்தை மக்களுக்குச் சொல்லவேண்டும் என்கிற எண்ணத்தைச் செயல்படுத்த உழைத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.நடிகராகவும் வரவேற்புப் பெற்றிருப்பது கூடுதல் வெற்றி.
– இளையவன்











