அண்ணாத்த படப்பிடிப்பு ரஜினி மறுப்பு – பதட்டத்தில் படக்குழு
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார்.
இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.இதனால் 2020 தீபாவளி வெளியீடு என்பதும் தள்ளிப்போனது.
அதன்பின் மே 12 அன்று, இப்படம் 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியை நிறுவனம் அறிவித்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
நாளை முதல் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதோடு, விரைவில் திரைப்படப்படப்பிடிப்புகள் தொடங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சு வந்ததாம், அதுகுறித்து ரஜினியிடம் கேட்டபோது, கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்த பின்புதான் நான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம்.
இதனால், அண்ணாத்த படப்பிடிப்பைத் திட்டமிடுவதில் தடை ஏற்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தக் குழுவினரும் பதட்டத்தில் இருக்கிறார்களாம்.












