செய்திக் குறிப்புகள்

ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கிறது ஜாம்பி – படக்குழு பெருமிதம்

மோ படத்தை இயக்கிய புவன் நல்லான் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருக்கும் படம் ஜாம்பி.
எஸ் 3 பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 21) மாலை நடைபெற்றது.

நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்தி.கே. பேசும்போது,…

‘ஜாம்பி’ மாதிரியான படம் எடுப்பது எளிதல்ல. ஹாலிவுட் படத்தில் இருக்கும் தொழில்நுட்ப வசதி இங்கு கிடையாது. ஆனால், அதே தரத்தில் இந்தப் படத்தை எடுத்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரு மாற்றத்திற்காக குத்துப் பாடல் வைத்திருக்கிறோம். பார்ட்டி பாடல் நன்றாக வந்துள்ளது என்றார்.

சிறப்பு விருந்தினர் றெக்க பட இயக்குநர் சிவா பேசும்போது,…

ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது இடையிடையே சிறு சிறு நகைச்சுவை இருக்கும். அதேபோல், இப்படத்திலும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக அமைந்திருந்த நகைச்சுவையைக் கண்டு களித்தேன். யோகிபாபுவின் நகைச்சுவை நன்றாக அமைந்திருக்கிறது என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசும்போது,,,,

நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாகச் சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அபிமான நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் அமைந்த சண்டைக் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு பட்டப்பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல் தான் இந்தப் படத்திற்கு ‘இசை காட்டேரி’ என்று வைத்துக் கொண்டேன் என்றார்.

நடிகை யாஷிகா ஆனந்த் பேசும்போது,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி தான் முக்கியமானது. அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் கேமராவை வைத்து கடினமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அதேபோல் நடன இயக்குநர் எனக்கேற்றவாறு நடனம் அமைத்துக் கொடுத்தார். இரவு பகலாக படப்பிடிப்பு நடக்கும். இருப்பினும் அனைவரும் ஒரு குடும்பம் போல பணியாற்றினோம். மேக்கப் போடுவதற்கு 3 மணி நேரம் ஆகும் என்றார்.

இயக்குநர் பொன்ராம் பேசும்போது,

வசந்தும் முத்துக்குமாரும் எனது நண்பர்கள். இப்படத்தை நானும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் இயலவில்லை. பேய்ப் படத்திற்கு நகைச்சுவை நன்றாக இருந்தால் தான் படம் வெற்றியடையும். அந்த வகையில் இந்தப் படத்தில் பேய்ப் படமாக இல்லாமல் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இன்று யுடியூப் அனைவரையும் சென்றடைந்திருக்கிறது. என்னுடைய மூன்று படங்களுக்கு விஷ்ணு பணியாற்றியிருக்கிறார். இப்படம் ஒரு புது முயற்சி என்று கூறலாம். இதுபோல அவர்கள் பல படங்கள் எடுக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் புவன் நல்லான் பேசும்போது,

என்னுடைய மோ படத்துக்கு நல்ல வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யோகிபாபு எனக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஒரு நல்ல கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி. ‘ஜாம்பி’ மாதிரியான படம் எடுக்கும்போது தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவி பெரும்பங்கு வகிக்கும். அது இந்தப் படத்தில் எனக்கு நன்றாக அமைந்திருக்கிறது.

தயாரிப்பாளர் வசந்த் பேசும்போது,

யோகிபாபு எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் இந்த விழாவிற்கு வர இயலவில்லை. இப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்களே என்றார்.

விழாவின் இறுதியில், ‘றெக்க’ படத்தின் இயக்குநர் சிவா இசைத் தகட்டை வெளியிட்டார். இயக்குநர் பொன்ராம் டிரெய்லரை வெளியிட்டார்.

Related Posts