செய்திக் குறிப்புகள்

சிறை படத்தின் வெற்றி ஒரு முன்னுதாரணம் – படக்குழு பெருமிதம்

விக்ரம் பிரபு,அறிமுக நடிகர் எல்.கே.அக்‌ஷய்குமார் உட்பட பலர் நடிப்பில்,அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப்படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, இரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில்,உருவான இப்படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது.

பொதுமக்கள்,சினிமா இரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் மார்ச் 13 அன்று நடைபெற்ற, “சிறை” திரைப்பட வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினில்

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,

இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஒரு காட்சியை எடுக்கும்போது அது எப்படி வரும் என்று தெரியாமல் இருந்தாலும்,நம்பிக்கையுடன் அதை எடுப்போம்.அந்த நம்பிக்கையில்தான் இந்தபடம் முழுவதும் உருவானது.இப்படிப்பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை திரைப்படமாக உருவாக்குவது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே திரையில் காட்டினால் அது சினிமாவாக வேலை செய்யாது.அதேநேரத்தில் சினிமாவாக மாற்றும்போது அதன் உண்மைதன்மையும் காப்பாற்றவேண்டும்.அந்த சமநிலையை வைத்துப் படம் உருவாக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்முறை.
இப்போது பலர் மலையாள சினிமாவை எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள்.ஆனால் அந்தமாதிரியான படங்களை நம் திரையரங்குகளில் ஓடவைப்பது சுலபமல்ல.பலநேரங்களில் அந்தவகை படங்களை நாம் ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறோம்.ஆனால் தமிழ் இரசிகர்கள் திரையரங்கில் இரசிக்கும் வகையில் ஒரு படமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது.
அந்தமுயற்சியில் எங்கள் குழுவில் உள்ள அனைவரும் பெரிய ஆதரவாக இருந்தார்கள்.ஒளிப்பதிவாளர்,எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்தபடத்தை சிறப்பாக உருவாக்க உழைத்தார்கள்.
தயாரிப்பாளர் லலித்சார் இந்தபடத்தின் மிகப்பெரிய பலம்.இந்தகதையை நம்பி,அதில் தனது மகனையும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் பெரியவிஷயம்.ஒரு புதிய இயக்குநரையும்,ஒரு புதிய முயற்சியையும் நம்பி இந்தபடத்தை தயாரித்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.
இந்தபடத்தின் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.இப்படிப்பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்தபடம் ஒரு உதாரணமாக இருக்கிறது.மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர்.அவர்களின் உழைப்பால்தான் இந்தபடம் இந்தஅளவிற்கு வந்துள்ளது. இந்தபடம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவிய பாராட்டுக்களால்தான் மக்கள் அதிகமாக வந்து பார்த்தார்கள்.அந்த வார்த்தைகள் மூலம் பரவிய வரவேற்பு இந்தபடத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
இந்தபடத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்த இரசிகர்களுக்கும்,தொடர்ந்து ஊக்கமளித்த பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி என்றார்.

இயக்குநர் தமிழ் பேசியதாவது..,

இந்தபடத்தின் வெற்றிக்கு பலரின் பெரிய பங்களிப்பு இருக்கிறது.முதலில் இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும்,தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.அவர்களின் முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால்தான் இந்தபடம் உருவாகி வெற்றியை பெற்றுள்ளது.இப்படத்தை மக்களிடம் எடுத்துச்சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
இயக்குநர் சுரேஷ்சார் குறித்து நான் தனியாக நன்றி சொல்லவேண்டும்.ஒரு நல்லகதையை மிகச்சிறப்பாக திரையில் கொண்டுவந்து,அதை மக்களுக்கு சேர்க்கும் திறன் அவருக்கு உள்ளது.டாணாக்காரன் படம் வெளியாக சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.ஆனால் இந்தபடம் இப்போது வெளியானபோது,அது எனக்கு புதிய உணர்வை தந்தது.இப்படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கானதாக தோன்றுகிறது.இந்த நான்கு ஆண்டுகளில் பல சவால்கள் இருந்தன.சிலசமயங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகளும் வந்தன.ஆனால் அந்த எல்லா சிரமங்களையும் கடந்து இந்தபடம் இரசிகர்களிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தியசினிமாவே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு இப்போது தமிழ்சினிமா வளர்ந்து வருகிறது.அதேநேரத்தில் மலையாள சினிமாவையும் நாம் பெரிதும் பாராட்டுகிறோம்.அங்கு பல திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடுதான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தரவேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்கவேண்டும்.
எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக வாசித்து, நல்ல கதைகளை திரைப்படங்களாக மாற்றவேண்டும். ஏனெனில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல,அது இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது.அதனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களையே மட்டும் நம்பாமல், திரையரங்குகளுக்காக உருவாகும் பெரியபடங்களையும் தொடர்ந்து செய்யவேண்டும்.இரசிகர்கள் திரையரங்குகளில் வந்து இரசிக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை உருவாக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்,நன்றி என்றார்.

நடிகர் எல்.கே.அக்‌ஷய்குமார் பேசியதாவது..,

இந்தமேடையில் எனது முதல்படத்திற்காக நின்றதும், இப்போது அதேமேடையில் அந்தபடம் வெற்றி பெற்றதற்காகப் பேசுவதும் எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.முதலில் பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அதேபோல் என் குடும்பத்தினருக்கும்,குறிப்பாக என் டீமுக்கும் நன்றி சொல்லவேண்டும்.என் டீம்தான் என் குடும்பம். அவர்களின் ஆதரவால்தான் நான் இன்று இந்தமேடையில் நிற்கிறேன்.
ஒரு புதியகலைஞராக நடித்தபிறகு,இரசிகர்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும்.ஆனால் எனது முதல்படத்திலேயே நல்லவரவேற்பை எனக்கு வழங்கிய இரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் என் அப்பா. எங்களுக்குள் சில சமயங்களில் வாக்குவாதங்களும் நடந்திருக்கிறது.ஆனால் அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி,மனதளவில் வலிமையாக இருக்கச்செய்தார்.அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.
இயக்குநர் சுரேஷ்சார் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது மிகவும் பெரியவிஷயம்.இப்படி ஒரு சிறப்பான அறிமுகம் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை என்பதை நான் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளேன்.அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இப்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்தும் எனக்கு பாராட்டுச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.மேலும் இந்தபடத்தில் நடித்த அனைவருக்கும்,குறிப்பாக விக்ரம்பிரபு சாருக்கு என் நன்றி.அவரின் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதேபோல் தயாரிப்புகுழுவில் இருந்த அருண்,யோகேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.என் முதல்படத்திற்காக அவர்கள் என்னை நம்பி இந்தவாய்ப்பை வழங்கியது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம்.இந்தவாய்ப்பை வழங்கிய தமிழ்சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தவாய்ப்பைக் கொடுத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி என்றார்.

நடிகர் விக்ரம்பிரபு பேசியதாவது..,

இன்றைய இந்த விழாவில் கலந்துகொண்டு, இப்படத்திற்கு கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னர் என் அப்பாவின் அவார்ட் விழாக்களுக்கு இரண்டுமுறை சென்றிருக்கிறேன்.ஆனால் இன்று நான் நடித்த ஒருபடத்திற்கு இவ்வளவு கேடயங்கள் கிடைப்பதை நேரில் பார்க்கும்போது அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.
ஒருபடம் வெற்றி பெறவேண்டும் என்றால் அது ஒரு டீம்வொர்க் என்பதற்கு சிறை படம் ஒரு உதாரணம். இந்தமேடையில் விருது பெற்றவர்களும்,இன்னும் பெறவிருப்பவர்களும் அனைவரும் இந்தபடத்தை தங்களது வாழ்க்கைபோல உழைத்து உருவாக்கியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தபடம் 2025 டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதன்பிறகு படம் நல்லவரவேற்பைப் பெற்றது.அதற்குப்பிறகு ‘டாணாக்காரன்‘படத்திற்கு மாநில விருது கிடைத்த செய்தி வந்தபோது,அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.எனக்கு இரட்டை சந்தோஷமாக அமைந்தது.
இந்த வெற்றிக்கு பலர் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் லலித்குமார் சார் ஒரு நல்ல தயாரிப்பாளராக இந்தபடத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தார்.இந்தபடம் எனது 25வது படம் என்பதும் எனக்கு ஒரு சிறப்பு.
நான் ஒரு நடிகரின் மகன்,பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன்.பள்ளி நாட்களிலேயே சிலசமயம் அந்த அடையாளம் காரணமாக தனியாக உணர்ந்த தருணங்களும் இருந்தன.அதனால் பலவிஷயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவுக்கு சென்றபோதுதான் என்னை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.அதற்குப்பிறகுதான் திரும்பி வந்து சினிமாவிலேயே என் பாதையை உருவாக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன்.
என் முதல்படம் ‘கும்கி’ பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிக்குப்பிறகு ஒரு அழுத்தமும் வந்தது. ஆனால் அதைதாண்டி தொடர்ந்து நல்லபடங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.இந்தபயணத்தில் பல விமர்சனங்களும்,சவால்களும் இருந்தன.சிலர் பாராட்டினார்கள்,சிலர் விமர்சித்தார்கள்.ஆனால் நான் என்னுடைய பாதையை தெரிந்துகொண்டு முன்னேறிக் கொண்டே வந்தேன்.
சினிமா என்பது திறமை,நேரம்,அதிர்ஷ்டம்,வாய்ப்பு ஆகியவை சேர்ந்த ஒரு துறை.அதில் பல சவால்களும் இருக்கும்.ஆனால் அந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுதான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன்.இப்போது இந்த 25வது படத்திற்குப் பிறகு,இது எனக்கு ஒரு புதியஆரம்பம் போல தோன்றுகிறது.இனிமேல் இன்னும் நல்லகதைகளைத் தேர்ந்தெடுத்து,நம் தமிழ்சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படங்களில் நடிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
என் பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.இந்தபடத்தின் வெளியீட்டு நாளில்,‘இது ஒரு டீம் வெற்றி’ என்று நான் சமூகவலைதளத்தில் பதிவிட்டேன்.இன்று அந்த டீமுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் நன்றி என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,

இன்றைக்கு இங்கே வந்து நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.பெரிய ஸ்டார்பவர் இல்லாத, ஒரு கதையை மட்டும் நம்பிய படம் திரையரங்குகளில் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல.இப்படிப்பட்ட ஒருபடத்தை நம்பி தயாரித்து,முழு ஆதரவுடன் நிற்கும் தயாரிப்பாளருக்கே முதலில் நன்றி சொல்லவேண்டும்.
படம் வெளியான பிறகும் தொடர்ந்து அதை புரொமோட் செய்து,சரியான முறையில் மக்களிடம் கொண்டு சென்றது மிகப்பெரிய விஷயம்.தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கையால்தான் இந்தபடம் கமர்ஷியல் ரீதியாகவும் பெரியவெற்றி பெற்றது என்று நான் நினைக்கிறேன். நான் படம் பார்த்தபிறகு அவரிடம் ‘படம் மிகவும் நன்றாக இருக்கிறது, நீங்கள் முதலீடு செய்த பணம் கண்டிப்பாக திரும்பவரும்’ என்று சொன்னேன்.ஆனால் அவர் வைத்திருந்த நம்பிக்கை அதையும் தாண்டி இருந்தது.உண்மையில் அவரது நம்பிக்கையை விட அதிகமாகவே இந்தபடம் ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றியை பெற்றது.
இந்தபடத்தில் இருக்கும் உண்மை,அதில் உள்ள உணர்வு,எல்லோரிடமும் பொதுவாக சென்றடைந்ததால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.இந்தபடத்தை இப்படியாக உருவாக்கிய இயக்குநர் சுரேஷின் முயற்சி மிகவும் சிறப்பு.உண்மையில் இது தமிழ் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அதை ஒரு திரைக்கதையாக மாற்றி,தனது பார்வையில் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்குவது சுலபமான விஷயம் அல்ல.அந்த பயணத்தில் பல சவால்கள் இருந்திருக்கும்.ஆனால் அதை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அவர் நிறைவேற்றியிருக்கிறார்.
அவரது வேலை செய்யும் விதம்,குழுவை ஒருங்கிணைக்கும் திறன்,சிக்கலான சூழ்நிலைகளையும் அமைதியாக கையாளும் திறன் ஆகியவை மிகவும் சிறப்பானவை.அதனால்தான் இந்தபடம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது.படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் அழகும்,நுட்பமும் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது.இந்தபடத்தில் நடித்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்தபடத்தை தமிழ்சினிமா இரசிகர்கள் ஏற்றுக்கொண்டது மிகவும் சிறப்பான விஷயம்.நான் எப்போதும் சொல்லும் விஷயம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் மெயின்ஸ்ட்ரீம் இரசிகர்கள் மிகவும் சிறந்த இரசனையுடையவர்கள்.இந்தமாதிரியான ஒரு முயற்சி வேறுமொழியில் எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற வெற்றியை அடைந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது.
இந்தபடத்தில் தமிழும் சுரேஷும் ஒருவருக்கொருவர் அளித்த மரியாதை மிகவும் சிறப்பானது.வெற்றி கிடைக்கும்போது ‘இதற்கு நான்தான் காரணம்’ என்று சொல்வது எளிது.ஆனால் எங்கும் அப்படிச் சொல்லாமல்,ஒருவருக்கொருவர் கௌரவம் அளித்திருப்பது மிகவும் நல்லவிஷயம்.
இந்தபடத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு,விமர்சகர்களும் பாராட்டுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இந்தகுழுவில் உள்ள பலரையும் அவர்கள் கல்லூரி முடித்துவந்த காலத்திலிருந்தே நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்களுடைய கலைத்திறன் எவ்வளவு என்பது தெரியாது.ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ‘இவ்வளவு நல்லா பண்ணுறாங்களா?’ என்று எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது.அது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
சுரேஷ் என்னுடன் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்தபோது ஒரு சாதாரண இயக்குநர்–உதவி இயக்குநர் உறவுதான் இருந்தது.ஆனால் காலப்போக்கில் அது ஒரு நல்லநட்பாக மாறியது.அவர் எதை எடுத்தாலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்துமுடிப்பார்.ஒரு விஷயத்தில் முழுநம்பிக்கை இருந்தால் அதில் முழுமையாக இறங்குவார்.முடியாது என்று நினைத்தால் நேராக சொல்லிவிடுவார்.அந்த நேர்மையும் அர்ப்பணிப்பும்தான் அவரது சிறப்பான குணம்.
இந்தபடத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.என் குழுவில் இருக்கும் இளைஞர்கள் இப்படி நல்லபடங்களை உருவாக்கும்போது அது எனக்கு பெருமையாக இருக்கிறது.அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட சிறந்த முயற்சிகளை செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன்.வெற்றி கிடைத்தபிறகு பல விஷயங்கள் நம்மை சுற்றி வரும். ஆனால் எப்போதும் நாம் ஆரம்பித்த இடத்தை மறக்காமல்,நிலையாக இருந்து,நம்மைப் போலவே இருக்க முயற்சி செய்யவேண்டும்.அதுதான் மிகமுக்கியம்.மீண்டும் ஒருமுறை இந்தபடத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமார் பேசியதாவது..,

முதலில் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.நாம் ஒரு படத்தை எடுத்து முடிப்பதுவரைதான் செய்யமுடியும். ஆனால் அந்தபடத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.அந்தவகையில் இந்தபடத்தை பற்றி நீங்கள் எழுதியதும்,பேசியதும்தான் இன்று இந்தபடத்தை மக்களிடம் பெரிய அளவில் சேர்த்திருக்கிறது.
பிரஸ் ஷோ முடிந்தபிறகு நீங்கள் பலரும் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசினீர்கள்.சிலர் அழுதபடியே இந்த படத்தைப்பற்றி கூறினீர்கள்.அந்த உணர்வுகளே பின்னர் மக்களிடமும் சென்றடைந்தது.நீங்கள் எந்தவிதமான தவறும் இல்லாமல் நேர்மையாக இந்தபடத்தை பற்றி எழுதியதுதான் இந்த வெற்றிக்கு முக்கியகாரணம்.
முதலில் தமிழ் இந்தகதையை சொல்ல வந்தபோது, இந்தபடத்தை கண்டிப்பாக அக்ஷய்தான் செய்யவேண்டும் என்று நான் சொன்னேன்.அதற்குப்பிறகு அவரிடம் ‘நீங்களே இந்தபடத்தை இயக்கப் போகிறீர்களா?’ என்று கேட்டேன்.ஆனால் அவர் ‘இந்தகதையை நான் இயக்கமுடியாது,கதையை மட்டும் கொடுக்கிறேன்’என்று சொன்னார்.அதற்குப்பிறகுதான் சுரேஷ் இந்தபடத்தில் இணைந்தார்.
சுரேஷ் இணைந்தபிறகு இந்தகதையை எப்படி ஒரு புதியமுறையில் படமாக்கலாம் என்று பல விஷயங்கள் பேசினோம்.பின்னர் விக்ரம்பிரபுவிடம் நேரில் சந்தித்து பேசவேண்டும் என்று சொன்னேன்.அவர் நேராக என் அலுவலகத்துக்கு வந்து கதையைப்பற்றி விவரமாக பேசினார்.அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.
அதேபோல் இந்தபடத்திற்கு முழுமையாக ஆதரவாக இருந்து,ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்த சிலோவுக்கும் நன்றி.அவர் ஒரு நிர்வாக தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல்,இந்தபடத்தின் ஒவ்வொரு பணியிலும் நேரடியாக பங்கேற்று உதவினார்.இசை,எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பணிகளிலும் அவர் இருந்தது இந்தபடத்திற்கு பெரியபலமாக இருந்தது.
அக்ஷயுடன் நாங்கள் அடிக்கடி விவாதிப்போம்.சிலசமயங்களில் சின்னசின்ன கருத்து வேறுபாடுகளும் இருக்கும்.ஆனால் அது எல்லாம் படத்தின் நலனுக்காகத்தான்.ஒரு நடிகராக இருந்தாலும் தயாரிப்பின் சிரமங்களை புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் அவரிடம் எப்போதும் சொல்லுவேன்.இந்தபயணத்தில் விஷ்ணுவும் பல விஷயங்களில் நடுவில் இருந்து உதவிசெய்தார்.
இன்று இந்தபடம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.இந்தபடத்தை ஏற்றுக்கொண்டு ஆதரித்த இரசிகர்களுக்கும்,தொடர்ந்து ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts