செய்திக் குறிப்புகள்

என் அப்பா ஜெய்சங்கர் சொன்னது நடந்தது – பேச்சி விழாவில் அவர் மகன் நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான படம் பேச்சி.வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில் உருவான இப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் ஆகஸ்ட் 9 அன்று சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில்…

பேச்சி வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 ஆவது நாளைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.முதல் நாளில் எங்களுக்கு 18 காட்சிகள் ஒதுக்கப்பட்டன, இரண்டாவது நாளில் சென்னையில் மட்டும் 75 ஸ்கிரீன்ஸ் எங்களுக்கு ஒதுக்கப்பட்டன. இன்று 10 நாட்களைக் கடந்து 75 சதவீத தியேட்டர்களை நாங்கள் தக்க வைத்துக்கொண்டிருக்கிறோம்.பேச்சி படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்திருக்கிறது.இதற்குக் காரணம், பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் தான். நீங்கள் கொடுத்த ஆதரவு காரணமாக இந்தப் படம் மக்களைச் சென்றடைந்திருக்கிறது, அதற்கு உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு, ரத்னவேலு அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்தேன்.அப்போது எளிதில் படம் பண்ணிவிடலாம் என்று நினைத்தேன்,ஆனால் எனக்கு வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை, பல போராட்டங்களுக்குப் பிறகே இந்த இடத்தில் நின்றிருக்கிறேன்.இந்த இடத்தில் நிற்பதற்கான வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் கோகுல், என் குருநாதர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி.எனக்கு உறுதுணையாக இருந்த கலரிஸ்ட் உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இன்று என்னுடைய ஒளிப்பதிவை குறிப்பிட்டு மக்கள் பாராட்டி வருகிறார்கள், அதற்குக் காரணம் இவர்கள் தான், இந்தத் தருணத்தில் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் பேசுகையில்….

பேச்சி படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி. பேச்சி படம் தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்த படம் என்று விமர்சனமும், பாராட்டும் கிடைத்தது. இதற்காக உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்த வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் முஜிப் சார் மற்றும் சஞ்சய் சார் ஆகியோருக்கு நன்றி. எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் கோகுல் மற்றும் இயக்குநர் இராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி என்றார்.

நடிகர் நாட்டு ராஜதுரை பேசுகையில்….

முதலில் அப்பா, அம்மாவுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி. பார்த்திபன், இராம் அண்ணா, கோகுல், விஜய் ஆகியோருக்கு நன்றி. நான் இதில் நடிக்கும் போது முக்கியமான கதாபாத்திரம் என்று தெரியாது, படம் முடிந்த பிறகு தான் அது தெரிந்தது.இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி.தரமான படங்களை மக்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டி அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு இந்தப் படமும் சான்றாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி என்றார்.

வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜெய்சங்கர் பேசுகையில்….

பேச்சி படத்தைப் பொருத்தவரை ரியல் ஹீரோ பிரஸ் தான். படம் எடுத்தது ஒரு பக்கம் இருந்தாலும், பத்திரிகையாளர்களின் எழுத்து தான் மக்களை திரையரங்கிற்குக் கொண்டு வந்தது, பத்திரிகையாளர்களுக்கு வெயிலோன் மற்றும் வெரூஸ் சார்பில் மிகப்பெரிய நன்றி. என்னுடைய அப்பா அடிக்கடி சொல்வார், நம்ம என்னதான் நடித்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர்கள் தான், அவர்கள் எழுதினால் தான் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று அவர் சொன்னது போல் இன்று பேச்சி படம் வெற்றி பெற்றதற்கு பத்திரிகைகள் தான் முதல் காரணம்.என் அப்பா மேலே இருந்து பாத்துக்கிட்டு இருக்காரு, நிச்சயம் அவர் மகிழ்ச்சியடைவார். எங்களுடைய முதல் படமே இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப்படத்தை எங்களிடம் கொண்டு வந்த சூரி மற்றும் அலிஸுக்கு நன்றி.இந்தப் படத்தை பார்த்துவிட்டு எங்களிடம் சொன்ன முஜிப், ராஜராஜன் உள்ளிட்ட எங்கள் குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தை மிக நேர்த்தியாக இயக்கிய இயக்குநர் இராமச்சந்திரன், சிரமமான இடங்களில் படப்பிடிப்பு நடந்தாலும் அதைச் சிறப்பாக செய்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி.படத்தைச் சரியான முறையில் விநியோகம் செய்த ட்ரீம் வாரியர்ஸ் குகனுக்கும் பெரிய நன்றி என்றார்.

வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முஜிப் பேசுகையில்….

இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு நன்றி. பத்து நாட்களுக்கு முன்பு பேச்சி படத்தின் சிறப்புக் காட்சியில் உங்களைச் சந்தித்தோம். உங்களுடைய எழுத்தால் தான் மக்கள் படத்தைக் கொண்டாடுகிறார்கள். நான் இந்த குறுகிய காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் குறித்து என்ன புரிந்துகொண்டேன் என்றால்,படம் பெரியது,சிறியது என்று பார்க்காமல், கண்டெண்ட் நன்றாக இருந்தால், அதற்கான அங்கீகாரத்தைக் கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையைப் பத்திரிகையாளர்கள் சிறப்பாகச் செய்கிறார்கள், அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.வெயிலோன் மற்றும் வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, கடினமாக உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விநியோகத் தலைமையாளர் குகன் பேசுகையில்….

ஆடி அமாவாசை, பிரண்ட்ஸிப் டே இந்தத் தருணத்தில் தான் பேச்சி படம் வெளியானது. பேச்சி அவளோட இடத்தை எடுத்துட்டானு உறுதியாகச் சொல்லலாம். பிரண்ட்ஸ் அனைவரும் சேர்ந்து திறமையை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்குறாங்க.படம் முடிந்து வெளியீட்டுக்கு வரும் போது அங்கும் நண்பர்கள் சேர்ந்து படத்தை வெளியிடுகிறார்கள்,அவர்கள் தான் வெரூஸ்.கோகுல் பினாய் உள்ளிட்ட வெயிலோன் டீம் மற்றும் வெரூஸ் நிறுவனத்தின் முஜிப், சஞ்சய், ராஜராஜன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி.தமிழ் சினிமாவின் உயிர் நாடியே சிறிய படங்களின் வெற்றி தான்.பேச்சி போன்ற படங்கள் அதை நிரூபிக்கும் போது சினிமாவுக்கு உயிரோட்டமாக இருக்கும்.படம் முடிந்த பிறகு வியாபார சம்மந்தமானவங்க ஈடுபடுபவார்கள்.அந்த வகையில், வியாபார ரீதியாக பேச்சி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.தமிழகத்தைக் கடந்து கர்நாடகாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான வியாபாரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.அதேபோல், இந்தி உரிமை உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் நல்லபடியாக நடந்திருக்கிறது.முஜிப் சார் சொன்னது போல் சிறிய படம், பெரிய படம் என்பது தாண்டி இரசிகர்கள் மனதில் எந்த அளவுக்கு பதிந்திருக்கிறது என்பது தான் முக்கியம். அந்த வகையில், இரசிகர்கள் மனதில் பெரிய படமாக பதிந்ததற்கு பத்திரிகை நண்பர்கள் தான் காரணம்,அவர்களுக்கு நன்றி.அதேபோல் படத்தின் இயக்குநர் இராமச்சந்திரன் சார், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத்தொகுப்பாளர் அஸ்வின் அனைவருக்கும் நன்றி.பாலசரவணன், காயத்ரி, தேவ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் படத்தின் விளம்பரப் பணிகளுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள், அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பேச்சியின் இந்த வெற்றி இன்னும் தொடரும் என்று நம்புகிறேன்.பேச்சி முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.நாங்களும் இந்தக் குழுவினருடன் இணைந்து பேச்சி இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறோம், என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் பி.இராமச்சந்திரன் பேசுகையில்…..

இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களைச் சந்தித்தோம், இப்போது மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி.பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது.பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காக தான் என்றாலும்,என்னைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்கு போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான தருணம்.படம் போட்ட பிறகு நான் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தேன்,காரணம் நீங்கள் தான் முதல் நீதிபதி,அனைத்துப் படங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்லப் போறீங்க.அந்த வகையில், என் படத்தைப் பார்த்துவிட்டு, “தம்பி நல்லா பண்ணியிருக்கீங்க” என்று தட்டிக்கொடுத்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது.உங்களால் தான் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது,அதனால் முதல் நன்றி உங்களுக்குத் தான்.
அறிமுக இயக்குநராக நான் எவ்வளவு பெரிய ஐடியாவை வைத்துக் கதை எழுதினாலும்,அதைத் திரைப்படமாகத் தயாரிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய விசயம்.பல படங்கள் தயாரித்து, சினிமா வியாபாரம் தெரிந்த ஒரு தயாரிப்பாளர் இந்தப் படம் நல்லா வரும், என்று முடிவு செய்து தயாரிக்கலாம்.ஆனால், என்னுடன் நண்பனாகப் பழகிவிட்டு,என் மீது நம்பிக்கை வைத்து,என்னுடன் தயாரிப்பாளராகப் பயணித்த கோகுல் பினாயின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.அவருக்கு எனது இரண்டாவது நன்றி.பிறகு எனது தொழில்நுட்பக் கலைஞர்கள், நான் என்ன சொல்வேன், என் சிந்தனை எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி.படத்தில் நடிகர், நடிகைகளும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். கடினமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தினாலும் எந்தவித கஷ்டத்தையும் வெளிக்காட்டாமல் நான் என்ன சொன்னாலும் அதைச் செய்த பாலசரவணன், காயத்ரி ஆகியோருக்கு நன்றி.பேச்சியாக நடித்த சீனிபாட்டி இந்த வயதிலும் மலைமீது பயணித்து நடித்துக் கொடுத்தார், அவருக்குப் பெரிய நன்றி. இன்று இரசிகர்கள் பேச்சி பாட்டி எங்கே என்று கேட்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு பேச்சி என்ற தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்தேன்,அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பாலுமகேந்திரா சார் என்னைப் பாராட்டியதோடு, அவருடன் என்னை சேர்த்துக்கொண்டு எனக்கு சினிமா சொல்லிக்கொடுத்தார்.அவருக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அதேபோல், வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு நான் வந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும்,என்னுடன் எப்போதும் துணை நின்ற என் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஜென் பேசுகையில்….

பேச்சி என்ற சிறிய படத்தை மிகப்பெரிய இடத்திற்குக் கொண்டு சென்ற மீடியாக்களுக்கு மிகப்பெரிய நன்றி.எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் இராமச்சந்திரன் சாருக்கும், கோகுல் பினாய்க்கும் நன்றி.எனக்கு இது தான் முதல் ஸ்கீரின் பிரசன்ஸ்.இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் தேவ் பேசுகையில்….

இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதற்குக் காரணம் கோகுல், இராமச்சந்திரன் சார், வெரூஸ் நிறுவனத்தார்.ஆனால், இன்றைய நிகழ்ச்சி நடப்பதற்கு பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் மக்கள் தான் காரணம்.வெற்றி விழா சந்திப்பு என்று சொன்னார்கள், ஆனால் இது வெற்றி விழா என்பதை விட நன்றி தெரிவிக்கும் விழா என்றால் தான் சரியாக இருக்கும், அதனால் உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்.இராமச்சந்திரன் சார் சொன்னது போல், நிறைய சிறப்புக் காட்சிகள் போட்டோம்.ஆனால், அவர்கள் சொன்னதில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் வரவில்லை.ஆனால், படம் வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி திரையிட்டோம்,அந்தக் காட்சியில் உங்களிடம் கிடைத்த பாராட்டுக்குப் பிறகு தான் எங்களுக்கு நம்பிக்கை வந்தது.படம் பத்து நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது,இந்த வெற்றி தொடர உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.படத்தின் விளம்பரப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து வரும் தர்மா உள்ளிட்ட பி.ஆர்.ஓ குழுவுக்கு நன்றி, எங்களுடன் சேர்ந்து புதுப் புது ஐடியா கொடுத்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் குகன் என அனைவரும் இந்தச் சிறிய குழுவுக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள், அனைவருக்கும் நன்றி என்றார்.

பேச்சி கதாபாத்திரத்தில் நடித்த சீனிபாட்டி பேசுகையில்….

அனைவருக்கும் வணக்கம்,எனக்கு 90 வயதாகிறது.நான் ஏற்காடு மலையில் சிரமப்பட்டு ஏறி நடித்தேன்.என்னுடன் அனைவரும் கஷ்டப்பட்டு நடித்தார்கள்.இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நடிப்பேன்.உங்களுடைய வாழ்த்துகள். எங்களுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும், அனைவருக்கும் நன்றி என்றார்.

பாலசரவணன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த பானு பிரியா பேசுகையில்….

பேச்சி படத்தில் என்னை நடிக்க வைத்த வெயிலோன் டீம் மற்றும் இயக்குநருக்கு நன்றி.இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன், நன்றி என்றார்.

வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இராஜராஜன் பேசுகையில்….

பத்திரிகையாளர்களுக்கு நன்றி, என் நண்பர்கள் சொன்னது போல் சிறிய கண்டெண்டாக இருந்தாலும் அதைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது பத்திரிகையாளர்கள் தான், ப்அவர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. ப்எங்களுடைய முதல் படம் இது, எங்களுடன் இணைந்து விநியோகப் பணிகளைச் சிறப்பாகச் செய்த ட்ரீம் வாரியர்ஸ் குகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.எங்கள் பி.ஆர்.ஓ தர்மா சிறப்பாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொடுத்து வருகிறார்,தொடர்ந்து இதை அவர் செய்ய வேண்டும், நன்றி என்றார்.

நடிகர் பாலசரவணன் பேசுகையில்….

பேச்சி படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருந்த போது நாங்கள் எதிர்பார்த்தது, படம் டீசண்டாக இருக்கிறது, என்று சொன்னால் போதும் என்பது தான்.ஆனால், இன்று நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது, இதற்குக் காரணம் பத்திரிகைகள் தான்.உங்கள் எழுத்துகள் மூலமாகவும், உங்கள் விமர்சனங்கள் மூலமாகவும் படத்தை மக்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்த்து உங்களுக்கும், உங்கள் விமர்சனங்கள் மூலம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த மக்களுக்கும் நன்றி. நாங்கள் பல தியேட்டர்களுக்கு சென்று பார்த்தோம், அப்போது அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல்லாக இருந்தது நாங்கள் எதிர்பார்க்காதது.இரவுக் காட்சிகள் கூட அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தது.குடும்பம் குடும்பமாகப் படத்தைப் பார்த்தார்கள், சிறியவர்கள், பெரியவர்கள் வரை என அனைத்துத் தரப்பினரும் படத்தைப் பார்த்தார்கள்,இதற்குக் காரணம் உங்களது தெளிவான விமர்சனம் தான்,அதற்கு மிகப்பெரிய நன்றி.
அதேபோல் தனிப்பட்ட முறையில் நான் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்,இந்தப் படத்தில் நான் நடித்த மாரி கதபாத்திரத்தை குறிப்பிட்டு அதில் எனது நடிப்பை அனைவரும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.இந்தப் படம் மட்டும் அல்ல, நான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் என்னைக் குறிப்பிட்டு பாராட்டி எழுதி வருகிறார்கள், அதற்காகவும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு மாரி கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநர் இராமச்சந்திரனுக்கு நன்றி.கோகுல், விஜய் என அனைவரும் நண்பர்கள்.இவர்கள் எனக்கு நண்பர்களாகக் கிடைத்தது பெரிய பாக்கியம்.இவர்கள் எனக்கு நண்பர்களாகக் கிடைப்பதற்கு இயக்குநர் அருண்குமார் தான் காரணம், அவருக்கும் நன்றி. படம் பத்தாவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஒத்துழைத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. பேச்சி இன்று மிகப்பெரிய வெற்றி படமானதற்கு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனமும் ஒரு காரணம், எஸ்.ஆர்.பிரபு சார் மற்றும் குகன் ஆகியோருக்கும் நன்றி என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கோகுல் பினாய் பேசுகையில்….

இந்த நிகழ்ச்சி பேச்சி படத்தின் வெற்றி விழாவாகவும்,நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் நடக்கிறது.ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையிடப்பட்ட பேச்சி சிறப்புக் காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது.இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதைத் தாண்டி மாஸாக படம் ரீச் ஆனால் மட்டும் தான் வெற்றி கிடைக்கும் என்ற போதில் அதை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி.படப்பிடிப்பு முடிந்த பிறகு, பின்னணி வேலைகள் தொடங்கிய போது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி.பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி,அவரை நான் இப்போது தான் பார்க்கிறேன்.படம் வெளியாகும் போது நிறைய தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், ட்ரீம் வாரியர்ஸ் குகன் சார், இந்தப் படத்திற்கு இப்படித் தான் போக வேண்டும் என்று மதிப்பீடு வைத்திருக்கிறார்கள்,அந்த மதிப்பீடு மிகச் சரியாக இருந்தது.தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் இழப்பு வரக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டமாக எங்களை அழைத்துச் சென்றார்கள்,அவர்களுக்கு நன்றி. படத்திற்கு பி.ஆர்.ஓவாக பணியாற்றிய சுரேஷ் மற்றும் தர்மா ஆகியோருக்கு நன்றி.பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ணப் போகிறோம், இதற்கு அனைத்துக்கும் நீங்கள் தான் காரணம், உங்கள் அனைவருக்கும் நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts