சினிமா செய்திகள்

காஷ்மீர் செல்கிறார் சிவகார்த்திகேயன்

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். இப்படம் தீபாவளிப்பண்டிகையையொட்டி அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதற்கடுத்து, மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கிறது.

இம்மாத இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்துவிடுவதென முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடையவில்லையாம்.

இதற்கிடையே, நவம்பர் மாத தொடக்கத்தில், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரங்கூன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதென முடிவு செய்திருக்கிறார்கள்.

சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு நவம்பர் முதல்வாரம் காஷ்மீரில் தொடங்கவிருக்கிறதாம்.

ஒரு மாதத்துக்கும் மேல் அங்கே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், மாவீரன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையாததால் அதில் சிவகார்த்திகேயன் பங்கேற்க வேண்டிவரலாம் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதனால் சிவகார்த்திகேயன் வரவில்லையெனினும் காஷ்மீரில் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் என்றும் கொஞ்சம் தாமதமாக அவர் கலந்துகொள்வார் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts