குழந்தைகள் நடித்த குழந்தைகளுக்கான படம் – சில்லுவண்டுகள் இயக்குநர் பெருமிதம்
சரண்யா 3 டி ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “சில்லு வண்டுகள்“.
இந்தப்படத்தில், சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, ட்ரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுச்சாமி ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்துக்கு ஆர்.எஸ்.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவா இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பை காளிதாசும், கலை இயக்கத்தை ஜெயகுமாரும், நடனங்களை அஜெய் காளிமுத்துவும் சண்டைப்பயிற்சியை கஜினி குபேரனும் செய்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் சுரேஷ் கே.வெங்கிடி
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படம் பற்றி இயக்குநர் சுரேஷ் கே.வெங்கிடி கூறியதாவது …
இது முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களைக் கொண்டு குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம். வாழ்கையில் அடி மட்டத்திலுருந்து, மேல் மட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் அதற்குத் தவறான வழிகளைப் பின்பற்றக் கூடாது நல்ல வழிகளை குழந்தைகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ளோம்.
இந்தப் படம் குழுந்தைகளுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும்.இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மனநிலையில் சாதி,மதம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினைகள் வராமல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், உதவி செய்யும் எண்ணமும் உள்ளவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும் என்கிற கருத்துகளை இன்றைய குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்தே சொல்லியிருக்கிறோம்.
இந்தப் படத்தின் கதையை தேனிசைத் தென்றல் தேவா அவர்களிடம் சொன்னபோது, குழந்தைகளுக்கு மிகவும் தேவையான படம் அதனால் நான் இசையமைக்கிறேன் என்றார். ஒரு கானா பாடல் உட்பட நான்கு பாடல்களை பிரம்மாதமாகத் தந்திருக்கிறார். தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் குழந்தைகளுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளார்.
இவ்வாறு கூறினார் இயக்குநர் சுரேஷ் கே.வெங்கிடி.











