Uncategorized செய்திக் குறிப்புகள்

சூர்யாவைக் காயப்படுத்தாதீர்கள் மனம் வலிக்கிறது – பாரதிராஜா வேண்டுகோள்

சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்தார் சூர்யா. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஹரியும் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இச்சிக்கல் குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்….

வணக்கம், திரைத்துறையினருக்கு..

ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக
உழைக்கிறார்கள்.

ஆனால் சமீபகாலமாக ஒருதிரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை
வார்த்தைகளில் விவரிக்க முடியாது அதில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிடத் தேவையில்லை.மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும்.

ஒருவரை ஒருவர் குற்றம் சாற்றிக்கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்தது தான் மிச்சம். எல்லாவற்றிக்கும் நாம் தான் காரணம்.இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான்.

பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் OTT. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது.வேண்டாம் என்றாலும் காலப் போக்கில்
நாமும் அந்த இடத்துக்குத் தள்ளப்படுவோம்.

இதற்கு நாம் கடந்த காலங்களில் Video piracy க்கு எதிரான போராட்டம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு
எதிரானபோராட்டம், .கேபிள்டிவிக்கு எதிரானபோராட்டம், DTH க்குஎதிரான போராட்டம்…சொல்லிக் கொண்டே போகாலம்.

இறுதியில் எல்லாவற்றையும் பின்வாசல் வழியே நாம் வரவேற்றுக் கொண்டதே நிதர்சனம்.என் பார்வையில் தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சினை தியேட்டரில் டிக்கெட்விலையைவிட Popcorn , parking விலைஅதிகம்.

ஒருசாமானிய மனிதன் எப்படிஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து குடும்பத்தோடு தியேட்டருக்கு வர முடியும்.?
அதனால்தான் தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதள அயோக்கியர்களை நோக்கி மக்கள்ஆர்வம்காட்டுகிறார்கள் நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

இந்த கொரனாகாலக் கட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இயக்குனர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள், பெப்சிதொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருமே ஐந்து மாதமாக வேலையின்றி
எவ்வளவு பொருளாதர நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்பதை அனைவரும்அறிவோம்.

இப்பொழுதுதான் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்கள், தியேட்டரை திறக்க தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. எடப்பாடிபழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கைவைத்துள்ளோம் அவர் மத்திய அரசுடன்
கலந்து ஆலோசித்துவிட்டு விரைவில் சிலகட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறக்க அனுமதி அளிப்பார்கள் என்றுநம்புகிறோம்.

ஆனால், அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்நோக்க இருக்கும் சிலப்பிரச்சினைகளை பேசி தீர்ப்பது நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.

குறிப்பாக, மக்கள்நலனில் அக்கறைகொண்டு 35 சதவிகிதம் முதல் 50 சதவீதத்துக்குள் சமூகஇடைவெளியுடன் தியேட்டரில் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசுஉத்தரவு இருக்கும் என அறிகிறோம்.

50 சதவீதம் மக்களை அனுமதித்தால் கூட ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனைவாரங்கள் திரையிடப்படும் ?
ஏற்கனேவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை, அப்படியே தியேட்டர்கிடைத்தாலும் முதல் இரண்டுவாரத்திலே தூக்கிவிடுவார்கள்.

அதே நிலையில் இன்றைய சூழ்நிலையில் படங்கள் வெளியிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடித்துப்போவார்கள். குறைந்தது ஒருதிரைப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் தியேட்டரில் திரையிடப்பட வேண்டும்.

பிறகு தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளருக்கும் டிக்கெட்விலையில் உள்ள சதவீதம் இன்றைய சூழ்நிலையில் மாற்றி அமைக்கப்படவேண்டும்.

தயாரிப்பாளர்களின் எங்களதுநீண்டநாள் கோரிக்கையான VPF (virtual print fee) தொகை திரைப்படம் வெளியிடும் சமயத்தில் பெரும் சுமையாக இருக்கிறது. இதை vpf சேவை வழங்கும் நிறுவனங்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பேசித் தீர்த்துகொண்டு எங்களுக்கான சுமையைக் கருத்தில் கொண்டு முன்வரவேண்டும்.

தயாரிப்பாளர்களின் மற்றொரு கோரிக்கையான டிக்கெட் விற்பனையை தயாரிப்பாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தியேட்டர் டிக்கெட் விற்பனையை இணைய தளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க
வேண்டும்.

எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வராமல் பல திரைப்படங்கள் முடக்கப்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்தால் தான் அடுத்தடுத்து அந்த தயாரிப்பாளர்
படம் எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெருவார்கள், நாமும் நன்றாக இருப்போம்.

ஆகையால் , தமிழ்திரைத்துறை நலிந்து கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும் , உடனடியாக தீர்க்கப்படவேண்டும். தயாரிப்பாளர்கள் வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.சிறப்பாக இருக்கும்.

பிரச்சினைகள் இப்படி இருக்க அதைவிடுத்து, பிரச்சினையை வேறுபக்கம் திருப்புவது சரியாக தோன்றவில்லை.

சமீபநாட்களில் OTT க்கு எதிரான பிரச்சினையை திரு.சூர்யா, அவருக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய் விசயமாகும்.

இதற்கு பிண்னணியில் உள்ளஅரசியலை நானும் அறிவேன் நீங்களும்அறிவீர்கள்.

திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒருசிலரே அதில் திரு.சூர்யாவும் குறிப்பிடத் தகுந்தவர்.

திரு.சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் OTT யில் வரக்கூடாது, திரையில்தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்கக்கூடிய ஒன்றுதான்.

அதேநேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில்
கொண்டுவர முன்வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில்சுதந்திரம் வேண்டும்.கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது.

என் நண்பர் திரு.சிவக்குமார் அவர்களின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். திரு.சூர்யா, திரு.கார்த்தி இருவரும் என் வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள் அவர்களின் மனித நேயப்பண்பும்,
நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்குஅறிவேன்.

இவர்கள் தமிழ்த் திரைக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.இவர்கள் நம்வீட்டுப் பிள்ளைகள்.பெருமைப்படுங்கள்.
இவர்களை மட்டுமில்லை எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள்.மனம்வலிக்கிறது.

இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம். தயாரிப்பாளர்கள் நல்லநிலையில் இருந்தால்தான், இதை நம்பி வாழும்
தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும்.

தியேட்டர்உரிமையாளர்கள்,விநியோகஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

கொரனாவால்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண OTT சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணதில் திரு.சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கக் கூடியதாகும்.

திரு.ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து சுதா கொங்கரா இயக்கத்தில் திரு.சூர்யா மிரட்டியுள்ள சூரரைபோற்று
திரைமுன்னோட்டம் பார்த்துவியந்தேன்.. இந்தத் திரைப்படம் தமிழ்த்திரைப்படவரலாற்றில் சூரரைப்போற்று
முத்திரை பதிக்கும். தமிழனைப் போற்றும்.

வாழ்த்துக்கள்
அன்புடன்
பாரதிராஜா.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts