January 17, 2026
செய்திக் குறிப்புகள்

திரைத்துறையில் கடன் இல்லாத தயாரிப்பாளர் நான்தான் – ஞானவேல்ராஜா பேச்சு

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வா வாத்தியார். இப்படத்தில், சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி,ஜி.எம்.சுந்தர்,ஷில்பா மஞ்சுநாத்,ஆனந்த்ராஜ்,கருணாகரன்,ரமேஷ் திலக்,பிஎல்தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.கலை இயக்கத்தை டி.ஆர்.கே.கிரண் கவனிக்க,படத்தொகுப்புப் பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார்.அனல் அரசு சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று பத்திரிகை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,

எனக்குப் பிடித்த இயக்குநர் நலன்.அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்கவைத்தார்.அவர் இப்படத்தில் ஆர்ட்டைரக்டராக வேலை செய்யச் சொன்னார்.இந்தக்கதை கேட்டபோது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்றுதான் தோன்றியது.நான் ரஜினி ரசிகன், என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர்.ஷூட்டிங்கில் கார்த்தியைப் பார்த்தபோது அவர் முகம் எம் ஜி ஆர் போட்டோவுடன் அப்படியே மேட்ச் ஆனது.அப்போதே இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் என நலனிடம் சொன்னேன்.கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி என்றார்.

நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசியதாவது..,

எம் ஜி ஆர் பற்றிப்பேச எனக்குத் தகுதியில்லை,பரம ரசிகர் சத்தியராஜ்சார் முன் எம் ஜி ஆர் பற்றி ஏதாவது தகவல் தப்பாகக் கூறி விடுவோம் என பயமாக உள்ளது.அவர் அவ்வளவு தீவிரமான ரசிகர்.கார்த்திக்கின் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஒரு ஐகானிக் இமேஜை மீண்டும் திரையில் கொண்டு வருவது மிக கடினமான விசயம்.எம் ஜி ஆராக நடிக்க கார்த்தி நிறைய ஹோம்ஒர்க் பண்ணியிருக்கிறார்.அவரது பாடி லாங்குவேஜு எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது.அவருக்கு என் வாழ்த்துகள்.முழுஅர்ப்பணிப்புடன் உண்மையாக உழைத்தால்தான் அந்தமாதிரி விசயங்கள்லாம் வெளிவரும்.கார்த்தி மிகச்சிறப்பாகச் செய்துள்ளார்.கிருத்தி ஷெட்டி வெல்கம் டு தமிழ் சினிமா.நான் ஆனந்தராஜனோட கிளாஸ்மேட் ஃபிலிம் இனஸ்டிட்யூட்டில்.அவருடன் நடித்தது மகிழ்ச்சி.இயக்குநர் நலன் அவரது காதலும் கடந்து போகும் படம் போலவே,இந்தப்படத்திலும் எனக்கு ஒரு நல்லரோல் கொடுத்திருக்கார்.அவருக்கு ரொம்ப நன்றி.இந்தப்படம் வெளிவருதற்குத் தயாரிப்பாளர் ஞானவேல் சார் மற்ற எல்லா நடிகர்களும் ஆர்டிஸ்ட் எல்லாருமே சேர்ந்து எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.மிகக்கஷ்டபட்டு இந்தப்படத்தைப் பொங்கலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். நிச்சயமாகச் சத்தியமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது..,

முதலில் எனக்கு மாலினி என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்காக எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.ஒருகதையை எழுதும்போது,ஒரு கேரக்டர்க்கும் ஒரு ஆர்க் இருக்கும்.ஆனால் ஒரு நடிகையா,எனக்கும் ஒரு ஆர்க் வேண்டும்,எல்லா விதமான கதாபாத்திரங்களையும் செய்யவேண்டுமென்று ஆசைப்படுவேன்.அதனால்தான் இப்படத்தில் இந்தமாதிரி ஒரு ரிஸ்க் எடுத்தேன்.அந்த ரிஸ்க் எடுக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.அதனாலதான் மாலினி இவ்வளவு அழுத்தமான ஒரு கேர்கடராக மாறியிருக்கிறாள்.இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரின் முயற்சியையும் உழைப்பையும் முதலில் பாராட்ட வேண்டும்.இந்தப்படம் பெரிய சிக்கல்களைச் சந்தித்தது.எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.இந்தமாதிரி ஒரு பெரிய மேடையில்,இந்தஅளவுக்கு இந்தப்படம் நிற்கிறது என்றால்,அதற்கு முழுக்காரணமும் அவர்கள்தான். படக்குழுவிற்கு நன்றி.எனக்கு வரும் படங்கள் ஏதாவது ஒரு காரணமாகத்தான் வரும்.இந்தப்படம் ஒரு ஸ்டார் படம்.தமிழ்நாட்டில் இது ஒரு பெரிய திருவிழா வெளியீடாக இருக்கும்,அதனால் இதுபோன்ற ஒரு படத்தைத் தேர்வு செய்வது ரொம்ப சிக்கலான விஷயம்.ஆனா எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறது.இந்தப்படம் மிக நன்றாக வந்திருக்கிறது.நீங்க எல்லாரும் இந்தப்படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி என்றார்.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,

இந்தப்படம் ஒரு நல்ல படம்.நீங்களும் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும்.நாளைக்கு இந்தப்படம் வெளியாகப்போகிறது.அதுவும் ஒரு நல்லநாளில்,ஒரு நல்லநேரத்தில் வெளியாகிறது.நான் தயாரிப்பாளர் ஞானவேல் சார்கிட்ட கூட “சார், முன்னாடி சொன்ன தேதியை விட,நாளைக்கு ரிலீஸ் ஆகுற தேதியே ரொம்ப நல்லதேதிங்க” என்று சொன்னேன்.நாளை போகி பண்டிகை.பழசுகளை எல்லாம் எரிச்சிட்டு,புதுசா ஆரம்பிக்கிறதுதான் நம்ம கலாச்சாரம்.அதனால் நாளைக்கு நம்ம மனசில் இருக்கிற எல்லா பழைய விஷயங்களையும் விட்டுவிட்டு,ஒரு புதுசா ஆரம்பிக்கிற படம்தான் ‘வா வாத்தியார்’.இன்று காலை நானும்,கார்த்தி சாரும்,சத்யராஜ் சாரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சமாதிக்கு போயிருந்தோம்.அங்க போனப்போ ஒரு சந்தோஷம்,ஒரு மன நிறைவு இருந்தது. அவர் சமாதியை நேரில் போய்ப் பார்த்து,எங்களோட கண்ணீர் அஞ்சலியை செலுத்திட்டு,இந்தப்படத்தை உங்களுக்குக் கொண்டு வர்றதுல எனக்கு ஒரு பெருமை இருக்கிறது.உங்களால முடிந்தவரை இந்தப்படத்தை அவருக்கான மரியாதையா நினைச்சு,எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு தாருங்கள்.இந்தப்படம் நன்றாக வெற்றி பெறும் என்று எங்களுக்கு முழுநம்பிக்கை இருகிறது.இந்தப்படத்தில் நடித்த கார்த்தி சார், சத்யராஜ் சார் கிட்ட இருந்துதான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார்.அவர் ஒரு சீனியர்,ஒரு அண்ணன் மாதிரி.இந்தப்படத்தோட இயக்குநர் நலன் சார் – ரொம்ப பெரிய,அனுபவம் வாய்ந்த இயக்குநர்.அவர் கதையை நேரில வந்து சொன்னபோதே “சார், நீங்க சொல்லவே வேண்டாம் நான் செய்கிறேன்”என்று உடனே சொன்னேன்.இந்தப்படம் மிக நன்றாக இருக்கும்.புரட்சித் தலைவரை மீண்டும் திரையில் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டால், இந்தப்படத்தைக் கண்டிப்பா பாருங்க. அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசியதாவது..,

எம் ஜி ஆர் பற்றிப் பேசினால் அது தனியா ஒரு கதையாக போய்விடும்.இந்தப்படத்தோட தயாரிப்பாளர் தம்பி ஞானவேல்ராஜா பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டும்.அவருடைய அப்பா ஒரு தீவிரமான எம் ஜி ஆர் ரசிகர்.அவர் 110 தடவை நாடோடி மன்னன் படம் பார்த்ததாக சொன்னார்.அவ்வளவு தீவிர ரசிகர்.அப்படிபட்ட தயாரிப்பாளருக்கு அவர் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி.கார்த்திக்கு முதல்படமே மிக சவாலான படம்.வெளிநாட்டில் படிச்சிட்டு வந்து,அந்தமாதிரி ஒரு கிராமத்துக் கதாபாத்திரம் பண்ணுறது எளிமையானது இல்லை.ஆனால் அதைவிட கஷ்டமான விஷயம் இந்த வாத்தியார் கதாபாத்திரம்.ஏனென்றால் இது ஒரு தலைவரின் பெயரோட சம்பந்தப்பட்ட கதாபாத்திரம்.ஆனால் அதைத்தாண்டி இந்தப்படத்தில் எம் ஜி ஆர் பாடிலாங்குவேஜை கொண்டுவந்து அசத்திவிட்டார். கிருத்தி ஷெட்டி,ஷில்பா,தம்பி ஆனந்த்ராஜ்,தம்பி சுந்தர் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.ஐம்பது வருடம் முன் கோவையிலிருந்து வந்தபோது,பல் பெரிதாக இருக்கிறது என சிவக்குமார் அண்ணன் சிபாரிசில் டாக்டரிடம் சென்று பல்லைக் குறைத்தேன்.ஆனால் நலன் இப்படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் வித்தியாசமாக வேண்டுமென பல் வைக்க வைத்துவிட்டார்.இப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன்.எம் ஜி ஆரின் பொங்கல் படம்போல இந்தப் பொங்கலுக்கு வா வாத்தியார் வருகிறது அனைவரும் கொண்டாடுங்கள் நன்றி என்றார்.

நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,

ஒரு பேட்டியில் நலன் சார் ஒரேவிஷயத்தை *“இது ஒரு பெஸ்டிவல் படம்.பல குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து பார்க்கிற படம்”*என்று சொன்னார்.இப்போது அது அப்படியே நடந்துள்ளது.குடும்பமா,நண்பர்களோடு, எல்லாரும் சேர்ந்து படம் பார்க்கிற மாதிரி இந்தப்படம் மாறியிருக்கிறது.அதுக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறேன்.இந்தப்படம் தாமதமானது பற்றி நிறையபேர் என்கிட்ட கேட்டார்கள்.அந்தநேரத்தில் எனக்கும் கொஞ்சம் வருத்தமாதான் இருந்தது.ஆனால் நான் ஒன்று நம்புகிறேன் – நல்ல விஷயம் நடக்கவேண்டுமானால்,அதுக்கு ஒரு சரியான நேரம் இருக்கும்.கடவுள் நம்மளை காத்திருக்க வைக்குறார்னா,அதுக்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கும்னு நம்புறேன்.அதனால இப்போ எல்லாம் சரியா நடந்ததுக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன். இந்தப்படத்தில் என்னைச் சேர்த்ததுக்காக நலன் சார்,மற்றும் ஞானவேல் சார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.நலன் சார் இந்தப்படத்திற்காக எவ்வளவு கடினமா உழைத்திருக்கார்னு நான் நேரில பார்த்திருக்கேன்.அவர் வெற்றியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.கார்த்தி சாரின் தீவிர ரசிகை நான்,ஆனால் அவரை நேரில சந்திச்ச பிறகு,நான் இன்னும் பெரிய ரசிகையா மாறிவிட்டேன். ‘வா வாத்தியார்’ கதாபாத்திரம் – பெரியதாக இருந்தாலும்,அதை அவரைவிட சிறப்பாக யாராலும் செய்யமுடியாது.கார்த்தி மனதளவில் மிகச்சிறந்த மனிதர்.அது அவரது கதாப்பாத்திரங்களிலும் பிரதிபலிக்கிறது,வா வாத்தியார் ஒரு நல்லமனசு கொண்ட கேரக்டர் அது அவருக்குள்ள இயல்பாகவே இருக்கிறது.நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி.அனைவருக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது..,

சில படங்கள் சரியாகப் போகவில்லை,அதனால் நெகடிவிட்டி,நிறையக் செய்தி பரவிவிட்டது.ஆனால் நான் இங்குதான் இருக்கிறேன். அவருக்கு அவ்வளவு கடன் இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள்.ஆனால் இண்டஸ்ட்ரியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான்தான். நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்லவேண்டும்.முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி.பல நண்பர்கள் மேடையில் ஆதரவாகப் பேசிவிட்டு,காணாமல் போய்விடுவார்கள்.ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து,என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணாவுக்கு நன்றி.கேவிஎன் அண்ணா அவர்களின் ஜனநாயகன் படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது,விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது.ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு அவர் எனக்கு பெரிய துணையாக இருந்தார்.அவருக்கு என் நன்றிகள்.பென் மூவிஸ் ஜெயந்திலால் காடா சாருக்கு நன்றி.சக்தி பிலிம்ஸ் சக்திவேலனுக்கு நன்றி.பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி.டிடிடி படம் வருகிறது. கண்ணன் ரவி சார் இப்படத்திற்கும் பெரிய உதவிகள் செய்தார் அவர் படமும் பெரிய வெற்றி பெறட்டும்.இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள்.படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள்தான்,தீயாகப் பறக்கும்.படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.நன்றி என்றார்.

நடிகர் கார்த்தி பேசியதாவது..,

கடந்த வருடம்,பெரிய செலிப்ரேஷனோட இந்தப்படத்தை வெளியிட நாங்கள் திட்டமிட்டோம்.ஆனால் அது தள்ளிப்போய்விட்டது.எனது முதல்படமும் இதுபோல தள்ளிப்போனது.அடுத்தபடம் தள்ளிப்போனது.அதனால தாமதம் என்கிறது எங்களுக்கு புதுசு இல்லை – பழகிவிட்டது.இந்த சூழ்நிலையில்,நான் ஞானவேல்ராஜா சார்கிட்ட எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும்தான் சொன்னேன்.“நீங்கள் நான் என்ன நினைக்கிறேனென்று நினைக்கவே வேண்டாம்.உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன்.நாம் போராட்டத்தில் உடலைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.
சின்னவயதில் என் அப்பா ஒவ்வொரு அரிசியிலும் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்பார். அதுபோல் சினிமாவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும்.அவர் சொன்னது அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது
ஞானவேல்ராஜா சார் சொன்ன மாதிரியே,நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்.முக்கியமாக சூர்யா அண்ணா.அவரோட சப்போர்ட் இல்லாமல் இந்தப்படம் இப்படி ரிலீஸ் ஆகி இருக்கமுடியாது.அதேமாதிரி பைனான்ஸியர்ஸ்,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், எக்ஸிபிட்டர்ஸ்,டெக்னீஷியன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி.48 மணி நேரம்,50 மணி நேரம்,தூங்காம வேலை செய்து,இந்தப்படத்தை நம்ம கைக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.எல்லா தொழிலாளர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நலன் சார் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு இயக்குநர்.ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஆர்டிஸ்ட்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்த இயக்குநர். அவர் இந்த கான்செப்ட் கொண்டு வந்தப்போ,எனக்கு ரொம்ப பயமா இருந்தது.இந்த கேரக்டருக்கு ஒரு தனி டிரெய்னிங் வேண்டும். ஆனால் நான் டிரெய்னிங் எடுத்து வரவில்லை.ஆன்செட்ல கற்றுக்கொண்டேன்,மிகவும் சின்சியராக பண்ண முயற்சி செய்துள்ளேன்.ஒவ்வொரு நாளும்,எம் ஜி ஆர் சாரோட படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்து,அவரோட க்ளோஸ்அப்ஸ் பார்த்து, “என்னோட முகத்துல அதை எப்படி கொண்டு வரலாம்?”ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.எனக்கு என்னோட முகத்தையே சரியா பார்க்க முடியாத பயம் இருந்தபோது,அவரோட முகத்தை ஸ்கிரீன்ல கொண்டு வரணும்னு நினைத்ததே ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் நலன் மாதிரி ஒரு இயக்குநர்,ஜார்ஜ் மாதிரி ஒரு கேமராமேன்,அந்த முழுகுழுவின் சப்போர்ட் இருந்ததால“இத பண்ண முடியும்”ன்னு ஒரு நம்பிக்கை வந்தது.அது படத்தில் சாத்தியமாகியுள்ளது.சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை இந்தப்படத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது.
எம் ஜி ஆர் திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார்.அதை மாடர்னாக ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக செய்தது ரொம்ப பெரிய விஷயம்.காலை அவர் சமாதிக்கு போய் கும்பிட்டு வந்தோம்.அங்க நின்னப்போ உணர்வு வேறமாதிரி இருந்தது. நாற்பது வருஷமா அவர் இல்லை.ஆனா இன்னும் அவரை நினைக்கிறோம்.இன்னும் அவரைப்பற்றி படம் எடுக்க ஆசைப்படுகிறோம். அங்கிருந்து திரும்பி வரும்போது,இந்த எல்லா விஷயங்களும் சரியாக அமைந்ததுக்கு அவரோட ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.குழந்தைகளோடு,குடும்பமா எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்ககூடிய ஒரு ஜாலியான படம் இது.இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுற,ரிலீஸ் ஆகப்போகுற எல்லாபடங்களும் மக்களைச் சந்தோஷப்படுத்தி பெரிய வெற்றி பெறவேண்டுமென்று மனசார வாழ்த்துகிறேன். நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts