சினிமா செய்திகள்

கேஜிஎஃப் படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் உடன் ஒரு சந்திப்பு

பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானார்கள் அன்புறிவ் என்கிற இரட்டையர்கள்.

மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து இதுவரை 95 க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.

அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் ‘கே ஜி எஃப் ’என்ற படத்தில் இவர்களது உழைப்பைப் பாராட்டதவர்களேயில்லை. இந்தப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கும் இவர்களைச் சந்தித்து உரையாடினோம்.

  • கே ஜி எஃப் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து…?

முதலில் அனைவருக்கும் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொருவரும் தங்களின் கனவுகளையும், இலட்சியங்களையும் அடைய எங்களின் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.

கே ஜி எஃப் படத்தின் கதையை இயக்குநர் எங்களிடம் விவரித்த போது, வித்தியாசமான கதைக் களம் என்ற ஒரு விசயம் எங்களைக் கவர்ந்தது. அதன் பிறகு தயாரிப்பாளர், ஹீரோ யஷ் சார், இயக்குநர் பிரசாந்த் நீல், கேமராமேன் புவன் என அனைவரும் அளித்த ஒத்துழைப்பால் தான் இந்த வெற்றியை எட்ட முடிந்தது.

இந்தப் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக கிட்டத்தட்ட முப்பத்தைந்து நாள் முதல் நாற்பது நாள் வரை படப்பிடிப்பு நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் உற்சாகம் அளித்துக் கொண்டேயிருந்தனர்.
திரைக்கதையில் ஆக்சன் காட்சிகள் வரும் போது இயக்குநர் எங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்ததால் எங்களின் பொறுப்பு மேலும் கூடியது.

அதற்கேற்ற வகையில் நன்றாகத் திட்டமிட்டுப் பணியாற்றினோம். ஒரு ஆக்சன் காட்சியைப் படமாக்கும் போது முதலில் நடிகர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொண்டோம். பிறகு கேமரா கோணங்களையும், அதற்குத் தேவையான விசயங்களையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றினோம். அதனால் தான் எங்களால் திட்டமிட்ட நாள்களுக்குள் அதாவது முப்பத்தைந்து நாள்களுக்குள் ஆக்சன் காட்சிகளைப் படமாக்க முடிந்தது.

  • இந்த கதை பீரியட் ஃபிலிம் என்பதால் ஆக்சன் காட்சிகளுக்காக ஏதேனும் ரெஃபரென்ஸ் எடுத்தீர்களா?

இல்லை. முழுக்க முழுக்க எங்களுடைய இமேஜினேசன் தான். கதை நிகழும் காலகட்டத்தையொட்டிய பல படங்களின் ஆக்சன் காட்சிகள் Rawவாகத்தான் இருந்தது. அதனை தற்போது காட்சிப்படுத்த இயலாது. அதனால் இயக்குநர் கொடுத்த சுதந்திரத்தையும், நாங்கள் இருவரும் எங்களுக்குள் விவாதித்தும், திரைக்கதையின் தேவையை மனதில் வைத்துத் தான் ஆக்சன் காட்சிகளை உருவாக்கினோம்.

அதே போல் ஆக்சன் காட்சிகள் Mass ஆக இருக்கவேண்டும் என்று இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதிலும் தென்னிந்திய ரசிகர்களின் விருப்பதையும் மனதில் வைத்து தான் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்தோம்.

  • பொதுவாக ஆக்சன் காட்சிகளில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்குமே.. இந்த படத்தில் எப்படி?

இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் குறைவு. கேமராமேனின் அயராத உழைப்பால் தான் இதனைச் சாத்தியப்படுத்த முடிந்தது. இந்த விசயத்தில் ஹீரோ யஷ்ஷின் ஈடுபாடு அபாரம். தான் ஒரு ஹீரோ என்பதையே மறந்து, எங்களிடம் ஆக்சன் காட்சியில் எப்படி இருக்கவேண்டும்? என்ன செய்யவேண்டும்? என்பதைக் கேட்டு கேட்டு நடிப்பார். 90 சதவீதத்திற்கும் மேல் அவரே தான் ஆக்சன் காட்சிகளில் நடித்தார்.

  • இந்தப் படத்தில் சவாலாக அமைந்த ஆக்சன் காட்சி..?

சுரங்கத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் . முதலில் இவர்களுக்கு அந்த இடத்தைப் பற்றிய பயத்தைப் போக்கினோம். அத்துடன் அவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த விசயத்தில் முழு அக்கறை எடுத்துக் கொண்டோம். இதற்கும் தயாரிப்பாளருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். அதே போல் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட ஆக்சன் சீனில் போதிய வெளிச்சம் இல்லை என்றாலும் ஒளிப்பதிவாளர் மிகவும் சிரமத்திற்கு இடையே குறைவாக லைட்டிங் செய்து அதனை பிரமிப்பாகத் திரையில் காண்பித்தார்.

  • தற்போது பணியாற்றும் படங்கள்..?

கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணியாற்றுகிறோம். மாநகரம் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்கவிருக்கும் படம் மற்றும் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்திலும் வேலை செய்கிறோம்.

  • தொடர்ந்து சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகவே இருக்கவிருக்கிறீர்களா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா?

சென்னையில் ஆக்சன் அகாடமி ஒன்றைத் தொடங்கவிருக்கிறோம். அதாவது ஆக்சனுக்கான ஸ்டூடியோ அது. இங்கு வந்து ஆக்சனுக்காக உருவாக்கிய சண்டைக் காட்சிகளை ஒத்திகை பார்க்கலாம். இதன் மூலம் படப்பிடிப்பின் போது ஏற்படும் காலவிரயம் தவிர்க்கப்படும்.

முன்கூட்டியே திட்டமிட்டு சண்டைக் காட்சிகளை அமைப்பதால், அதனை புதுமையாகவும் செயல்படுத்துவதற்கு உதவும்.
இங்கு ஒத்திகை மட்டுமில்லாமல் ஆக்சன் காட்சியில் எப்படி நடிக்கலாம். அதற்கான தொழில்நுட்பத்தையும் கற்பிக்கவிருக்கிறோம்.

அத்துடன் பாதுகாப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பது எப்படி என்பதையும் சொல்லிக் கொடுக்கவிருக்கிறோம். சண்டைக் கலைஞர்கள், சண்டைப் பயிற்சி இயக்குநர்கள், நடிகர்கள், ஆக்சன் காட்சியில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என பலருக்கும் இந்த அகாடமி பயனுள்ளதாக இருக்கும்.

அதோடு பயிற்சிப்பட்டறைகளும் நடத்தவிருக்கிறோம். ஒரு துறையில் சிறந்து விளங்கும் வெளிநாட்டுக் கலைஞர்களை அழைத்து வந்து இங்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறோம்.

உதாரணத்திற்கு ஸ்கேட்டிங் ஃபைட், சைக்கிளிங் ஃபைட். இந்தியாவைத் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, கொரியா, சீனா போன்ற நாடுகளில் எல்லாம் இது போன்ற ஆக்சன் அகாடமிகள் இருக்கின்றன. இந்தியாவிலும் இதனை தொடங்கவேண்டும் என்று எண்ணி, 2019 ஆம் ஆண்டில் சென்னையில் உருவாக்குகிறோம்.

– யுவா

Related Posts