ஷாருக்கான் அலுவலகத்திலிருந்து அழைப்பு – பரபரக்கும் அட்லி

ராஜாராணி, தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்த பிகில் படத்தை இயக்கியிருந்தார் அட்லி. 2019 அக்டோபர் 25 ஆம் தேதி பிகில் வெளியானது.
அப்படம் வெளியாகி பத்து மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் அட்லி இயக்கும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
பிகில் படம் வெளியானதும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி என்று செய்திகள் வந்தன.
அதன்பின் ஷாருக்கான் படம் உறுதியில்லை என்பதால் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தையே அட்லி இயக்கவிருக்கிறார் என்கிற பேச்சும் வந்தது.
ஆனால் இப்போது அட்லி அடுத்து ஷாருக்கான் படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டதென்கிறார்கள்.அண்மையில் ஷாருக்கின் ரெட்சில்லீஸ் நிறுவனத்திலிருந்து அட்லிக்கு அழைப்பு வந்ததாகவும், சார் படத்தை இயக்கத் தயாராகுங்கள், படப்பிடிப்புகள் தொடங்கியதும் தேதிகளை உறுதி செய்துகொள்ளலாம் என்று தகவல் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதேநேரம் திரைக்கதையில் சிற்சில மாற்றங்களையும் செய்யச் சொல்லியிருக்கிறார்களாம். இதனால் உற்சாகமாக அந்தப் பணியில் அட்லி ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.