பொன்னியின் செல்வன் 2 – திரைப்பட விமர்சனம்

ஆதித்த கரிகாலன் மீது கொலைவெறியில் இருக்கும் நந்தினி, உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்று ஐயம்கொள்ளும் நிலையிலுள்ள பொன்னியின்செல்வன் மற்றும் வந்தியத்தேவன், அதிர்ந்து நிற்கும் குந்தவை ஆகியனவற்றோடு நிறைவு பெற்றது முதல்பாகம்.
இரண்டாம் பாகத்தில் பொன்னியின்செல்வன் உயிரோடு வருகிறார், அவருக்கு முடிசூட்டப்பட்டதா? ஆதித்தகரிகாலன் உயிர் தப்பினாரா? குந்தவை மற்றும் வந்தியத்தேவன் நிலை என்ன? என்பது பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.
படம் தொடங்கும்போதே விக்ரம் ஐஸ்வர்யாராய் காதல் காட்சிகளுடன் தொடங்குகிறது. உயிருக்கே ஆபத்து எனத் தெரிந்தும் துணிவுடன் ஐஸ்வர்யாராயை விக்ரம் சந்திக்கும் காட்சி, காதல் கோபம்,வீரம், ஆற்றாமை உள்ளிட்ட பல உணர்வுகளைக் கடத்துகிற காட்சி. அந்தக்காட்சியில் தானொரு நடிப்பு ராட்சசன் என்பதை நிரூபிக்கிறார் விக்ரம்.
கார்த்தி, த்ரிஷா ஆகியோர் வரும் காட்சிகள் இளமைத்துள்ளல். இருவருமே அதை உணர்ந்து உருகி நடித்திருக்கிறார்கள்.
ஒப்பீட்டளவில், இந்தப்பாகத்திலும் ஜெயம்ரவிக்கு அதிக வேலையில்லை. ஆனால் கிடைத்த இடத்திலெல்லாம் பொறுப்பாக நடித்திருக்கிறார்.
நாசர்,பிரகாஷ்ராஜ், விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா,பார்த்திபன் உட்பட இரண்டாம் பாகத்திலும் ஏராள நடிகர்கள். எல்லோருடைய கதாபாத்திரங்களையும் பெயர்களையும் நினைவு வைத்துப் பார்ப்பது கொஞ்சம் கடினமாகவே உள்ளது.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உழைப்பு படத்தை உலகத் தரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் மெனக்கெடல் தெரிகிறது. ஒளியமைப்பில் ஜாலம் நிகழ்த்துகிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் கேட்கக் கேட்க இனிமை. பின்னணி இசையிலும் தன் முத்திரையைப் பதித்து படத்துக்குப் பலம் சேர்க்கிறார்.
இந்த பாகத்தில், படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்கிற உணர்வு வருவது பலவீனம்.
அதைத்தாண்டி, கதை படித்தவர்களை கதையில் உள்ளபடி காட்சிகள் இருக்கின்றனவா? என்கிற ஆர்வத்துடனும் கதை படிக்காதவர்களை, அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்புடனும் பார்க்க வைத்திருக்கிறார் மணிரத்னம்.
கல்கியின் நாவலில் சிற்சில மாற்றங்கள், திரைக்கலைக்கேற்ப காட்சியமைப்புகள், தேர்ந்த நடிகர்கள் அவர்களைப் பயன்படுத்திய விதம் ஆகியன வெகுமக்களைக் கவரும்.
– ரவி