விடுதலைப்புலிகள் மீதான தடையை ஏன் நீக்கவில்லை? – சீனு இராமசாமி விளக்கம்
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அந்தோனி’.
இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில்கயல் வின்சென்ட்,டிஜே பானு, நிழல்கள் ரவி,அருள்தாஸ்,சுதர்சன்,ஷாமி நடித்துள்ளனர்.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத்,கலை இயக்கம் கலா மோகன்.
தயாரிப்பு :கலைவளரி சகா.ரமணதாஸ்,சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் :விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா,விக்கி.
மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிப்ரவரி 19 அன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா,இயக்குநர் சீனுராமசாமி,லெனின் பாரதி, ‘உலக சினிமா’ பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது…..
இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன.போர் தொடங்குவதற்கு முன்பு கூட இதே சாலிகிராமத்தில் சிங்களப்படங்கள் கூட விழா நடத்தப்பட்டு வெளியாகி இருக்கின்றன.போர் தொடங்கிய பிறகு எந்த தமிழரின் நிறுவனமும் இந்தக் கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடவில்லை.டிஜிட்டல் காலத்திலாவது ஏதாவது செய்யலாமே என்கிற ஏக்கம் இருந்தது. ஜெனோசனும் சுகிர்தனும் இந்தப்பட முயற்சியில் வாய்ப்பைத் தேடிக்கொண்டு இருந்தார்கள்.ரமணன் அவர்கள் தயாரிக்க வந்தார்.பிறகு அவருடன் பலரும் சேர்ந்து தயாரிக்க முன்வந்தார்கள்.போர் நினைவுக் கதைகளைப் படமாக எடுத்தது மாறி மறுவாழ்வுக் கதைகள் எடுக்கலாம் என்று,இயக்குநர்கள் விரும்பினார்கள்.அப்படித்தான் இந்தப்படம் உருவாகி உள்ளது.பாலு மகேந்திரா சார் ஈழத்தில் எப்படியாவது ஒரு படம் எடுக்கவேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தார்.அவரது அந்தக்கனவு நனவானதில் எனக்கு மகிழ்ச்சி.இது போரைத் தாண்டிய ஒரு கதை என்பது மகிழ்ச்சி என்றார்.
தயாரிப்பாளர் ரமணதாஸ் பேசும்போது….
இலங்கை என்கிற நாட்டிலிருந்து உலகத்தரத்திற்கு ஒரு படம் கொடுக்கவேண்டும் என்பது நீண்டகாலம் ஏக்கமாக இருந்தது.சின்னச்சின்ன படைப்புகளைச் செய்து கொண்டிருந்தோம்.அன்புத்தம்பி சுகிர்தனின் கதையைக் கேட்டபோது அந்தப்படத்தை எடுத்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தோம்.பல தமிழ்நாட்டு சினிமாவைப் பார்த்தே நாங்கள் வளர்ந்து வந்திருக்கிறோம்.இப்படி இரத்தத்திலேயே கடத்தப்பட்ட சினிமாதான் தமிழ்நாட்டு சினிமா.உலகதரத்திற்கு ஒருபடம் எடுக்கவேண்டும் என்று நினைத்தோம்.தம்பி சுகிர்தன்’மழைக்கால இரவுகள்’ என்ற குறும்படத்தைக் காட்டினார்.அதைப் பார்த்து இந்தப்படத்தைத் தயாரித்து இருக்கிறோம். ஈழத்திலிருந்து பெரும் பொருட்செலவிலே வருகிற படம் என்று இதைக் கூறலாம்.தமிழ்நாடு என்பது எங்கள் இரத்தத்தோடும் சதையோடும் கலந்து இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள்,எங்கள் கதைகளை எங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்காமல் வீட்டுக்குள் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக இருக்கிறது.இப்படம் உங்களது சகஉறவுகள் எப்படிப் புதுஇடத்தில் வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாகவே இருக்கும்.இந்தப்படத்திற்கு முதலீட்டாளர்களாகப் லண்டன்,சுவிஸ்,பிரான்ஸ்,நார்வே,இலங்கை போன்று பல்வேறு நாடுகளில் இருந்து எங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இவ்வளவு பேர் சேர்ந்தா இந்தப்படத்தை எடுத்தீர்கள் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். போனவருடம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம்,இப்போது மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது.
இது பிரபஞ்சம் தந்திருக்கும் படம்.இதற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்திற்கு அவரால்தான் இதற்கான இசையைக் கொடுக்க முடியும்.
ஆமாம் இளையராஜா அவர்கள் இதற்குள் வந்த பிறகு இது உலக சினிமாவிற்கான பயணத்தில் ஒரு கல் எடுத்து வைத்த உணர்வைத் தருகிறது.
இதில் தமிழகம் மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்களும் பங்கேற்று நடித்து இருக்கிறார்கள்.
அந்தஅளவில் இது ஒரு பிரபஞ்சத்துக்கான படம் போல் அமைந்திருக்கிறது என்றார்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது….
இந்த ‘அந்தோனி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து நான் கண்கலங்கினேன்.
இந்தப்பட விழாவிற்காக என்னை அழைப்பதற்காக இந்த இளைஞர்கள் வந்து என்னிடம் பேசியபோது,எந்த ஊர் என்று கேட்டேன் இலங்கை என்றார்கள்.அந்த ஒரே காரணத்திற்காகத்தான் இந்தவிழாவிற்கு நான் வந்தேன். எனக்கு மற்றபடி இளையராஜா இசை என்பது மட்டும் தெரியும்.தயாரிப்பாளர் யார் படத்தில் மற்றவர்கள் யார் என்று தெரியாது.
அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் இப்போது படம் எடுப்பதற்காக வந்துள்ள,அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.
ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தேன்.
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பது,அவர் இசை அமைத்தார் என்பதைவிட அவர் ஆசிர்வதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.என் உள்ளுணர்வு அதைத்தான் கூறியது.இளையராஜா ஆசீர்வதித்த படம் என்றுதான் நான் இதைச் சொல்லவேண்டும்.இது ஒரு நல்லபடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒருநாடு சிதிலமடைந்த பிறகு,போர் முடிந்தபிறகு, அல்லது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும்? வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.அந்த நாடு அழிவில் இருக்கும்.போர் முடிவுக்குப் பிறகு அந்தநாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு தனியனின் இருப்பு எப்படி இருக்கும்? எல்லாமே கேள்விக்குறிதான்.எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் கேள்வி கேட்பார் இன்றிக் கைது செய்யப்படலாம். அப்படி ஓர் அச்சம் எப்போதும் இருக்கும்.அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் மறுக்கமுடியுமா?
உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் அந்தோனியை நான் பார்க்கிறேன்.அப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? விடுதலைப்புலிகள்தான் இல்லை என்று தெரிந்து விட்டதே.
புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்ற பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்?நான் இதற்கு முன்பு சொன்னேன் அல்லவா? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதற்காகத்தான்.அதனால்தான் நீக்காமல் இருக்கிறார்கள்.நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ இங்கே இதைப் பேசவில்லை.என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.
இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.அந்தக் கடலையும் அந்த அலையையும் அந்த வாழ்க்கையையும் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.
இந்தப்படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படுவார்.அந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார்.
நான் வின்சென்டிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.என்னை மன்னித்துவிடு.நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும்போது எங்காவது வெளிநாட்டில் இருப்பாய்.நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது.
வின்சென்ட் இதில் ஒரு முழுமையான நடிகனாக வெளிப்பட்டுள்ளார்.
நவயுக இலங்கை சினிமாவில் இருந்து ஒரு புதுசக்தியாக வந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது.
இந்த அந்தோனியில் ஒரு தோணி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கரை சேரும்.எப்போது படம் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக இருக்கிறது.
ஒரு திரைப்படம் என்பது மறப்பதற்கு அல்ல, நினைப்பதற்கு என்று உருவாகி உள்ளது.
எதையோ ஒன்றை மறைப்பதற்கு எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பேசினாலும் காசு,பார்த்தாலும் காசு,தாகம் வந்து தண்ணீர் குடித்தாலும் காசு,கழிப்பறை சென்றாலும் காசு.மனிதவாழ்க்கையில் எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது.
நீங்கள் பார்க்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.நீங்கள் கேட்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே அபிப்ராயங்களை உருவாக்குவதும்,அபிப்ராயங்களை அழிப்பதும்,அதை வேடிக்கை பார்ப்பதும் என்றுதான் வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய உலகம்.அப்படி இருக்கிற இன்றைய உலகத்தில் ஈழத்து மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக,போருக்குப் பின்னாலான வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கும் பரிந்தவிப்பைக் காட்டுகிற இந்த ‘அந்தோனி’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும்.
எனக்கு ‘நீர்ப்பறவை’காலகட்டம் நினைவுக்கு வந்தது.இந்தப்படத்தை ஊடகங்கள் சுமந்துகொண்டு போய் மக்களிடம் சேருங்கள்.ஒவ்வொரு சிறிய படத்திற்கும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் தான் துணை.வேறுயாருமே கிடையாது.தரமான படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் ரமணனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே அம்மா அகிலா பாலு மகேந்திரா வந்து இருப்பது மகிழ்ச்சி. அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.அவர் இங்கே வந்திருப்பது பெருமை.எனது ஒவ்வொரு படத்தையும் அவருக்குப் போட்டுக் காண்பிப்பேன். ஆனால் இடிமுழக்கத்தை மட்டும் போட்டுக் காண்பிக்கவில்லை – அது கமர்சியலாக இருப்பதால் போட்டுக்காட்டவில்லை.விழாக்களுக்காக மட்டும் படம் எடுத்தால் நம் வாழ்க்கையில் விழா என்பதே இல்லாமல் போய்விடும்.எனவே அதை கமர்சியலாக எடுத்துள்ளேன் என்று கூறினார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது…
இந்தக்கரையில் இருந்துகொண்டு அந்தக்கரையைப் பார்த்திருக்கிறோம்.நாம் எடுக்கும் படங்களில் கடலின் இந்தக்கரையைத்தான் பார்த்து இருக்கிறோம்.அந்தக் கரையைப் பார்க்கும் வகையில் இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.தங்கள் மண் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவாக்காமல் அவர்கள் தன்னிச்சையாக உருவாக்கவேண்டும்.அப்படி ஒரு தன்னிச்சையான திரைஉலகமாக இலங்கைத் தமிழ்த் திரையுலகம் உருவாகவேண்டும்.வளரவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் ராஜேஷ்வர் பேசும்போது….
நான் இங்கே இருப்பதை உணர்வுபூர்வமாக நினைக்கிறேன்.நான் பல ஆண்டுகளாகத் தமிழ்சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதே அரங்கில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த அனுபவம் கொண்டவன் நான்.
தயாரிப்பாளர் முதலீடு செய்து உதவி கொண்டிருக்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
சுகிர்தன் எடுத்த ‘மழைக்கால இரவுகள்’குறும்படம் தயாரிப்பாளருக்குப் பிடித்துப்போய் இந்தப்படம் உருவாகி இருக்கிறது.இந்தப்படத்திற்காக பல அண்ணன்கள் தங்களை அறியாமலேயே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.கேமராவை சொந்தமாக வாங்கிக் கொண்டு போய்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் நினைத்தபடியே படத்தை எடுத்திருக்கிறோம்.
வழக்கமான படமாக இல்லாமல் ஒரு நல்லபடத்தை எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை எடுத்திருக்கிறோம்.இது ஒரு கடலோரக் காதல் காவியம்.
இது இலங்கை மண் சார்ந்த ஒரு காதல்கதை.அனைத்து சமூகத்தினரும் பார்க்கவேண்டும்,ஆதரிக்க வேண்டும். அனைவரும் ஊக்கமளித்து வெற்றிபெற வைக்கவேண்டும்என்றார்.
இன்னொரு இயக்குநர்
சுகிர்தன் கிறிஸ்துராஜா பேசும்போது….
நல்லமழை பெய்து எந்தன் காடு இங்கு கனிந்தது.நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக வளர்ந்தது.கொம்புத்தேனை பார்த்து நின்றேன் கையில் வந்து விழுந்தது.கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது,என்ற மாதிரியான நிகழ்வு எனக்கு.
ஒருபடத்தில் சொல்லி இருப்பார்கள் ‘காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது’ என்று.எங்கள் ஊரில் உள்ள காதலையும் கடலையும் இந்தப்படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப்படம் எப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என்றால்,காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்தபடத்திற்கு ஒரு டிக்கெட் எடுங்கள்,யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப்படம் கொடுக்கும் என்றார்.
‘உலக சினிமா’ பாஸ்கரன் பேசும்போது….
நான் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு படங்களைப் பார்ப்பவன்.அதே உலகத்தரத்தோடு இந்த ‘அந்தோனி’ திரைப்படம் இருப்பதைப் பார்த்தேன்.
இந்த இயக்குநர்கள் இருவரும் கிருஷ்ணன் -பஞ்சு, தேவராஜ் – மோகன் போல வெற்றிகரமாக விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இந்தப்படத்தின் கதாநாயகன் வின்சென்ட் என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் போல இருந்தார்.கதாநாயகி உதிரிப்பூக்கள் அஸ்வினி போல ஒரு மோனாலிசா தன்மையுடன் இருந்தார்.இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
கதையின் நாயகனாக நடித்துள்ள ‘கயல்’ வின்சென்ட் பேசும்போது…..
நான் முதல்படமாக நடித்திருக்க வேண்டிய படம் ‘நீர்ப்பறவை’.அதில் நடிக்கமுடியாமல் போய்விட்டது. அதன்பிறகு என் குருநாதர் பிரபு சாலமன் ‘கயல்’ படத்தில் அறிமுகப்படுத்தினார்.இந்தப்படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக நடித்திருக்கிறேன்.இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப்படத்தின் நாயகி டிஜே பானு 50 இலட்சம் ரூபாய் கொடுத்து தெலுங்குப் படத்தில் அழைத்தபோது அதை மறுத்துவிட்டு இங்கே வந்திருக்கிறார்.அவர் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது
இவ்வாறு அவர் பேசினார்.











